Jama Review: பாஞ்சாலியாக நடிக்கும் ஹீரோ.. அர்ஜுனனாக மாறினாரா?.. ஜமா விமர்சனம் இதோ!
நடிகர்கள்: பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன்
இசை: இளையராஜா
இயக்கம்: பாரி இளவழகன்
சென்னை: பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள 'ஜமா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. தெருக்கூத்து கலையை கதையின் அடிநாதமாக வைத்து இயக்கி நடித்திருக்கிறார் பாரி இளவழகன். பஞ்ச பாண்டவர்களை திருமணம் செய்துக் கொண்ட பாஞ்சாலியாக நடிக்கும் நாயகனுக்கு பெயர் கல்யாணம். ஆனால், அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எந்தளவுக்கு செதுக்கியுள்ளாரோ அதே அளவுக்கு தனது நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் பாரி இளவழகன்.
சினிமா வருவதற்கு முன்பே நாடகக் கலையாக தெருக்கூத்து தமிழர்களின் பாரம்பரியமாக பல வருடங்களாக இருந்து வருகிறது. மகாபாரதம், கர்ண மகாபிரபு, வள்ளித்திருமணம் உள்ளிட்ட பல நாடகங்கள் தெருக்கூத்து கலைஞர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

அந்த தெருக்கூத்து கலையை வைத்து படமாக இயக்கி ரசிகர்களை கவர முடியும் என்கிற நம்பிக்கையில் சிறந்த படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். அதன் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜமா கதை: திருவண்ணாமலை பகுதியில் 'ஜமா' - தெருக்கூத்து டிராமா ட்ரூப் நடத்தி வரும் சேத்தன் குழுவில் திரெளபதியாக நடித்து வரும் ஹீரோ கல்யாணத்துக்கு திருமணம் ஆகவில்லை. பெண்ணாக நடித்து நடித்து பெண்களுடன் பழகி வரும் அவருக்கு பெண் போன்ற நளினம் மிக்க சுபாவமே அதிகம் வந்து விட்டது தான் அதற்கு காரணம் என்பதை தெளிவாக காட்டுகின்றனர். ஆனால், அந்த நாயகனின் திறமையை அறிந்து அம்மு அபிராமி அவரை காதலிக்கிறார். காதலை தாண்டி தனியாக ஜமா நடத்த வேண்டும் என்கிற ஆசை நாயகனுக்கு உள்ளது. அர்ஜுனர் வேஷம் போட்டு நடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் அவருக்கு எதிரியாக சேத்தன் மாற இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

பிளஸ்: இளையராஜா இசையில் இந்த படம் உருவானதே பெரிய பலம் தான். பாரி இளவழகன் தேர்ந்த நடிகராக நடித்திருப்பதை பார்க்கவே ஆச்சர்யமாகவும் விருதுகள் நிச்சயம் தேடி வரும் என்றும் கூறத் தோன்றுகிறது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்திற்கு பிறகு சேத்தனுக்கு செம தீனி போட்டுள்ள கதாபாத்திரம் தான் தாங்கல் தாண்டவம். மனுஷன் மிரட்டி எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். காதலியாக வரும் அம்மு அபிராமியின் நடிப்பும் இந்த படத்தில் கைதட்டல்களை பெறுகிறது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் பெரிய கூத்து அவர்கள் போடும் தெருக்கூத்தை விட பெரியது என்பதை எடுத்துக் காட்டியுள்ள விதம் சிறப்பு.
மைனஸ்: கலை படைப்பாக நன்றாக இருந்தாலும், கமர்ஷியல் ரீதியாக ரசிகர்களை இந்த படம் தியேட்டருக்கு எப்படி கொண்டு வரும் என்பதில் தான் சவாலே இருக்கிறது. மேலும், திரைக்கதையில் சில முரண்களையும் ஆங்காங்கே காண முடிகிறது. முதல் பாதியில் கதை ஸ்லோவாக ஆரம்பித்து சூடு பிடிக்க இரண்டாம் பாதியிலும் அதே மாதிரியான ட்ரீட்மெண்ட் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஆனால், எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் போட்டுள்ள உழைப்பிற்கும் இந்த படத்திற்கு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications