Indian 2 Negative Review: இருந்தாலும் ஷங்கர் இப்படி பண்ணியிருக்கக் கூடாது.. பாவம் கமல்!
சென்னை: இந்தியன் படத்துக்குப் பிறகு எந்திரன் படத்திலேயே ஷங்கருடன் கமல்ஹாசன் இணைய வேண்டியது. ஆனால், சில நாட்கள் நடித்து விட்டு, ரோபோ படத்தில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். கால்ஷீட் பிரச்சனை தான் காரணம் என சமீபத்தில் பேசியிருந்தார். ஆனால், பல ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்து படம் பண்ணப் போகின்றனர் என்றதுமே எந்திரன், 2.0 படத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தியன் 2 படம் என்கிற அறிவிப்பே சற்று அதிருப்தியை கொடுத்தது.
அப்பவே அவர் தாத்தா 20 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியன் 2 என்றால் அவருடைய வயது என்னவாக இருக்கும் என பேச்சுக்கள் கிளம்பின. 2020ம் ஆண்டு நடைபெற்ற கிரேன் விபத்து மறுபடியும் இந்தியன் 2 படத்துக்கு பெரிய தலைவலியாக முடிந்து விட்டது.

எப்படியாவது 2 பாகங்களாக இயக்கி ஊழலுக்கு எதிரான இந்தியன் படத்திலேயே இந்தியன் 2 மற்றும் 3 என மெகா ஊழலை செய்து மக்களிடம் இருந்து காசு வாங்கி கல்லா கட்டி விடலாம் என நினைத்த ஷங்கருக்கு இந்தியன் 2 படம் டிசாஸ்டர் என்கிற விமர்சனங்கள் ஒலிக்கும் போது தான் ஊழல் எவ்வளவு பெரிய குற்றம் என்பது தெரிந்திருக்கும்.
எதுக்கு இந்தியன் 2?: எந்திரன் படத்தை 2.0 என செய்து ஏற்கனவே ஷங்கர் அடிவாங்கிய நிலையில், எதுக்கு இந்தியன் 2 படத்தை எடுத்தார் என்கிற கேள்வி தான் படம் பார்த்த அனைவருக்குமே எழுகிறது. சேனாபதியின் மனைவி சுகன்யா இறந்திருக்கலாம். ஆனால், சந்துருவை காதலித்தவர்கள் எல்லாம் மீண்டும் இந்தியன் இந்தியாவுக்கு திரும்பி வந்ததும் ஏன் சந்திக்கவில்லை. அவர்களை காட்டவில்லை என ஏகப்பட்ட கேள்விகள் திரைக்கதையிலேயே தோன்றுகிறது.
எல்லாமே சொதப்பல்: படத்தின் ஆரம்பத்தில் கமல்ஹாசனை காட்டுவதில் இருந்து, அவர் இந்தியாவுக்கு வரும் போதே அவர் தான் சேனாபதி என பாபி சிம்ஹா கண்டுபிடிப்பதும் அவரை கைது செய்ய போராடுவதும், ஒவ்வொரு முறை கில்லி பட ரெஃபரன்ஸ் போல சேனாபதி எஸ்கேப் ஆவதும் என லாஜிக் இல்லா மேஜிக்காகவே நகர்கிறது.
வர்மக் கலையை கருட புராணம் ரேஞ்சுக்கு கொண்டு சென்று ஷங்கர் வில்லன்களை பாட வைப்பதும், தூங்க வைப்பதும், குதிரை போல ஓட வைப்பதும் என ரசிகர்களை தியேட்டரை விட்டு ஓட வைத்து விட்டார். இன்னொரு பக்கம் சித்தார்த்தையும் சமுத்திரகனியையும் வைத்து உருவாக்கியுள்ள படம் தனிப்படம் போலவே தெரிகிறது. ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் ஏன் என்றே தெரியவில்லை. நல்லவேளை “நீலோற்பம்” பாடலை கட் செய்து விட்டனர். அல்லது, இந்தியன் 3ல் வருமா? என்றும் தெரியவில்லை.
பாவம் கமல்: இந்தியன் தாத்தா தனக்கான டீமை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்களை வைத்து அனைத்தையும் செய்கிறார் என ஆவேஷம் படத்தில் காட்டுவதை போல காட்டியிருந்தால் கூட சிறப்பாக அமைந்திருக்கும். இந்தியன் தாத்தா ஒன் மேன் ஆர்மியாக அனைத்தையும் செய்வதும், அனைத்து இடங்களுக்கு செல்வதும் என ஷங்கர் இந்தியன் தாத்தாவை சூப்பர் ஹீரோவாக ஆக்க முயற்சித்து இருப்பது தெளிவான திரைக்கதை மற்றும் காட்சிகளுடன் உருவாக்கப்படவில்லை என்பது தான் ரசிகர்களின் ஆதங்கம்.
இந்தியன் படத்தை விட இந்தியன் 2 நல்லா இருக்கும் என நம்பிக்கையுடன் அத்தனை மணி நேரம் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டு நம்பிக்கையுடன் நடித்துக் கொடுத்த கமலையும் ரசிகர்களையும் ஷங்கர் ஏமாற்றி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்தியன் 2 படமே இப்படி இருக்கும் நிலையில், இந்தியன் 3 படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது கூட ரசிகர்களுக்கு எந்தவொரு உணர்வும் இன்றி இப்போ இதையெல்லாம் எதுக்கு இந்தியன் தாத்தா சொல்றாரு என்கிற கேள்வி தான் எழுகிறது.


Click it and Unblock the Notifications











