ஹிட் 3 விமர்சனம்: நானியின் ஹிட் 3 படம் எப்படி இருக்கு?.. ஆக்ஷன் அவதாரம் ஓர்க் அவுட் ஆனதா?
சென்னை: நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள ஹிட்: தி தேர்ட் கேஸ் தெலுங்கு திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஹிட் கேஸ் படவரிசையில் வெளியாகும் 3ஆவது படமாகும். இயக்குநர் ஷைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தை நானி தயாரித்திருக்கிறார். கோர்ட் படத்திற்கு பிறகு தனது மொத்த பணத்தையும் இப்படத்தில் செலவழித்திருப்பதாக நானி தெரிவித்திருக்கிறார். ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்ததா, சொதப்பியதா என்பதை இங்கு காணலாம்.
தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஹிட் 3. இப்படம் நானி நடித்திருக்கும் வழக்கமான காதல் கதையோ. மென்மையாக ரசிகர்களை பரவசப்படுத்தும் உணர்வுப்பூர்வமான படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி இருக்கிறது. படம் முழுக்க ரத்தக்களறியாக வன்முறை நிறைந்த படமாக இருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகள் என தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு சண்டைக்காட்சியும் ஒரு க்ளைமேக்ஸ் போல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹிட் தி தேர்ட் கேஸ் கதை: எஸ்.பி. ஆன அர்ஜுன் சர்க்கார் (நானி) விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை கேஸை விசாரிக்கிறார். ஆனால், அந்த கொலையை அவரேதான் செய்திருக்கிறார். அதேபோல் இன்னொரு கொலையை அர்ஜூன் (நானி) செய்யும்போது சக பெண் போலீஸ் அவரை தடுக்க முயற்சிக்கிறார். ஆனாலும் பெண் போலீசிடம் சண்டையிட்டு மிக கொடூரமாக தலைகீழாக தொங்கவிட்டு ஒருவரை நானி கொலை செய்கிறார். அதன் பின்னர், வரும் பிளாஷ்பேக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. விசாகப்பட்டினத்திற்கு வருவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் வேலை பார்க்கும் அர்ஜூன் சர்க்கார் அங்கே ஒரு சீரியல் கில்லரை கைது செய்கிறார். அந்த கொலையாளியிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் பீகாரில் இதேபோன்ற ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து விசாரிக்கிறார். ஜம்மு காஷ்மீரில் இரண்டு சீரியல் கில்லர்களிடம் ஒரே நேரத்தில் நடத்தப்படும் விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகிறது. சிடிகே என்ற பெயரில் ஒரு கும்பல் டார்க் வெப்சைட் மூலமாக இந்த சீரியல் கொலைகளை தொடர்கின்றனர். இதன் பின்னணி என்ன? சிடிகே கூட்டத்தின் தலைவன் யார் என்பதை கண்டறிவது தான் மீதிக்கதை.
ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட கொலை செய்து வீடியோவாக காட்டும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. உண்மையில் இதுபோன்ற காட்சிகளை பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என்றுதான் தோன்றுகிறது. அர்ஜூன் சர்க்காராக வரும் நானி வரும் காட்சிகளும் அதற்கேத்த பில்டப்புகளும் ரசிக்க வைக்கின்றன. ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேர்மையும் கோபமும் அதிகம் இருக்கும். அதை நானி கட்சிதமாக செய்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் நானியை பார்த்து ஒரு பெண் அதிகாரி ஒரு இந்து போலீஸை தாக்கியதற்காக 5 முஸ்லீம்களை அடித்து கொலை செய்ய முயற்சிப்பது சரியா என கேட்கிறார். அதற்கு இங்கு இந்து, முஸ்லீம் பேதம் இல்லை. நான் ஒரு போலீஸ் என சொல்லும் காட்சிகள் கைதட்டல்களை பெறுகின்றன. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்குறிய இடங்களை தேடி தேடி இயக்குநர் கதைகளை நகர்த்தி சென்றிருக்கிறார். ்பிளஸ்: ஒரு சைக்கோ கொலையாளி அவனை துரத்தும் போலீஸ் என வழக்கமான பார்முலா என்பதை போல் ஆரம்பத்தில் கதை நகர்கிறது. இதுவரை இல்லாத புதிய கோணத்தில் குற்றங்களை சேர்த்து அதற்கான காரணங்களை உருவாக்கி அதன் பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி ஏன் கொலை செய்கிறான் என்ற தேடலை உருவாக்கி பார்வையாளர்களை கட்டி போட்ட விதம் இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு நடுவில் நானி்க்கும் - சமுத்திரக்கனிக்குமான அப்பா மகன் உறவு ரசிக்க வைக்கிறது. மிர்துளாவாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் - நானிக்குமான காதல், கெமிஸ்ட்ரி சுமாராக இருந்தாலும் ஓகே தான்.
ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தெலுங்கில் இது முதல் படம் என்பதால் கவர்ச்சி காட்ட முயற்சித்திருக்கிறார்.

பின்னணி இசை: ஹிட் 3 படத்திற்கு மற்றொரு ஹீரோ யார் என்றால் இசையமைப்பாளர் மிக்கி ஜே. இது மாதிரியான க்ரைம் சீரியல் கில்லர் படங்களுக்கு இசை மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருக்கும். அதனை கட்சிதமாக செய்து முடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் இந்த சத்தம் தேவையா என்று கேட்க தோன்றுகிறது. க்ளைமேக்ஸ் காட்சிகளில் ரத்தம் சொட்ட சொட்ட நானியின் ஹீரோயிஷத்திற்கு ஏற்ற பின்னணி இசையில் ஷேர் போட்டு அமர்ந்திருக்கிறார் மிக்கி. அதேபோன்று படத்திற்கு இன்னொரு அழைக கொடுத்திருப்பது ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ். ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேஷம், பீகார் போன்ற இடங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
சண்டை காட்சி: ஹிட் 3 மற்ற இரண்டு படங்களை காட்டிலும் படம் முழுக்க சீரியஸ் ஆன கதை. இக்கதையில் இறுக்கமான முகத்துடன் வந்து செல்லும் நானி கொலையாளிகளை விசாரிக்கும் காட்சிகளை கண்களை மூடிக்கொண்டு பார்க்க வைக்கிறது. சில இடங்களில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்று அட சொல்ல வைக்கிறது. க்ளைமேக்ஸ் வெறித்தனமான சண்டைக்காட்சிகளை பார்க்கும் நானியா இது என்று தான் கேட்க தோன்றுகிறது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சண்டைக்காட்சிகளில் பின்னி பெடலெடுத்து நானி ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்.

மைனஸ்: ஒரு படத்திற்கு நல்ல ஒன்லைன் கிடைத்திருக்கிறது. இதை அப்படியே திரைக்கதையாக மாற்றுவதில் இயக்குநருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். படத்திற்கான லொகேஷனை தேர்ந்தெடுத்த விதம் பாராட்டலாம். ஆனால், படத்திற்கு அதுவே சில நேரங்களில் மைனஸ் ஆக மாறியிருக்கிறது. இப்படத்தில் சீரியல் கொலைகாரனாக வரும் பிரதீக் பப்பர் பெரிதாக ஈர்க்காமல் போனது கதையின் பலவீனம். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சோதிக்க தொடங்குகிறது. சிடிகே என்ற சீரியல் கில்லர் கும்பலை கண்டுபிடிக்க அவர்களின் இடத்திற்கே செல்லும் போலீஸின் திறமை பாராட்டத்தக்கது. ஆனால், ஒரு இடத்தில் கூடவா வில்லனுக்கு சந்தேகம் வரவில்லை. ஸ்கெட்ச் போட்டு சீரியல் கொலைகளை செய்யும் வில்லனுக்கு இந்த சின்ன விசயத்தில் கோட்டை விடுவானா என்றே யோசிக்க வைக்கிறது. பலவீனமான வில்லன், ஒரே இடத்தில் 150 சீரியல் கில்லர்களை கொல்லும் ஹீரோயிஷம் ஓவராக இருக்கிறது. அதிக ரத்தம் ஓவர் டோஸை தருகிறது. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். வழக்கம்போல் இப்படத்தில் ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இல்லை. இரண்டாம் பாதியில் கதையோடு நகர வேண்டும் என்பதற்காக போலீஸ் வேடம் கொடுத்து இயக்குநர் வைத்த ட்விஸ்ட் கொஞ்சம் கூட அதிர்வை தராதது ஏமாற்றம்.
கார்த்தி என்ட்ரி: படம் முடிந்தது என்று நினைத்து வீட்டிற்கு செல்லும் நேரத்தில் ஹிட் 4 படத்திற்கான கேஸை ஓபன் செய்திருக்கிறார் இயக்குநர் ஷைலேஷ் கொலனு. இந்த முறை நடிகர் கார்த்தியை வைத்து தமிழ் நாட்டில் மணல் கொள்ளையை வைத்து தொடங்கியிருக்கிறார். மணலுக்குள் வைத்து பணத்தை பதுக்கி வரும் கும்பலை தடுத்து போலீஸ் அதிகாரியாக வரும் கார்த்தி ஐபிஎல் மேட்சை பார்த்து கொண்ட மிரட்டுகிறார். ஹிட் 4 படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











