என்னமோ நடக்குது - விமர்சனம்
நடிகர்கள்: விஜய் வசந்த், மஹிமா, பிரபு, ரகுமான், சரண்யா, தம்பி ராமய்யா
இசை: பிரேம்ஜி அமரன்
ஒளிப்பதிவு: ஏ வெங்கடேஷ்
தயாரிப்பு: ட்ரிபிள் வி ரிகார்ட்ஸ்
இயக்கம்: பி ராஜபாண்டி
2 மணி நேரத்தில் யூகிக்க முடியாத முடிச்சுகள், ஷார்ப் வசனங்களுடன் ஒரு விறுவிறு ஆக்ஷன் த்ரில்லரைத் தந்ததற்காக முதலில் புது இயக்குநர் ராஜபாண்டியைப் பாராட்ட வேண்டும்.
வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை அப்படியே லவட்டி வெளியில் அபரிமிதமான வட்டிக்கு விட்டு, பின் மீண்டும் பணத்தை வங்கியிலேயே வைத்துவிடும் பலே கேடித்தனத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்னமோ நடக்குது.

பகலில் போஸ்டர் ஒட்டிக் கொண்டும், இரவில் சரக்கடித்துவிட்டு சுற்றுவதும், கோபத்தில் பெற்ற அம்மாவையே போட்டு அடிப்பதும், பின் பிரியாணி வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்வதுமாக ஒரு பொறுக்கித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விஜய் வசந்த்.
இவருக்கும் மகிமாவுக்கும் சின்ன மோதலில் தொடங்கும் அறிமுகம் காதலாகிறது. ஒரு கட்டத்தில் காதலியைக் காப்பாற்ற ரூ 5 லட்சம் பணம் தேவை. இந்தப் பணத்துக்காக அரசியல்வாதி ரஹ்மான் சட்டவிரோதமாக நடத்தும் பணக்கடத்தல் வேலையில் சேர்கிறார். ஒரு நாள் பெரும் தொகையை விஜய் வசந்த் எடுத்து வரும்போது வழியில் அந்தப் பணத்தை ஒரு கேங் பிடுங்கிக் கொண்டு ஓடுகிறது.
இந்தப் பணத்தை விஜய்தான் திருடிக் கொண்டார் என நினைத்து அவரை புரட்டியெடுக்கிறது ரஹ்மான் கோஷ்டி. விஜய் தன் காதலியைக் காப்பாற்றினாரா, ரஹ்மான் கோஷ்டியிடமிருந்து தப்பினாரா? என்பது பரபர க்ளைமாக்ஸ்.
பணத்தை அடித்துக் கொண்டு போனவர் யார் என்பதை உடைக்கும் காட்சி சூப்பர்.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெறே போராடிய விஜய் வசந்த், கடைசியில் சொந்தப் படமெடுத்து தன்னை நிரூபித்திருக்கிறார். தோற்றம், நடையுடை, பாடி லாங்குவேஜில் ஒரிஜினல் வட சென்னைப் பையனாகவே மாறியிருக்கிறார். குறிப்பாக அந்த ஸ்லாங்!
நாயகி மஹிமா பொருத்தமான தேர்வு. தன் அப்பாவுடன் அவர் பேசும் காட்சிகள் அருமை.
படத்தின் உண்மையான நாயகி சரண்யாதான். பின்னிட்டாங்க போங்க.. இதுவரை பார்த்திராத ஒரு அம்மா பாத்திரம். சரண்யா அளவுக்கு அம்மா பாத்திரங்களை இத்தனை வெரைட்டியாக எந்த நடிகையும் செய்திருப்பார்களா தெரியவில்லை.
பிரபு, ரகுமான், தம்பி ராமையா, நமோ நாராயணன் என அத்தனைப் பாத்திரங்களையும் அருமையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். சுகன்யாவும் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
படத்தின் முக்கியமான அம்சங்கள் வெங்கடேஷின் ஒளிப்பதிவும் பிரேம்ஜியின் அசத்தல் இசையும்.
இரண்டு பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையில் இளையராஜா வீட்டு வாரிசு என்பதை அழுத்தமாக நிரூபிக்கிறார் பிரேம்ஜி அமரன். ராதாகிருஷ்ணனின் வசனங்கள் இன்னொரு சுவாரஸ்யம்.
புதியவர் என்றாலும் இதுவரை யாரும் பயணிக்காத ஒரு ரூட்டைத் தேர்ந்தெடுத்து, செறிவான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போடும் வித்தை தெரிந்திருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!


Click it and Unblock the Notifications











