Gandhi Kannadi Review: 'காந்தி கண்ணாடி' விமர்சனம்.. ஹீரோ கேபிஒய் பாலாவா? பாலாஜி சக்திவேலா?
சென்னை: இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோ பாலாவாக அறிமுகமாகியுள்ள படம் தான் காந்தி கண்ணாடி. செப்டம்பர் 5ம் தேதியான இன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் பல படங்கள் வெளியாகின்றன. தமிழில் சிவகார்த்திகேயனின் மதராஸி, வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படங்களுடன் முதல் படத்திலேயே பாலா தில்லாக மோதுகிறார்.
படத்தில் பாலா ஹீரோ கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும், முழுக்க ஹீரோயிசம் மற்றும் நல்லவன் வேஷம் எல்லாம் போட்டு நடிக்காமல், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது ரொம்பவே சிறப்பாக உள்ளது.

காந்தி கண்ணாடி படத்தின் டைட்டிலில் இருந்தே படத்தின் நாயகனாக ரசிகர்களை ஈர்க்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். ஆரம்பத்தில் இருந்தே நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள பாலா கடைசியில் ஹீரோவாக மாறினாரா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
காந்தி கண்ணாடி கதை: ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துக்கொண்டு தினமும் தனது மனைவி அர்ச்சனா சமைத்துக் கொடுக்கும் தயிர் சாதத்தையும் புளி சாதத்தையும் சூப்பர் என பாராட்டும் காதல் உள்ள கணவர் கதாபாத்திரத்தில் காதல் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் வாழ்ந்திருக்கிறார். தனது மனைவி அர்ச்சனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அவர், ஒருமுறை 60ம் திருமணம் ஒன்றுக்கு செல்லும் போது, அந்த திருமணத்தை பார்த்த அர்ச்சனாவுக்குத் தங்கள் 60-வது திருமணத்தை கொண்டாட வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஆனால், குழந்தைகள் இல்லாத நிலையில், எப்படி நடத்துவது என்ற குழப்பத்தில் இருக்கும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணத்தாசை பிடித்த பாலாவை சந்திக்கிறார். பாலாஜி சக்திவேலை ஏமாற்றி பணத்தை கறக்க நினைக்கும் பாலாவின் பேராசை ஜெயித்ததா? அல்லது மனைவி விருப்பப்பட்ட மாதிரி 60ம் கல்யாணத்தை கிராண்டாக பாலாஜி சக்திவேல் நடத்தினாரா? இல்லையா? என்பது தான் இந்த காந்தி கண்ணாடி படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: அதிக பணம் செலவாகும் என்கிற பாலாவின் கோரிக்கையை நிறைவேற்ற, பாலாஜி சக்திவேல் தனது சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்று பணத்தை திரட்டுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக, மோடி அறிவிக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வருகிறது. இதனால் பாலாஜி சக்திவேல் சேமித்திருந்த பணம் அனைத்தும் செல்லாததாகி விடுகிறது. பாலாவுக்கும் இது பேரிடியாக விழுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை இயக்குநர் ஷெரிஃப் அழகாக செதுக்கி ரசிகர்களை பார்க்க வைக்கிறார்.
நடிகர் பாலா, தனது முதல் படத்திலேயே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக, அவரது மனமாற்றம் மற்றும் திருந்தும் காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி தனது அழகாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார்.

பிளஸ்: பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இருவரும் தான் இந்த படத்துக்கு பெரிய பலமே குறிப்பாக, "அதான் நீ இருக்கேல..." என்று பாலாஜி சக்திவேல் ஒவ்வொரு முறையும் அர்ச்சனாவிடம் சொல்லும் காட்சி அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஜீவா சுப்ரமணியம், ஆராத்யா, ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் உள்ளிட்ட துணை நடிகர்களின் நடிப்பிலும் எந்தக் குறையும் இல்லை. பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்றிணைந்துள்ளன. படத்தின் இறுதியில் ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் குரல் உணர்வுகளைத் தூண்டுவது பெரிய பலமாக உள்ளது.
மைனஸ்: இருப்பினும், சில காட்சிகளை முன்கூட்டியே கணிக்க முடிவது படத்தின் ஒரு பலவீனம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குநர் ஷெரீப், வயதான தம்பதிகளின் காதல் வாழ்க்கையை அழகாகச் சொல்லி, இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு பாடத்தையும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனதை கனமாக்குகிறது. முதல் பாதி இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் படம் பாலாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும். ஆனாலும், சாகுற வயசுல காதலிக்கக் கூடாதா? என்றும் காதல் என்பது கணவன் - மனைவி இடையே கடைசி வரை இருக்க வேண்டும் என்கிற மெசேஜை கடத்திய விதத்தில் இந்த காந்தி கண்ணாடி பார்க்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications











