Dhurandhar 2 Review: துரந்தர் 2 விமர்சனம்.. ஓவர் வயலென்ஸ்.. யாரு அந்த பெரிய பாய்?.. வொர்த்தா?
சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் 2 திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் வெளியானது. இந்தி வெர்ஷனில் மட்டுமே சப் டைட்டில்களுடன் படம் வெளியான நிலையில், துரந்தர் முதல் பாகத்தை போல இந்த துரந்தர் தி ரிவெஞ்ச் 2வது பாகம் மிரட்டியதா? இல்லை உருட்டியதா? என்பது தொடர்பான விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
இயக்குநர் ஆதித்யா தர் தயாரித்து இயக்க ஜியோ ஸ்டூடியோஸ் படத்தை நாடு முழுவதும் வெளியிட்டுள்ளது. சென்சார் போர்டு கடைசி நேரத்தில் பல காட்சிகளை கட் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், முதல் காட்சியில் பெரிதாக எந்தவொரு வெட்டும் இல்லாமல் ரொம்பவே வயலென்ஸ் காட்சிகளை அப்படியே அனுமதித்து வெளியிட்டனர்.

அந்த தலையை வெட்டி ஃபுட்பால் ஆடும் காட்சிகளும், கண்ணுல கன் வைத்து சுடும் காட்சி, கண்ணில் ஊசி குத்தி சாகடிக்கும் காட்சி என அத்தனை கொடூரமான கொலைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சரி படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம் வாங்க..
துரந்தர் தி ரிவெஞ்ச் கதை: ஜஸ்கிரித் சிங் (ரன்வீர் சிங்) இந்திய ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வர அவரது குடும்பத்தினரை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொடூரமாக கொலை செய்கின்றனர். சகோதரியை பலவந்தமாக பலாத்காரம் செய்து பண்ணை வீட்டில் அடைத்து வைக்க முதல் காட்சியிலேயே தனது சகோதரியை மீட்க துப்பாக்கியுடன் செல்லும் ஜஸ்கிரித் பலரையும் சுட்டு வீழ்த்தி சகோதரியை மீட்கிறார். அவர் செய்த கொலை குற்றத்திற்காக தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
அங்கே இருந்து அவரை அஜய் சான்யால் (மாதவன்) கடத்தி தன்னுடைய துரந்தர் ஆபரேஷனுக்காக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் கதையை ஆரம்பத்திலேயே காட்சிகளாக காட்டுகின்றனர். ரஹ்மான் டக்கெயிட் பலோச்சின் (அக்ஷய் கன்னா) இறுதி ஊர்வலத்தில் இருந்து முதல் பாகத்தின் தொடர்ச்சி தொடர்கிறது. அடுத்த இடத்தில் இருக்கும் நபரையும் தனது எதிரிகளையும் துவம்சம் செய்து டான் சிம்மாசனத்தில் அமர்கிறார் ஹம்சா அலி.
ஐஎஸ்ஐ தலைவரான மேஜர் இக்பாலுக்கு (அர்ஜுன் ராம்பால்) ஹம்சா அலி இந்திய ஏஜென்ட் என தெரிய வருகிறதா? இருவருக்கும் இடையே யுத்தத்தில் யார் வென்றார்கள். பாகிஸ்தானின் மிகப்பெரிய சதியை இந்திய பிரதமர் மோடி எப்படி முறியடித்தார். யாரு அந்த பெரிய பாய் என்கிற கேள்விகளுக்கான விடையாகவே துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தின் மீதிக்கதை உள்ளது.

பிளஸ்: ஆதித்யா தர் முதல் பாகத்தை விட 2வது பாகத்தில் பாகிஸ்தானையே பற்றி எரிய வைக்க வேண்டும் என பல காட்சிகளை எடுத்துள்ளார். மேலும், ரன்வீர் சிங்கிடம் அவர் வேலை வாங்கியுள்ள விதம் மலைக்க வைக்கிறது. முதல் காட்சியில் இருந்து கிளைமேக்ஸ் வரை சிங்கம் போலவே இருக்கிறார் மனுஷன். மாதவன் வரும் காட்சிகள் எல்லாம் செம கூஸ்பம்ப்ஸ் ஆக உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆரி ஆரி பாடல், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் அங்குள்ள மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கின்றனர் என்கிற வசனம் எல்லாம் மிகப்பெரிய பிளஸ் ஆக உள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் தரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆதித்யா தர் மனைவியும் பாலிவுட் நடிகையுமான யாமி கவுதம் வரும் ஒரு காட்சியில் தியேட்டரில் திடீரென விசில் சத்தம் பறக்க ஆரம்பித்து விட்டது.
மைனஸ்: படத்தில் மைனஸே இல்லையா? என்றால் துரந்தர் 2வது பாகத்தில் ஏகப்பட்ட மைனஸ்களும் உள்ளன. முக்கியமாக முதல் பாகத்தில் இருந்த அக்ஷய் கன்னா இந்த பாகத்தில் இல்லாததே படத்திற்கு பெரிய மைனஸ் தான். அதை போலவே முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்களை கவர்ந்தன. ஆனால், 2ம் பாகத்தில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ஓகே ரகமாக உள்ளன. அக்ஷய் கன்னா அளவுக்கு சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ராம்பாலை பெரிய வில்லனாக காட்டவில்லை. பண மதிப்பிழப்பு, இப்ராகிம் தாவூத் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என நினைத்து ஆதித்யா தர் வைத்தாலும் அவை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். துரந்தர் முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும் துரந்தர் 2 திரைப்படத்தை இந்தியர்கள் கொண்டாடவும் சினிமா ரசிகர்கள் கொண்டாடவும் ஏகப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளை இந்த படம் படைக்கும்!


Click it and Unblock the Notifications











