Kabilavasthu Review: வீடற்ற மக்களின்... உள்நாட்டு அகதிகளின் அவலத்தை பேசும் 'கபிலவஸ்து'! விமர்சனம்
சொந்த நாட்டிலேயே அகதிகளை போல் வாழும் நடைபாதைவாசிகளை பற்றி பேசும் படம் கபிலவஸ்து.
சென்னை: தங்க இடமில்லாமல், சொந்த நாட்டிலேயே அகதிகளை போல் வாழும் நடைபாதைவாசிகளை பற்றி பேசும் படம் கபிலவஸ்து.
நேசம் முரளி பொதுக்கழிவறையில் கண்டு எடுக்கப்பட்டு அங்கேயே வளர்ந்தவர். குடும்பம், வீடு என்று எதுவும் இல்லாதவர். அருகே நடைபாதையில் வசிக்கும் பேபி ஐஸ்வர்யாவுக்கு அண்ணனாக இருந்து படிக்க வைக்கிறார். குப்பை பொறுக்கும் நந்தினியை காதலிக்கிறார். பேபி நந்தினி பாட்டியுடன் வீடு எடுத்து தங்குவதற்காக பணம் சேர்க்கிறாள்.

இந்நிலையில் இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்களாக நடைபாதைவாசிகளின் குழந்தைகளை திருடும் கும்பல், காவல்துறை, அதிகார வர்க்கம் என பல வருகின்றன. இவர்களால் நடைபாதைவாசிகள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்பதே கதை.

நாம் பரிதாபத்தோடு கடந்துபோகும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அவலத்தை பதிவாக்கி அதனை நாட்டின் முதல் குடிமகன் வரை எடுத்து சென்ற நேசம் முரளிக்கு முதலில் பாராட்டுகள். கழிவறைகளை சுத்தம் செய்வது, அங்கேயே வாழ்வது என எந்த சங்கடமும் படாமல், நடைபாதைவாசியாகவே வாழ்ந்திருக்கிறார் நேசம் முரளி.

அவரது தங்கையாக வரும் பேபி ஐஸ்வர்யா, மனைவி நந்தினி, பாட்டி வான்மதி, பழைய இரும்புக்கடை பாய் பாண்டு, போலீசாக மன்சூர் அலிகான், குப்பை பொறுக்கும் கோவை செந்தில் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வெறும் ஆவணமாக, ஒரு பதிவாக மட்டுமில்லாமல் நடைபாதைவாசிகளின் வாழ்க்கையை கண்முன் விரிக்கிறது கபிலவஸ்து. காதல், பாசம், ஆக்ஷன், காமெடி எல்லாம் சேர்த்து ஒரு முழு நீள படமாக வந்துள்ளது படம்.

விஜியின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, எஸ்பி.அகமதுவின் படத்தொகுப்பு என மூன்றுமே படத்துக்கு பலமாக உள்ளது.

திரைக்கதையும் சுவாரஸ்யம் சேர்த்து, நடிகர்களிடம் இன்னும் நன்றாக வேலை வாங்கியிருந்தால், கபிலவஸ்து சிறப்பான படமாக இருந்திருக்கும். இருப்பினும் நடைபாதைவாசிகள் பற்றிய படம் என்பதால் கவனம் ஈர்க்கிறது கபிலவஸ்து.



Click it and Unblock the Notifications











