'கலகலப்பு 2' - படம் எப்படி? #Kalakalappu2Review
Recommended Video

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கலகலப்பு 2'. இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கிறது.
'கலகலப்பு 2' படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
கலகலப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாத முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகமும் சிரிப்பு சரவெடியாக வந்திருக்கிறதா..? வாங்க பார்க்கலாம்.
கலகலப்பு 2
இயக்குநர்களைப் பொறுத்து தமிழ் சினிமா பல ஜானர்களிலும் பயணிக்கிறது. அந்தவகையில், இயக்குநர் சுந்தர்.சி கலாட்டா வித் காமெடி படங்களைக் கொடுத்து வருகிறார். 'கலகலப்பு 2' படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைப் பயன்படுத்தி செம காமெடி படம் ஒன்றைத் தர முயன்றிருக்கிறார் சுந்தர் சி. வெளியுலக அழுத்தங்கள், சுமைகள், சோகங்கள் மறந்து ரசிகர்கள் தியேட்டர்களில் சிரிக்க இவரது படத்துக்கு நிச்சயம் போகலாம் எனும் ரசிகர்களின் நம்பிக்கையை 'கலகலப்பு' முதல் பாகம் போலவே 'கலகலப்பு 2' காப்பாற்றி இருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.
கதை
காசியில் தனது பாட்டி மற்றும் தங்கையுடன் மேன்ஷன் நடத்தி வருபவர் ஜீவா. தமிழ்நாட்டிலிருந்து தனது தாத்தா நடத்திவந்த மேன்ஷனை மீட்பதற்காக காசிக்கு வருகிறார் ஜெய். ஒரு அரசியல்வாதிக்கு தேவையான லேப்டாப்பை வைத்திருக்கும் ஆடிட்டரை தேடி தமிழகத்திலிருந்து காசிக்கு கிளம்பும் ஒரு கும்பல். ஜீவா அடுத்தவருக்குச் சொந்தமான மேன்ஷனை நடத்துவதை அறிந்து அங்கே டென்ட் போடப் பார்க்கும் போலிச் சாமியார் யோகிபாபு. இவர்கள் அனைவரும் காசியிலும், தங்களை ஏமாற்றிய மிர்ச்சி சிவாவை தேடி ஜீவா, ஜெய் ஆகியோர் காரைக்குடியிலும் அடித்திருக்கும் காமெடி லூட்டியே 'கலகலப்பு 2'.
ஜீவா
அடுத்தவரின் மேன்ஷனை நடத்துவதைத் தவிர மற்ற விஷயங்களில் நல்ல மனிதராக வருகிறார் ஜீவா. ஜீவாவின் தங்கையைப் பெண் பார்க்க வருகிறார் சதீஷ். சதீஷின் தங்கை கேத்தரின் தெரேசா. கேத்தரின் தெரேசாவை பார்த்ததுமே காதல் வயப்படுகிறார் ஜீவா. சதீஷ் திருமணத்தில் விருப்பமின்றி சாமியாராகப் போக நினைக்க அவரை தனது தங்கையோடு சேர்த்து வைத்து தான் கேத்தரின் தெரேசாவோடு இணைவதற்காக பல முயற்சிகளைச் செய்கிறார் ஜீவா. முதல் பாகத்தின் கூகுள் டாக் போலவே, இதிலும் சுகர் பேஷன்ட் நாய் ஒன்று இருக்கிறது.
ஜெய்
ஜெய், தனது குடும்பத்திற்குச் சொந்தமான மேன்ஷன் எது எனத் தேடித் திரிகையில், பார்ட் டைம் டான்ஸரும், ஃபுல் டைம் தாசில்தாருமான நிக்கி கல்ராணியை காதலிக்கிறார். பிறகு, தான் தங்கியிருக்கும் ஜீவாவின் மேன்ஷனே தனது மேன்ஷன் எனக் கண்டு பிடிக்கிறார் ஜெய். ஆனாலும், நூறு வருடங்களாக அந்த மேன்ஷனை நடத்திவரும் ஜீவா குடும்பத்தினருக்கும் அந்த மேன்ஷனில் உரிமை உள்ளது எனப் புரிந்துகொள்கிறார். இருவரும் சேர்ந்து அந்த மேன்ஷனை டெவலப் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், இருவரின் பணத்தையும் வெவ்வேறு நேரத்தில் சிவா தலைமையிலான கொள்ளைக் கும்பல் திருடிச் செல்கிறது. இந்நிலையில், சிவா இருக்கும் இடம் பற்றிய தகவல் நிக்கி கல்ராணி மூலம் தெரியவருகிறது.
சிவாவை தேடும் ஜீவா, ஜெய்
ஜீவா, ஜெய் இருவரும் சிவாவை தேடி தமிழகத்தின் காரைக்குடிக்குச் செல்கிறார்கள். அங்கு தன்னைத் தத்தெடுக்கும் வீட்டிலேயே பெரும் செல்வத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் சிவா. ஜீவா, ஜெய் இருவரிடமும் தனது திட்டத்தைச் சொல்லி, அதன்பிறகு உங்களது பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் எனச் சொல்கிறார். இதற்கு ஒப்புக்கொண்டு இருவரும் சிவாவுக்கு உதவுகிறார்கள். அந்தப் பொருளை திருடிய சிவா, தனியாகத் தப்பித்து ஓடப் பார்க்கிறார். தங்களுக்கு வேண்டிய பணத்திற்காக ஜீவா, ஜெய் இருவரும் அவரைத் துரத்துகிறார்கள். முடிவில், அந்தப் பொருள் அவர்கள் கைக்கு வந்து சேர்ந்ததா என்பதை 'உள்ளத்தை அள்ளித்தா', 'சீனா தானா 001', 'சுந்தரா டிராவல்ஸ்' டைப் நான்ஸ்டாப் காமெடிகள் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.
நடிகர் பட்டாளம்
ஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ராணி ஆகியோர் தவிர, சதீஷ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு, சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி, ரோபோ சங்கர், மனோபாலா, விடிவி கணேஷ், முனீஷ்காந்த் எனத் தொடர்ந்து நான்கைந்து பக்கங்களுக்கு வருமளவுக்கு இருக்கிறது நடிகர்கள் பட்டாளம். எல்லோரையும் தேவையான அளவு வேலை வாங்கி குறையில்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. அத்தனை பேரும் இணைந்து காமெடியில் டோட்டல் ஸ்கோர் செய்கிறார்கள். 'சுப்ரமணியபுரம்' சித்தன் இப்படத்தில் 'கூட இருந்த குமரேசன்' என்கிற ரோலில் காமெடி கெடா வெட்டியிருக்கிறார்.
காமெடி
போலிச் சாமியாராக வந்து எல்லாப் பக்கமும் வாங்கிக்கட்டிகொள்ளும் யோகிபாபு, அம்மாவாசை வந்தால் உடன் இருப்பவரை போட்டு வெளுத்து துவம்சம் செய்யும் கேரக்டர், 10 நொடிகள் மட்டுமே நினைவு திரும்பும் விசித்திர நோயாளியாக முனீஷ்காந்த், எங்கு போனாலும் செமத்தியாக அடிவாங்கித் திரும்பும் விடிவி கணேஷ், தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொள்ளும் ராதாரவி என காமெடி காக்டெயில் இந்த 'கலகலப்பு 2'. மிர்ச்சி சிவா வந்ததும் ஒன்லைனர் காமெடி பட்டாசு தெறிக்கிறது. "அட இந்த நாய் திருடுமா... அப்போ இது என் கூட தான் இருக்கணும்..." எனச் சொல்வது உள்ளிட்ட சில இடங்களில் வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறார்.
காமெடி ஆக்ஷன்
முதல் பாதி காமெடியாகவும், கதை சொல்லுமாகவும் ஆவரேஜ் கிராஃபில் பயணித்தால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க காமெடி ஆக்ஷன் கலாட்டா. சிவா திருடிய பொருளைப் பெற ஜீவா, ஜெய் ஆகியோர் துரத்துவது, சிவாவைப் பிடிக்க ரோபோ சங்கர் ஆட்கள் துரத்துவது, ஜெய்யை காலி செய்ய விடிவி கணேஷ் பிளான் போடுவது, சூட்கேஸை பெற அரசியல்வாதிகள் பாடாய்ப் படுவது, என ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து இணையும் பல இடங்களில் காமெடிக்கு செம ரெஸ்பான்ஸ். காமெடி ஆக்ஷன் சண்டைகள் கொஞ்சம் நீளம் என்றாலும் பெரிதாக போர் அடிக்காமல் செல்கிறது.
படம் எப்படி
படத்தின் முதல் பாதியில் பாடல்கள் அடுத்தடுத்து வருவது கொஞ்சம் சோதனை. ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. ஆனாலும் சிச்சுவேஷனுக்கு தகுந்த கொண்டாட்டப் பாடலாக வந்து போகிறது. அசத்தல் காமெடிக்காக ஃபேமிலி ஆடியன்ஸ் நிறைந்த சுந்தர்.சி படத்தில் டபுள் மீனிங் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். காசியின் அழகை கலர்ஃபுல்லாக அள்ளி வந்திருக்கிறது கேமரா. மேன்ஷன் காட்சிகளில் கிளாசிக் லுக். லாஜிக் சிக்கல்கள் தவிர்த்து முழுநீள காமெடி படமாக ரசிகர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்திருக்கிறது 'கலகலப்பு 2'. 'கலகலப்பு 2', கலகல சிரிப்பு.


Click it and Unblock the Notifications











