Game Changer Review: கேம் சேஞ்சர் விமர்சனம்.. இந்தியன் 2 மாதிரி.. இது முதல்வன் 2?.. பாவம் ராம் சரண்!
நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா
இசை: தமன்
இயக்கம்: ஷங்கர்
சென்னை: இந்தியன் 2 படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறிய அளவுக்கு ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் கண்டிப்பாக ஆகாது என நம்பலாம். ஆனால், ஷங்கர் இயக்கிய பல படங்களின் கூட்டாஞ்சோறாகவே இந்த படம் வெளியாகி இருப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. காதலன், இந்தியன், முதல்வன், சிவாஜி, பாய்ஸ், எந்திரன், ஐ என அத்தனை படங்களையும் மிக்ஸியில் அரைத்து புதிய பெயின்ட் அடித்துக் கொடுத்திருக்கிறார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் இன்னமும் பிரம்மாண்ட இயக்குநர் என்று ரசிகர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஃபிரேமிலும் குறைந்தது 1000 பேராவது இருப்பது போன்ற காட்சிகள் மற்றும் மாவட்டக் கலெக்டர் வேட்டையன் ரஜினிகாந்த் போலவும் புஷ்பா அல்லு அர்ஜுன் போலவும் அடிக்கடி ஹெலிகாப்டரிலேயே சுற்றுவது ஏன் என்று தான் தெரியவில்லை.

ராம் சரணை வைத்து ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படத்தை கொடுத்த நிலையில், அதைவிட சூப்பரான படத்தை ஷங்கர் கொடுத்து கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். கேம் சேஞ்சர் படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம் வாங்க..
கேம் சேஞ்சர் கதை: ஆந்திராவின் முதல்வரான ஒப்பிலி சத்யமூர்த்தி (ஸ்ரீகாந்த்) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் போது பாலம் இடிந்து விழுகிறது. கரப்ஷன் நிறைந்த அரசாங்கம் காரணமாக அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல். மேலும், அப்பா செத்து விட்டால் அடுத்த முதல்வர் நான் தான் என அண்ணன் முனி மாணிக்கம் (ஜெயராம்) மற்றும் தம்பி மோப்பி தேவி (எஸ்.ஜே. சூர்யா) இருவரும் போட்டி போடுகின்றனர். ஐபிஎஸ் ஆனதால் காதலியுடன் பிரேக்கப் ஏற்பட ஐஏஎஸ் கலெக்டராக மாறி வருகிறார் ஹீரோ ராம் நந்தன் (ராம் சரண்). அவருக்கும் மோப்பி தேவிக்கும் இடையே பிரச்சனை வெடிக்க ஃபிளாஷ்பேக்கில் ராம் சரண் யாரு? அவரது அப்பா யாரு? அம்மா அஞ்சலி ஏன் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். கிளைமேக்ஸில் அப்பா ராம் சரண் நினைத்தது போல மக்கள் ஆட்சி மலர்ந்ததா? என்பதுதான் இந்த கேம் சேஞ்சர் படத்தின் கதை.

ஷங்கரின் மாஷ்-அப்: ஏற்கனவே பல படங்களை சுட்டு அட்லீ ஜவான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்ததை போல நாமும் டிரை பண்ணலாம் என ஷங்கர் எடுத்த முயற்சியாகவே கேம் சேஞ்சர் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பலரது உழைப்பு தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், ஷங்கரின் ஸ்மார்ட் பிரைன் எங்கே என்று தான் தேட வேண்டியிருக்கிறது. கேம் சேஞ்சர் படத்தில் இருந்து அந்த காதல் மற்றும் காலேஜ் போர்ஷனை தூக்கிவிட்டால் படத்துக்கு எந்த சேதாரமும் இல்லை. அவரது கோபம் போர்ஷனை பார்த்தால் ரட்சகன், சூர்யாவின் சனிக்கிழமை படங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
கியாரா அத்வானி அழகாக இருக்கிறார். கவர்ச்சியை தாராளமாக காட்டுகிறார். நல்லா டான்ஸ் ஆடுகிறார். ஆனால், தீபிகா கதாபாத்திரத்தில் அவர் முழுக்க முழுக்க செயற்கையாகவே தெரிகிறார். எஸ்.ஜே. சூர்யா பாவம் சமுத்திரகனியை தொடர்ந்து ஆந்திராவில் போய் சிக்கிக் கொண்டார் என்றே தெரிகிறது. குறிப்பாக ஷங்கரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். ஜெயராமின் கதாபாத்திரத்தையும் இப்படி கேலியும் கிண்டலுமாக காமெடி என்கிற பெயரில் உருவாக்கினாரா? எதுக்கு? என்று தான் கேட்கத் தூண்டுகிறது.

