J Baby Review: ”ஜே பேபி” விமர்சனம்.. ஊர்வசி எனும் நடிப்பு ராட்சசி.. சுரேஷ் மாரி சாதித்தாரா?
நடிகர்கள்: ஊர்வசி, தினேஷ், மாறன்
இசை: டோனி பிரிட்டோ
இயக்கம்: சுரேஷ் மாரி
சென்னை: ”முந்தானை முடிச்சு” படத்தில் ஆரம்பித்து ”மூக்குத்தி அம்மன்” படம் வரை பல படங்களில் தனது வெரைட்டியான நடிப்பை காட்டி அசத்திய ஊர்வசியை கதையின் நாயகியாக வைத்து இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கி உள்ள ஜே. பேபி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

நல்ல திரைக்கதையை கொண்ட வித்தியாசமான படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பெரிய ஹீரோக்கள் நடித்த தமிழ் படங்களை மட்டும் தான் தியேட்டரில் பார்ப்போம் என ரசிகர்கள் பல படங்களை நல்லா இருக்கா இல்லையா என்று கூட பார்க்காமல் விட்டு விடுகின்றனர்.
”மஞ்சும்மெல் பாய்ஸ்” போலவே ”ஜே. பேபி” படமும் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான படம் தான். இந்த படம் எந்தளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை கவர்ந்ததா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

ஜே. பேபி கதை: மனநலம் சற்றே பாதிக்கப்பட்ட பேபி (ஊர்வசி) தன்னால் குடும்பத்தில் யாருக்கும் தொல்லை வந்து விடக் கூடாது என நினைத்து வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அம்மா காணாமல் போய் விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளும் மகன்களான செல்வமும் சங்கரும் (தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன்) அம்மாவை தேட தொடங்குகின்றனர். காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கின்றனர். பின்னர், கொல்கத்தாவில் பேபி இருக்கிறார் என்கிற தகவல் மகன்களுக்கு தெரிய வர அம்மாவை தேடிக் கண்டுபிடிக்க அண்ணனும் தம்பியும் கொல்கத்தாவுக்கு செல்வதும் அங்கே அம்மாவை தேடி கண்டு பிடித்தார்களா? இல்லையா என்பது தான் இந்த ஜே. பேபி படத்தின் கதை. இது உண்மைச் சம்பவம் என்பதால், கொல்கத்தாவில் பேபியை தேடிக் கண்டுபிடிக்க உதவிய நபரும் இந்த படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
நடிப்பு எப்படி?: நடிப்பு ராட்சசி ஊர்வசியின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். காமெடி கதாபாத்திரத்தில் சிரித்துக் கொண்டே நடிக்கவும் தெரியும் சூரரைப் போற்று படத்தில் வரும் அம்மா போல சென்டிமென்ட்டை டச் செய்து உருக வைக்கவும் தெரியும். பேபி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கும் நடிப்பு மேலும், ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. சில இடங்களில் கண்களை குளமாக்கி விடுகின்றன. ஊர்வசியை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் சிறப்பான நடிப்பை எப்போதும் போல வித்தியாசமாகவும் அந்த கதாபாத்திரத்திற்கு எந்தளவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு உண்மையாக நடித்துள்ளார். லொள்ளு சபா மாறன் சந்தானம் படங்களில் எதுகை மோனை கமெடி அடித்து வருபவர் தானே என நினைத்த ரசிகர்களுக்கு அந்த எண்ணத்தையே மாற்றி வேறு ஒருவராக இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தி உள்ள நடிப்பு நிச்சயம் பாராட்டுக்களை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
பிளஸ்: மனநலம் சற்றே பாதிக்கப்பட்ட அம்மாவை அப்படியே தொலைந்து போகிறாள் என விட்டு விடாமல், குடும்பத்தில் எத்தனை வறுமையும் கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருந்தாலும், அம்மாடா என்கிற ஒற்றை காரணத்துக்காக அவரை தேடி கண்டுபிடித்த மகன்களின் உண்மை சம்பவத்தை தழுவி இப்படியொரு தரமான படத்தை மக்களுக்கு காட்டியே தீர வேண்டும் என போராடிய இயக்குநர் சுரேஷ் மாரியின் உழைப்பு படத்துக்கு பெரிய பலம். அதற்கேற்ப நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்தும் நிஜத்திற்கு நெருக்கமாக நம்மை கொண்டு சென்றது படத்திற்கு பலம்.
மைனஸ்: உண்மை சம்பவம் என்பதால் சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள் சந்தேகம் எழுந்தாலும், அது பரவாயில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், சில இடங்களில் சீரியல் போன்ற மேக்கிங் தான் படத்தை கெடுத்து விடுகிறது. சில குறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும், கிளைமேக்ஸில் இயக்குநர் நினைத்ததை போலவே ரசிகர்களை அழ வைத்து தியேட்டரை விட்டு அனுப்புவது சிறப்பு.


Click it and Unblock the Notifications











