Kaantha Review: காந்தா விமர்சனம்.. துல்கர் சல்மானின் கலைப் படைப்பு கை கொடுத்ததா?.. கவுத்துவிட்டதா?
சென்னை: துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, சமுத்திரகனி, காயத்ரி, நிழல்கள் ரவி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தா திரைப்படம் நவம்பர் 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியானது. துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் கிளாஸிக் சினிமாவை மீண்டும் ரசிகர்களுக்கு பெரிய திரைகள் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
எம்.கே. தியாகராஜ பகவதரின் பயோபிக் படமாக இது இருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கும் இந்த படத்துக்கும் பெரிதாக சம்பந்தமே இல்லாத அளவுக்கு கதையையும் திரைக்கதையையும் இயக்குநர் உருவாக்கியுள்ளார்.

ஆனால், பல பழம்பெரும் நடிகர்களை தனது நடிப்பால் கண்முன்னே நினைவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் துல்கர் சல்மான். அவரது கலைப் படைப்பு கை கொடுத்ததா? அல்லது கவுத்து விட்டதா? என்பது குறித்த விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம் வாங்க..
காந்தா கதை: நஷ்டத்தில் இருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நடிப்புச் சக்கரவர்த்தியாக வலம் வரும் டி.கே. மகாதேவனை (துல்கர் சல்மான்) வைத்து படம் பண்ணியே ஆக வேண்டும் என்கிற நெருக்கடிக்கு அய்யா (சமுத்திரகனி) தள்ளப்படுகிறார். அநாதையாக இருந்த டிராமா ஆர்ட்டிஸ்ட்டை சினிமாவில் ஹீரோவாக மாற்றிய அய்யாவை விட்டு ஒரு கட்டத்தில் விலகும் மகாதேவன் தான் சிறைக்குச் செல்ல காரணமே அவர் தான் என்கிற கோபத்தில் இருக்கிறார். மீண்டும் இருவரும் இணைந்து சாந்தா என்கிற படத்தை பண்ண ஆரம்பிக்க, தனது ஒட்டுமொத்த ஈகோவையும் ஸ்டார்டம்மை பயன்படுத்தி காட்டும் ஹீரோ படத்தின் தலைப்பை காந்தா என மாற்றுவது மட்டுமின்றி கிளைமேக்ஸ் வரை மாற்றுகிறார்.
முதல் பாதி முழுவதுமே ஹீரோ மற்றும் இயக்குநரின் ஈகோ மோதல்கள் மற்றும் ஹீரோயினாக முதல் படத்தில் நடித்து வரும் குமாரி (பாக்யஸ்ரீ) உடனான மகாதேவனின் ரகசிய உறவு என சென்றுக் கொண்டிருக்க, இடைவேளையில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது. ஸ்டூடியோவில் நடந்த அந்த கொலையை ஹீரோ செய்தாரா? இயக்குநர் செய்தாரா? அல்லது யார் செய்தார் என்கிற விசாரணையின் முடிவு தான் இந்த படத்தின் கதை.

நடிப்புச் சக்கரவர்த்தி: மொத்த படத்திலேயே துல்கர் சல்மானின் நடிப்பு முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை தனித்துவமாக துண்டாக தெரியும் வண்ணம் உள்ளது. நடிப்புச் சக்கரவர்த்தியாகவே மாறிவிட்டார் துல்கர் சல்மான். அவருக்கு போட்டியாக சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் போட்டிப் போட்டு நடிக்க முயற்சித்தாலும், துல்கர் சல்மான் பக்கத்தில் கூட இருவராலும் வரமுடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணாடி சீன், கன்னத்தில் அறை வாங்கும் காட்சி, கடைசி கிளைமேக்ஸ் என நடிப்பால் மிரட்டுகிறார்.
படம் எப்படி இருக்கு?: மனிதனின் ஈகோ எந்தளவுக்கு மோசமான ஒன்று என்பதையும் இருட்டறையில் பெரிய ஒளித்திரையில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நாம் என்ன சொல்லிவிட முடியும் என சமுத்திரகனி பேசும் வசனங்கள் தான் இந்த படம் இடைவேளைக்குப் பிறகு இழந்த உயிரை மீட்டுத் தருகிறது. முதல் பாதி படமே துல்கர் சல்மான் ரசிகர்கள் மட்டும் கலைப் படைப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு போதுமானதாக உள்ளது.
ஆனால், இரண்டாம் பாதியில் ராணா டகுபதியின் அடாவடி போலீஸ் என்ட்ரி படத்தை வேறு ஒரு டிராக்கிற்கு கொண்டு சென்று எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ சொதப்பி விடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் அந்த காலத்து சினிமாவை போலவே ஓவர்டோஸ் நடிப்பைக் கொடுக்க துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் உயிரைக் கொடுத்து நடித்தது எல்லாம் ரசிகர்களை சரியாக சென்று சேராமல் போவது தான் படத்தின் பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. ஆனால், மறுபடியும் இது என்னோட படம் என்பதை கிளைமேக்ஸில் நிரூபித்து துவண்டு கிடந்த ரசிகர்களை கைதட்ட வைத்து அனுப்பியுள்ளார் துல்கர் சல்மான்.

பிளஸ்: நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு அப்படியொரு கிளாசிக் படத்தை அதுவும் குறிப்பிட்ட செட்டுக்குள் சீரியல் போல ஆகிவிடாமல் கடைசி வரை ரசிகர்களை என்கேஜாக கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் அசத்தியுள்ளார். டானி சான்சேஸ் லோபஸ் ஒளிப்பதிவில் பிளாக் அண்ட் ஒயிட் மற்றும் கலர் போர்ஷன் என எல்லாமே கண்களுக்கு இதமாகவே இருந்தது சிறப்பு. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். துப்பாக்கிச் சுடும் சத்தம், பேய் பட மியூசிக் என அனைத்துமே அட்டகாசம். ஜானு சந்தர் அந்த காலத்து பாடல்களை போலவே பாடல்களை உருவாக்கிய விதத்தில் கைதட்டல்களை பெறுகிறார். துல்கர் சல்மானை தாண்டி படத்தில் அதிகம் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்வது பாக்யஸ்ரீ போர்ஸ் தான். நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷை பார்த்தது போலவே இருந்தது. அவரது சிரிப்பு, அந்த பளார் விடும் காட்சி எல்லாம் பக்கா.
மைனஸ்: முதல் பாதி படம் பட்டாசாக செல்ல, இரண்டாம் பாதியில் இடம்பெறும் விசாரணை போர்ஷன் சற்றே ரசிகர்களை சோதிக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்திலேயே குற்றவாளி யார் என்பதை எளிதில் கெஸ் செய்ய முடிகிறது. ஆனால், அதன் பிறகு படத்தை இழுவையாக இழுத்திருப்பது தான் சறுக்கல். காயத்ரி, நிழல்கல் ரவி, வையாபுரி மற்றும் குறிப்பாக ராணா டகுபதியின் காஸ்டிங்கை இன்னமும் மாற்றியிருந்தால் பிளாக்பஸ்டர் படமாகவே இந்த காந்தா மாறியிருக்கும்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும், இப்படியொரு கிளாசிக் படத்தை தரமாக கொடுத்த விதத்தில் படக்குழுவை பாராட்டியே தீர வேண்டும். கண்டிப்பாக இந்த படத்துக்கு பல விருதுகள் குவியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் நடிப்புக்காகவே தியேட்டர்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த படத்தை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











