Double Occupancy Review: டபுள் ஆக்குபன்சி விமர்சனம்.. பகலில் அவள்.. இரவில் அவன்.. இந்த 'ரஜினி' ஜெயித்தாரா?
சென்னை: இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி, சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டபுள் ஆக்குபன்சி. இந்த படத்தை ஏ.சி.எஸ் அருண்குமார், குஷ்புவின் ஆவ்னி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகி உள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
படத்தின் கதையைப் பொறுத்தவரையில் இறைவன் அருளால் பிறக்கும் குழந்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் தன்மை கொண்டதாக உள்ளது. ஆனால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை, ஒருவர் எதிர்கொள்வது இன்னொருவரின் நினைவிலேயே இருக்காது. இருவருக்கும் உடல் மட்டும் தான் பொதுவானது என்பதை விட இதயம் மட்டும் தான் பொதுவானது.
இப்படி இருக்கையில் இருவருக்கும் பொதுவாக ரஜினி என்று பெயர் வைக்கிறார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்கவே பிடிக்காது. இருவரும் வளரும் வரை அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர் இவர்கள் குறித்து ஒரு சிலருக்குத் தெரிய வருகிறது. அதேபோல் இருவருக்கும் ஏற்படும் காதலுக்கும் இவர்கள் மாறுவது பிரச்னையாகிறது. மேலும் வில்லனுக்கும் தெரிந்துவிடுகிறது, அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

ஜனரஞ்சகாமான: படத்தின் கதை ஒரு ஜனரஞ்சகமான படத்திற்கு ஏற்ற வித்தியாசமான கதைதான். மேலும் ஜனரஞ்சகமான படம் என்றால் அரைத்த மாவைத்தான் மீண்டும் அரைப்பார்கள் என்ற புள்ளியில் இருந்து மொத்தமாக மாறுபட்டு இந்த கதையை அமைத்து ஒரு நேர்த்தியான படத்தைக் கொடுத்துள்ளார்கள். அதற்காகவே தனி பாராட்டுக்கள்.
படம் எப்படி இருக்கு: அதேபோல் ரஜினி என்ற இரண்டு கதாபாத்திரங்கள்தான் படத்தின் பலமே. அதனை போதுமான அளவுக்கு நேர்த்தியாக வடிவமைத்து எங்கேஜ் செய்துள்ளார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. அதிலும் ஆண் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பும் காட்சிகளும் அப்லாஸ்களை அள்ளும் அளவுக்கான நடிப்பை சந்தோஷ் வெளிப்படுத்தி உள்ளார். ஒரு ரஹ்ஹட் சாக்லேட் பாயாக கலக்குகிறார். படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது டயலாக்குகள் தான். நிதானமாகவும் நிறைவாகவும் நகரும் காட்சிகளுக்கு படத்தின் வசனங்கள் வலு சேர்க்கிறது.

ரொமான்ஸ்: பக்ஸ் பகவதி பெருமாள் தான் வில்லன் என்றாலும் அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை. கதையில் வில்லனுக்கும் பெரிய போர்ஷன் இல்லை. ஆனாலும் அவர் வருகிற காட்சிகளும் நன்றாகவே உள்ளது. இன்னொரு ரஜினி எல்லாம் கிடையவே கிடையாது, ஒரே ரஜினிதான் என்று கூறும் காட்சி அப்லாஸ். படத்தில் ரொமாண்டிக் காட்சிகள் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் ரஜினியும் பெண் ரஜினியும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போன் பயன்படுத்தும் டெக்னிக் சிறப்பு. இரண்டாம் பாதியில் வரும் ஒரு டூயட் பாடலுக்கு கிட்டத்தட்ட ஒரு நிமிட காட்சியை நேர்த்தியாக படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சாந்தகுமார்.
திருப்தி: படத்தின் காட்சிகளை தொந்தரவு செய்யாமல் அழகாக எலிவேட் செய்யும் அளவுக்கு இசையைக் கொடுத்துள்ளார் சாம் சி.எஸ். ஒரு வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதையில் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தமிழில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேப்பா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த டபுள் ஆக்குபன்சி. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற கிளைமாக்ஸ், அடுத்த பாகத்துக்கு லீட் என ஒரு கம்ப்ளீட் கமர்ஷியல் டிராமாவாக உள்ளது இந்த டபுள் ஆக்குபன்சி.
(பின் குறிப்பு: படத்தின் கதைப்படி சில காட்சிகளில் லாஜிக் இடிக்குதே என்று தோன்றலாம், லாஜிக் பார்த்தால் இந்த படமே கிடையாது.)


Click it and Unblock the Notifications