அரிசியில் கலப்படம், பாலில் கலப்படம், ஒரு செகண்டில் ஷாப்பிங் மாலை பிளாஸ்ட் செய்து தரைமட்டமாக்குவது, ஒரு நாள் சிஎம் தாண்டி ஒரு மணி நேர சிஎம் என ஷங்கர் நல்லா இருக்கும் என பல கோடி செலவு செய்து எடுத்தக் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவே இல்லாதது தான் வருத்தமான விஷயமாக மாறியுள்ளது.
பிளஸ்: படத்தின் பாசிட்டிவான விஷயம் என்றால் அது ஃபிளாஷ்பேக் போர்ஷன் தான். திக்குவாய் பிரச்சனையுடன் வரும் சுப்பன்னா ராம் சரணின் நடிப்பு அட்டகாசம். அவருடைய மனைவியாக வரும் அஞ்சலி அவர் பறை அடித்துக் கொண்டு ஆட்டம் போடுவது என அந்த 20 நிமிட ஃபிளாஷ்பேக் போர்ஷன் சிறப்பு. கோபம் வந்தால் 'தொப்'பென போட்டுவிடு என ஹீரோயின் சொல்ல அதை தொடர்ந்து வரும் 'தொப்' பாடல் அதில் வரும் ஷங்கரின் விஷுவல் மேஜிக் பக்கா. முக்கால் கல்யாணம் என வரும் ஜருகண்டி பாடலும் அந்த பாடலுக்காக போடப்பட்ட தலை சுற்ற வைக்கும் அந்த செட்டும் பிரம்மாண்டத்தின் உச்சம். எஸ்.ஜே. சூர்யா வில்லத்தனத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பக்காவாக செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி டீசன்ட்டாகவும் இரண்டாம் பாதி கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் சென்று போர் அடிக்காமல் செல்வதே நிம்மதி.

மைனஸ்: அத்தனை அக்கிரமங்களையும் செய்து முதலமைச்சரான ஸ்ரீகாந்த் திடீரென ஏன் திருந்துகிறார் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் பெரிதாக காட்டப்படவில்லை. மேலும், இடைவேளை ட்விஸ்ட்டாக வரும் சீன் சிறப்பாக இருந்தாலும், அது அடுத்த நொடியே சுக்குநூறாக உடைந்து ரசிகர்களின் மூடை கெடுக்கிறது. ஃபிளாஷ்பேக் போர்ஷனில் வரும் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அந்த கதையும் ஒன்றும் புதிதாக எழுதப்படாதது மைனஸ் தான். அதே போல அஞ்சலியின் முடிவு எல்லாம் ரொம்பவே வீக்கான ரைட்டிங் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியில் வரும் கிளைமேக்ஸிலும் எந்த கூஸ்பம்ப்ஸ் விஷயமும் இல்லாமல் ஷங்கர் நடத்தும் அரசியல் பாடம் எல்லாம் லெமூரியா கண்டத்தோடு அவுட்டேட்டட் ஆகி அழிந்துவிட்டது. படத்தில் குறைகள் இருந்தாலும் ராம் சரண் ஒட்டுமொத்த படத்தையும் காப்பாற்ற போட்டிருக்கும் மெனக்கெடலுக்காகவும் பிரம்மாண்ட காட்சிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம். இந்தியன் 2 மாதிரி முதல்வன் 2 எடுக்க முயற்சி செய்திருக்கிறார்!


Click it and Unblock the Notifications











