Jothi Movie Review: பச்சிளம் குழந்தைகளை இப்படியெல்லாமா கடத்துவாங்க? ஜோதி விமர்சனம்!
நடிகர்கள்: வெற்றி, ஷீலா ராஜ்குமார்
இசை: ஹர்ஷவர்த்தன்
இயக்கம்: ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா
சென்னை: 8 தோட்டாக்கள், ஜீவி படங்களில் ஹீரோவாக நடித்த வெற்றி மற்றும் திரெளபதி, மண்டேலா படங்களில் நாயகியாக நடித்த ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் ஜோதி.
குழந்தை கடத்தல் கதையுடன் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக ஜோதி படத்தை இயக்குநர் இயக்கி உள்ளார்.
உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
ஜோதி கதை என்ன
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்துவது குறித்து அறிந்த ரசிகர்களுக்கு, வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை கடத்தும் பயங்கரமான கதையை படமாக்கி உள்ளனர். இப்படியொரு குற்றத்தை செய்த அந்த குற்றவாளி யார் என்பதை போலீஸ் அதிகாரியான வெற்றி கண்டுபிடிப்பது தான் ஜோதி படத்தின் கதை.
ஷீலா ராஜ்குமார்
வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து சீக்கிரமே குழந்தையின் முகத்தை பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில், இப்படி கடத்திச் சென்ற நிலையில், மனம் வாடி குற்றவாளியை கண்டுபிடித்து விடுவார்களா? தனது குழந்தையை பார்த்து விட மாட்டோமா என ஏங்கும் தாயாக திரெளபதி, மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
சமீபத்தில் வெளியான சுழல் மற்றும் சாய் பல்லவியின் கார்கி போலவே இந்த ஜோதி திரைப்படமும் கடைசி வரை பலரை குற்றவாளிகளாக சந்தேகிக்க வைத்து, கடைசியில் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டுடன் ரசிகர்களுக்கு வில்லனை அறிமுகப்படுத்தும் விதம் சிறப்பாகவே உள்ளது.
பலம்
ஷீலா ராஜ்குமார் மற்றும் கான்ஸ்டபிளாக வரும் இளங்கோ குமரவேலின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஹர்ஷவர்தனின் இசை மற்றும் இயக்குநர் எடுத்துக் கொண்ட பயங்கரமான சப்ஜெக்ட் உள்ளிட்டவை பெரும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஜேசுதாஸ் பாடிய "யாரோ செய்த பாவமோ" பாடல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது.
பலவீனம்
ஆனால், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஹீரோ வெற்றியின் நடிப்பு பல இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 8 தோட்டாக்கள், ஜீவி படங்களில் நடித்த வெற்றியா இது என யோசிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் கதைக்கு தேவையான உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தி நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருந்து குழந்தையை கடத்திச் செல்வது போன்ற கதை உண்மையான சம்பவம் என்று சொன்னாலும், அதன் பின் கதை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லப்படாதது ஜோதியை பெரிதாக பிரகாசிக்க விடாமல் செய்து விட்டது. வித்தியாசமாக சொல்கிறேன் என குழந்தைக் கடத்தலில் வயிற்றில் உள்ள குழந்தையை கடத்துவது போல் எடுப்பது என்ன வகை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











