Kambi Katna Kathai Review: கம்பி கட்ன கதை விமர்சனம்.. பணக்காரனா பார்த்து ஏமாத்து.. என் பேர காப்பாத்து!
சென்னை: அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கம்பி கட்ன கதை' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மங்காத்தா மூவிஸ் சார்பில் ரவி இந்த படத்தை தயாரிக்க உத்ரா புரொடக்ஷன் வெளியிடுகிறது.
இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட், ஹரிஷ் கல்யாணின் டீசல் மற்றும் மாரி செல்வராஜின் பைசன் என இளம் நடிகர்களின் படங்கள் போட்டிப் போடவுள்ள நிலையில், நானும் இந்த ரேஸுக்கு வருகிறேன் என சதுரங்க வேட்டை ஸ்டைலில் களமிறங்கியுள்ளார் நட்ராஜ்.

குறைவான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த 'கம்பி கட்ன கதை' ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
கதைக்களம்: வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்டு வரும் பல கோடி மதிப்புள்ள வைரம் கஸ்டம்ஸ் ஆபீசரிடம் தெரியாமல் சிக்கிக்கொள்ள அதை அவருக்கே தெரியாமல் எடுத்து வந்து தங்களிடம் கொடுக்க வேண்டும் என சரியான 420 நபரான நட்டியிடம் போலீஸ் அதிகாரியான கராத்தே கார்த்தி உதவி கேட்க, அந்த வைரத்தை எடுத்த உடனே அதை தானே ஆட்டையைப் போட்டு விடலாம் என நினைக்கும் ஹீரோ அதை ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கிறார். போலீசாரிடம் சிக்கிய நிலையில், எந்த வைரமும் கிடைக்கவில்லை என சொல்ல கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் பணத்தை திருடிய குற்றச்சாட்டுக்காக சிறைக்குச் செல்கிறார்.
சிறையில் இருந்து திரும்பி வந்ததும் வைரத்தை மறைத்து வைத்த இடத்துக்குச் சென்று எடுக்க நினைக்கும் நட்டிக்கு அங்கே தூங்கும் துறவி சாமியார் என்கிற திடீர் கோயில் உருவாகி இருப்பது தெரிகிறது. கோயிலில் இருந்து வைரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக சாமியாராக மாறும் நட்டி நட்ராஜ் வைரத்தை எடுத்தாரா? இல்லையா? போலீஸிடம் சிக்கினாரா? இல்லையா? என்பது தான் இந்த கம்பி கட்ன கதை படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு நட்டி நட்ராஜ் மீண்டும் அதே மாதிரியான கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என சொல்லிவிட்டு மெடிக்கல் செக்கப் மூலமாக மோசடி செய்து பணம் பெறுவதில் தொடங்கி, சாமியராக மாறி கடைசியில் பொய்லாசா தீவை சொந்தமாக்குவது வரை என ஒட்டுமொத்த எனர்ஜியையும் கொட்டி நடித்து படத்தை கடைசி வரை தனது தோளில் சுமந்துள்ளார். அவருடன் சிங்கம்புலி சேர்ந்துக் கொண்டு அடிக்கும் காமெடி காட்சிகள் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதிலும், அந்த மகாராஜா காது காமெடி வேறலெவல்.
படத்தில் இன்னொரு ஹீரோவாக வரும் முகேஷ் ரவியின் ஓபனிங் பாடலிலேயே சிக்ஸ் பேக் உடம்பை எல்லாம் காட்டி அசத்துகிறார். அவருக்கு ஒரு காதல் கதை, ஹீரோயின் என தனி டிராக் சென்றாலும், படத்தில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. நட்டி நட்ராஜ் அருகே துணை நடிகராகவே நடித்திருக்கிறார். நட்டி நட்ராஜுக்கு ஒரு ஹீரோயின், முகேஷ் ரவிக்கு ஒரு ஹீரோயின் என இருவர் படத்தில் இருக்கின்றனர். டபுள் மீனிங் காமெடி காட்சிகள், ஏழையை விட்டுடு, பணக்காரனா பார்த்து ஏமாத்து.. என் பேரை காப்பாத்து உள்ளிட்ட வசனங்கள் க்ளிக் ஆகியுள்ளன.
பிளஸ்: அறிமுக இயக்குநர் ராஜநாதனின் டைரக்ஷன் கடைசி வரை படத்தை ரசிக்கும் படியும் லேக் அடிக்காமல் சென்றதுமே பிளஸ் தான். விஷ்ணு விஷாலின் கதாநாயகன் படத்தை இயக்கிய முருகானந்தம் இந்த படத்திற்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். குறைவான பட்ஜெட் என்றாலும் விஷுவல்ஸ் கலர்ஃபுல்லாக இருக்க காரணமே ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.எம் ஜெய்சுரேஷின் வேலைப்பாடு தான். நித்யானந்தாவை சில இடங்களில் சீண்டியுள்ள விதம் தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்புகிறது. காசே தான் கடவுளடா படத்தில் இருந்து எடுத்த ரெஃபரன்ஸ் காட்சி படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. கலை இயக்குநர் ஷிவ யோகாவின் வேலைப்பாடு மற்றும் எடிட்டர் ஃபாசிலின் ஃபாஸ்ட் கட்ஸ் படத்தை எங்கேயும் ஸ்லோவாக்கி விடவில்லை.
மைனஸ்: மெயின் வில்லன் கதாபாத்திரமான கராத்தே கார்த்தி மற்றும் அந்த ஊர் எம்எல்ஏ கதாபாத்திரம் என வழக்கு எண் முத்துராமன் என வில்லன் போர்ஷனை ஸ்ட்ராங்காக வடிவமைக்காமல் லேசாகவே ட்ரீட் செய்துள்ளது பெரிய மைனஸ் ஆக தெரிகிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம் தான். ஆனால், பெரிதாக எந்த இடத்திலும் படம் தொய்வடையாமல் கடைசி வரை விறுவிறுவென சென்று ஆங்காங்கே சிரிக்க வைத்து முடித்த விதம் சிறப்பு.


Click it and Unblock the Notifications











