ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படம் எப்படி இருக்கு? படத்தின் கதை என்ன?
நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, நடராஜன், ஹரிஷ் உத்தமன்
இசை: ஹிப் ஹாப் ஆதி
இயக்கம்: ஹிப் ஹாப் ஆதி
சென்னை: இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருந்த ஹிப் ஹாப் ஆதி கடைசி உலகப் போர் படத்தை இயக்கி இவரே தயாரித்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். நேற்று தியேட்டரில் வெளியான இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
இப்படத்தில், ஹிப் ஹாப் ஆதி,நடராஜன் நட்டி, ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம் புலி, நாசர், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களுக்கு பிடித்தமான படத்தில் நடித்து கலைஞர்கள் மத்தியில் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி, முதல் முறையாக சண்டை, குண்டு, போர் என ஒரு சீரியசான கதையில் நடித்துள்ளார்.

கடைசி உலகப் போர் படத்தின் கதை என்னவென்றால், ஐநா சபையில் இருந்து சீனா, ரஷ்யா வெளியேறி ஐநா சபைக்கு மாற்றாக ரிப்பப்ளிக் என்கிற ஒரு அமைப்பை கொண்டு வருகிறார்கள். இதில் 72 நாடுகள் சேர்ந்துவிட்ட நிலையில், இந்தியா அந்த அமைப்பில் சேரவில்லை. இதனால், கோவப்பட்ட ரிப்பப்ளிக் அமைப்பினர் இந்தியா மீது பல வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி இந்தியாவை மொத்தமாக அழிக்க திட்டம் போடுகின்றனர்.
கடைசி உலகப்போர்: இப்படி கதை ஒருபக்கம் இருக்க, தமிழக முதலமைச்சரின் மச்சான் நட்டியின் பல லட்சம் கோடி பணம் ஒரு கண்டெய்னரில் சிக்கிக் கொள்கிறது. இதை வெளியில் கொண்டுவர நடராஜ்ஒரு மிகப்பெரிய கலவரத்தை உருவாக்குகிறார். முதலில் சாதாரணமாக ஆரம்பமான கலவரம் நாடே அழிந்து போகும் அளவிற்கு விஸ்வரூபமாக தமிழக முழுவதும் ராணுவத்தின் காட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. இந்த நேரத்தில் ரிப்பப்ளிக் அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்துகிறது. இதில், சென்னை முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. அதற்கு பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.

சொதப்பல்: இதில் ஹிப் ஹாப் ஆதி முதலச்சரின் மகளை காதலித்து வருகிறார். அவருக்கும் கதைக்கும் தொடர்பு இல்லாமல் கதை நகர்கிறது. திடீரென இந்தியா மீது ரிப்பப்ளிக் ஏன் குண்டு போட்டாங்க என்பதற்கு அழுத்தமான காரணத்தை சொல்லவே இல்லை. ஆதியே திரைக்கதை எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்து இருக்கிறார். இப்படம் ஒரு புதுவிதமான கதைக்களத்தோடு இருந்தாலும், ஸ்கிரீன் ப்ளே சரியாக இல்லாததால், பல இடத்தில் என்ன கதை என்றே புரியாமல் சொதப்பலாக உள்ளது. அதே போல நடிகை ஆத்மிகாவும் படத்திற்கு நிச்சயம் ஹீரோயின் வேண்டும் என்பதற்கான வந்து செல்கிறார்.
பிளஸ்: இந்த படத்தில் நட்டி தான் கிங் மேக்கராக இருக்கிறார். ஆதி ஹீரோ என்று சொல்வதை விட நட்டி, தான் ஹீரோவாக இறங்கி சம்பவம் செய்து இருக்கிறார். அதே போல முனிஷ் காந்த், சிங்கம் புலி, ஹரீஷ் உத்தமன் என அனைவரும் அவர் அவர்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஒரு பிரச்சனை என்று வரும் போது மட்டும் ஒன்று சேரும் நாம், எப்போதும் ஒன்றாக இருந்தால், யாரும் எம்மை எதிர்க்க முடியாது என்கிற ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த நல்ல விஷயத்தை மக்களிடம் சரியாக கொண்டு சொல்ல இயக்குநர் தவறிவிட்டார். மொத்தத்தில் கடைசி உலகப்போர் ஒரு சுமாரான படம் தான்.


Click it and Unblock the Notifications











