K 13 review: மர்மங்கள் நிறைந்த ஒரு மரணம்... தப்பிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோ... கே 13! விமர்சனம்
மர்மமான முறையில் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் சடலத்துடன், ஒரு வாலிபன் நடத்தும் போராட்டம் தான் கே 13.
Recommended Video
சென்னை: ஒரு பெண்ணின் சடலத்துடன், ஒரு வீட்டில் ஒரு இளைஞன் நடத்தும் போராட்டம் தான் கே 13.
சினிமா கனவோடு வாய்ப்பு தேடி சென்னையில் சுற்றித்திரியும் பல நூறு உதவி இயக்குனர்களில் மதியழகனும் (அருள்நிதி) ஒருவர். பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, இரு நாட்களில் நல்ல கதையுடன் வந்தால் வாய்ப்பு தருவதாகக் கூறுகிறார் ஒரு தயாரிப்பாளர்.

கதையை பிடிக்கும் முயற்சியில் இறங்கும் மதியை, பார்ட்டிக்கு அழைத்து செல்கிறார்கள் அவரது நண்பர்கள் ரமேஷ் திலக், எருமசாணி விஜய் மற்றும் இரு பெண்கள். செம போதையில் இருக்கும் மதி, பாரில் மலர்விழியை (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) சந்திக்கிறான். இருவரும் நட்பாகி செம போதையாகிறார்கள்.
மறுநாள் காலையில் கண்விழித்து பார்க்கும் மதிக்கு செம ஷாக். ஒரு வீட்டில் சேரில் கட்டிப்போடப்பட்டிருக்கிறார் அவர். பக்கத்தில் மலர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார். அதிர்ந்து போகும் மதி, தடயங்களை அழித்துவிட்டு அங்கிருந்து தப்ப முயல்கிறார்.

அந்த வீட்டில் இருந்து மதி எப்படி தப்பிக்கிறார்?, மலரை கொன்றது யார் ? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடிப் பயணிக்கிறது மீதிப்படம்.
ஒரு குறும்படத்துக்கான கதைக் கருவை வைத்துக்கொண்டு, அதனை முழு நீளப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். மிகக் குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, நல்ல க்ரைம் திரில்லர் படத்தை கொடுத்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

படம் முழுவதையும் தனது தோளில் வைத்து சுமக்க வேண்டிய பொறுப்பு அருள்நிதிக்கு. ஏனெனில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை 90 சதவீத காட்சிகளில் அவர் வருகிறார். அந்த பொறுப்பை உணர்ந்து, அருமையாக நடித்திருக்கிறார். பயம், மிரட்சி, அதிர்ச்சி, கோபம், தவிப்பு என படம் முழுதும் அருள்நிதியின் முகத்தில் உணர்வுகள் மாறிமாறி வந்து செல்கின்றன. வாழ்த்துகள் ப்ரோ.

பேசாமலேயே பேச வைத்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஐந்து நிமிடம் பிணமாக நடிப்பதே கஷ்டமான விஷயம். கண் இமை அசையாமல் பாதி படத்துக்கு மேல் பிணமாகவே நடித்து, அசர வைத்திருக்கிறார் இந்த யாஞ்சி.

யோகி பாபுவுக்கு ஒரே ஒரு சீன் தான். அதுவும் சிரிப்பு வரவைக்கிற மாதிரி இல்ல. படத்தோட பப்ளிசிட்டிக்கு வேண்டுமென்றால், யோகி பாபுவின் படம் உதவும். இப்படியே போச்சுன்னா, இந்த வருஷம் ரிலீசாகும் எல்லா படத்துலயும் யோகி பாபு முகம் இருக்கும். ஆனால் அடுத்த வருஷம் ரிலீசாகும் ஒரு படத்துலக்கூட அவர் இருக்க மாட்டார்.

படம் திரில்லிங்காக நகர்வதற்கு சாம் சி.எஸ்.யின் பின்னணி இசை முக்கியமான காரணம். பார் சாங் மனசுல நிக்கல. எண்ட் டைட்டில் பாட்டு நின்று பார்க்க வைக்குது.
ரூபனின் எடிட்டிங்கும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு பிளாட்டுக்குள் கேமராவை வெச்சு, எவ்வளவு வெரைட்டி காட்ட முடியுமோ, அவ்வளவு காட்டியிருக்காங்க.

படத்தில் நிறைய மைனஸ் இருக்கு. குறிப்பாக திரைக்கதையில் தெளிவு இல்லை. முன்னுக்கு பின்னாக நகரும் காட்சிகள் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. க்ளைமாக்ஸ் காட்சிக்கு பிறகு, படத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடுகிறது. அதேபோல், ஷ்ரத்தாவின் மரணத்துக்கான காரணமும் ஏற்புடையதாக இல்லை. ஒரு எழுத்தாளன் கதைக்காக கொலைக்கூடவா செய்வான் என்ற கேள்வி எழுகிறது.

லாஜிக் பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய சொதப்பல்கள் இல்லாத, ஒரு விறுவிறுப்பான திரில்லர் படம் கே 13.


Click it and Unblock the Notifications











