Siren Public Review: குத்து உயிரும் கொலை உயிருமாக இருக்கு… சைரன் பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் சைரன், அதிரடி திரில்லர் திரைப்படத்தை ஆண்டனி பாக்யராஜ் எழுதி இயக்கி உள்ளார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் குறித்து படம் பார்த்த பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம்.
ஆம்புலன்ஸ் டிரைவரான ஜெயம்ரவி தனது மனைவி ஜெனிஃபரை கொலை செய்த குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும் ஜெயம் ரவியின் மகள் அவரை வெறுக்கிறாள். இந்த பாசக்கதை ஒருபுறம் இருக்க, காவல் துறை அதிகாரியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியை அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறார்.

செய்யாத கொலைக்காக சிறையில் தண்டனை அனுபவித்து பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவியும், போலீஸ் கீர்த்தி சுரேஷும் புதிதாக நடக்கும் கொலைகளுக்காக ஒரே நேர்கோட்டில் இணைய, அதன்பின் என்ன நடந்தது? என்பதுதான் சைரன் திரைப்படத்தின் கதை.
நடிகர் ஜெயம் ரவி: இன்று படம் பார்த்த ரசிகர் ஒருவர், ஜெயம் ரவி முதல் முறையாக, வயதான தோற்றத்தில், எதார்த்தமான ஹீரோவாக நடித்து இருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி இரண்டு வெவ்வேறு பரிமாணத்தில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் குடும்ப உணர்வுகள் கொண்ட திரில்லர் கதையில் கலக்கி இருக்கிறார். இது ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் என படம் பார்த்த ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
ஏற்றுக்கொள்ளவே முடியல: சைரன் படத்தின் கதை நன்றாகத்தான் இருந்தாலும், கீர்த்தி சுரேஷ் போலீசாக வருவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை சிரிப்பு தான் வருகிறது. மேலும், படம் ரொம்ப இழுத்துக்கிட்டே போகுது, முதல் பாதி ஒகே தான், ஆனால், இரண்டாம் பாதி ரொம்ப இழுத்துக்கிட்டே போச்சு. ஆனால், அப்பா மகள் செண்டிமென்ட் நன்றாக இருந்தது படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றார்.
கடுப்பா இருக்கு: படத்தில் சில இடத்தில் லாஜிக்கே இல்ல, போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேசை உயர் போலீஸ் அதிகாரி பேசும் விதம் பார்ப்பதற்கே கடுப்பா இருக்கு. ஆனால், படத்தை நார்மல் பழிவாங்கும் கதையாக கொண்டு செல்லாமல், ஏதோ கொஞ்சம் வித்தியாசமாக இயக்குநர் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், சைரன் படம் குத்து உயிரும் கொலை உயிருமாக இருக்கு, மக்கள் தான் இந்த படம் பொழச்சிக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











