கோழை அண்ணன்... தைரியசாலி தங்கை... பழிவாங்கும் படம்... 'களரி' விமர்சனம்!
தங்கைக்காக அண்ணன் பழிவாங்கும் கதையே களரி.
சென்னை: பயந்த சுபாவம் கொண்ட ஒருவன், தன் தங்கைக்காக மேற்கொள்ளும் பழிவாங்கும் படலமே களரி.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தமிழர் பகுதியான வாத்துருதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார் நாயகன் முருகேசன் (கிருஷ்ணா). குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகும் முருகேசனுக்கு, தன் தங்கை தேன்மொழியை (சம்யுக்தா) ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்து கரை சேர்க்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் குடிகார தந்தை மாரியால் (எம்.எஸ்.பாஸ்கர்) வரும் வரனெல்லாம் கெட்டுப்போகிறது. தந்தையை எதிர்க்க துணிவில்லாத முருகேசன், என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் சூழலில், உள்ளூர் பையன் அன்வரை (விஷ்ணு) காதலிக்கிறார் தங்கை தேன்மொழி. ஆனால் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் தந்தை.

இதற்கிடையில் உள்ளூர் முக்கியப் பிரமுகர் சித்திக்கிடம் வேலை பார்க்கும் மூர்த்திக்கு தேன்மொழி மீது காதல் ஏற்பட, அவரது தந்தை மாரிக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து மகளை கரெக்ட் செய்யும் வேலையை பார்க்கிறார். தேன்மொழி வாரை திருமணம் செய்தார், அவரது திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
தங்கை மீது அதீத பாசம் வைத்திருக்கும் அண்ணன் கிருஷ்ணா. போகிறவர் வருகிறவர் என எல்லோரிடமும் தர்ம அடி வாங்கினால், திருப்பி அடிக்க தைரியம் இல்லாத கோழை. இந்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
கிருஷ்ணாவை காதலிப்பது மட்டுமே வித்யா பிரதீப்பின் வேலை. கடமையே கண்ணாயிரம் என கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். தங்கையாக வரும் சம்யுக்தாவை, இனி நிறைய சினிமாக்களில் ஹீரோவின் தங்கையாக பார்க்கலாம். நன்றாகவே நடித்திருக்கிறார்.

தங்கைக்காக தன் வாழ்க்கையே இழக்கும் 'பாசமலர்' காலத்து அண்ணன் கதை. களரி என பெயர் வைத்துவிட்டு, பழைய படங்களை கிளரி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். ஹீரோ இப்போ கோபப்படுவார், இதோ கோபப்படப்போகிறார் என எதிர்பார்த்து, ஆடியன்ஸ் தான் ஆங்கிரி பேர்டாக மாறுகிறார்கள். கோபத்த கிளராதீங்க புரோ.
தங்கச்சி இப்படி ஒரு கஷ்டத்துல இருக்கும் போது எந்த அண்ணனாவது ஹீரோயின் கூட டுயட் பாடுவானா இயக்குனர் சார். ஹீரோ அப்பாவி தான். அதுக்காக இப்படியா. அதுவும் இன்னார் தான் இதுக்கெல்லாம் காரணம்னு ஈஸியா யூகிக்க முடிஞ்சுடுது. அதனால சுவாரஸ்யமும் போய்விடுகிறுது.
எம்.எஸ்.பாஸ்கர் எந்நேரமும் குடிச்சுகிட்டே இருப்பது ஒருக்கட்டத்துல சலிப்பை ஏற்படுத்திடுது. தயது செய்து பிளாக் பாண்டிய நம்பியெல்லாம் இனி காமெடி டிராக் அமைக்காதீங்க இயக்குனர் சார்.
வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம். கேரளாவின் தமிழர் பகுதியை அழகாக காட்டியிருக்கிறது குருதேவின் ஒளிப்பதிவு. அதை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரபாகர்.
தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல அண்ணன் தங்கை சென்டிமென்ட் படங்களை பார்த்துவிட்டதால், இந்த தற்காப்பு கலையான 'களரி'யில் புதிதாக ஒன்றும் இல்லை. நல்ல கதைகளை தேர்ந்தெடுங்க கிருஷ்ணா.


Click it and Unblock the Notifications











