க/பெ ரணசிங்கம் விமர்சனம்.. ஒற்றை மனுஷியாக மொத்தப் படத்தையும் தாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஶ்ரீ, ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி,
இயக்கம்: விருமாண்டி
பிழைப்புக்காக வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தை அதே உயிர்ப்போடு சொல்கிறது, க/பெ ரணசிங்கம்!
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரணசிங்கத்துக்கு அரியநாச்சியுடன் நடக்கிறது திருமணம். அதற்குப் பிறகு பிழைப்புக்காக வளைகுடா நாடொன்றுக்கு பயணம் செய்கிறார், ரணசிங்கம். அங்கு நடக்கும் விபத்து ஒன்றில் அவர் பலியாகி விடுகிறார். கண்ணீர் விட்டு கதறும் அவர் மனைவி அரியநாச்சி, அவர் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடத்தும் ரத்தமும் சதையுமான போராட்டம்தான் கதை.
விஜய் சேதுபதி
வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கு இறந்துவிட்டால் அவர்கள் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களை அவ்வளவு டீட்டெய்லாக விவரிக்கிறது படம். கொஞ்ச நேரம் வந்தாலும் அழுத்தமான கேரக்டர் விஜய் சேதுபதிக்கு. தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பவராக அசத்தும் அவர், ஐஸ்வர்யா ராஜேஷை வளைத்து வளைத்து காதலிப்பது, மக்கள் பிரச்னைக்காக போராடுவது என அப்படியே மண்ணின் மைந்தனை கண்முன் நிறுத்துகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒற்றை மனுஷியாக மொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அச்சு அசல் கிராமத்து பெண்ணாக அவரும் அவர், நாடி நரம்பெல்லாம் நடிப்பு என்பது போல ஒவ்வொரு அசைவிலும் தனது நடிப்பை அப்படி வெளிபடுத்துகிறார். கணவர் உடலை மீட்க அவர் போராடும் ஒவ்வொரு நிகழ்வும் சாதாரண மக்கள் படும் பாட்டை இயல்பாக சொல்கிறது.
ரங்கராஜ் பாண்டே
விஜய் சேதுபதி தந்தையாக வரும் பூ ராமு, ஐஸ்வர்யா தந்தையாக வரும் வேல ராமமூர்த்தி, விஜய் சேதுபதி தங்கையாக வரும் பவானி ஶ்ரீ, கலெக்டர் ரங்கராஜ் பாண்டே என ஒவ்வொரு கேரக்டரும் சரியான தேர்வு. அறிமுக இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவுக்கு விருமாண்டியின் இயக்கம் கச்சிதம்.
வசனங்களில் முதிர்ச்சி
'ரேஷன் கார்ட் நம்ம ஸ்டேட் எல்லையைத் தாண்டி தாங்காது. ஆதார் எதுவரை செல்லும்னே தெரியாது'. ரெண்டாயிரம் பேருக்கு வேலை கொடுத்துட்டு விவசாயம் பண்ற 50,000 பேரை தெருவுல நிப்பாட்டினா எப்படி சார் என்பது போன்ற சண்முகம் முத்துசாமியின் வசனங்களில் அத்தனை முதிர்ச்சி.
சரியாக கத்திரி
ஜிப்ரான் பின்னணி இசையும் பாடல்களும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ராமநாதபுரத்தின் பொட்டல்காட்டையும் போராட்டத்தையும் இயல்பாகக் காட்டுகிறது. படத்தில் ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகள். நீளமான காட்சிகளும் அதிகம். அவற்றுக்கு சரியாக கத்திரி போட்டிருந்தால் ரணசிங்கம் இன்னும் கச்சிதமாக இருந்திருப்பார்.


Click it and Unblock the Notifications











