ஆன்லைன் மோசடியும் சுகமான அதிர்ச்சிகளும்தான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!
நடிப்பு: துல்கர் சல்மான், ரிது வர்மா, கவுதம் வாசுதேவ் மேனன்
இயக்குனர்: தேசிங் பெரியசாமி
சென்னை: ஆன்லைன் அதிர்ச்சி மோசடியும் அதிரவைக்கும் சுவாரஸ்ய காதலும்தான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!
ஹைடெக் தொழில்நுட்பத்தை கொண்டு, மோசடியில் ஈடுபடுபவர்கள், நண்பர்களான துல்கர் சல்மானும், ரக்ஷனும். துல்கருக்கு ரிதுவர்மா மீது காதல். ரக்ஷனுக்கு ரிதுவின் தோழி, நிரஞ்சனி அகத்தியன் மீது காதல். நால்வரும் நண்பர்களாகிறார்கள். கொஞ்சம் ஓவராக சம்பாதித்து காதலிகளுடன் கோவாவில் செட்டிலாக நினைக்கிறார்கள் இருவரும். அதன்படியே பல லட்சங்களுடன் செல்கிறார்கள்.
கவுதம் வாசுதேன் மேனன்
இதற்கிடையே, துல்கர், ரக்ஷனால் பாதிக்கப்படும் போலீஸ் அதிகாரி கவுதம் வாசுதேன் மேனன் அவர்களை தேடுகிறார். ஒரு கட்டத்தில் கோவாவில், கவுதம் மேனனிடம் சிக்குகிறார்கள் துல்கரும் ரக்ஷனும். பிறகுதான் தெரிய வருகிறது, அவர் தேடிவந்தது தங்களையல்ல, ரிதுவையும் நிரஞ்சனியையும் என்று. அவர்கள் யார், அவர்களை ஏன் கவுதம் மேனன் தேட வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமாக விடை சொல்கிறது படம்.
மோசடி விவகாரங்கள்
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி உட்பட தொழில்நுட்ப மோசடி விவகாரங்களை டீட்டெய்லாகவும் ரசிக்கும்படியாகவும் சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி. அவரது மேக்கிங்கும் சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முறையும் அழகு. அவர் காட்டியிருக்கும் அந்த மோசடி டெக்னிக்ஸ் ஆச்சரியம்.
நிறைவான நடிப்பு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில், துல்கர். ஆப் டெவலப்பர், ஆன்லைன் திருடன் என கேரக்டருக்குள் அப்படியே உட்கார்ந்து கொள்கிறார். அவரது நடிப்பில் அத்தனை இயல்பு. காதலியை கண்டதும் உருக்கும்போதும் தான் ஏமாற்றப்பட்டதைக் கண்டு அதிரும்போதும், கவுதம் மேனன் கரெக்டராக தங்களை தேடி வந்ததை கண்டு அதிரும்போதும் நிறைவான நடிப்பு.
டைமிங் காமெடி
அவரது நண்பராக வரும் ரக்ஷனுக்கு அறிமுக படம். தனது ரிங்டோன் மூலமாக அவர் பதில் சொல்லும் காட்சியும் அவரது டைமிங் காமெடியும் ரசனை. ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். அவரது அறிமுக காட்சியே அமர்க்களப்படுத்துகிறது. அவரது வசன உச்சரிப்புகளும் உடல் மொழியும் கச்சிதமாகப் பொருந்துகிறது, போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு. இனி நடிப்பில் அவர் பிசியாக வாய்ப்பிருக்கிறது.
சின்ன சின்ன குறைகள்
காதலுக்காக மட்டுமல்லாமல் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர், ரிதுவர்மாவுக்கு. சோக லுக்கில் வரும் அவரது பின்னணி தெரியும் போது அத்தனை அதிர்ச்சி. அவர் தோழியாக இயக்குநர் அகத்தியன் மகள் நிரஞ்சனா. சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பாஸ்கரனின் ஒளிப்பதிவில் பிரமாண்டம். சென்னையின் பரபரப்பையும் கோவாவின் அழகையும் ரசனையாகக் காட்டி இருக்கிறார். பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் ஹர்ஷவர்த்தனின் பின்னணி இசை பலம். படத்தின் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலுக்கு திருஷ்டி பொட்டுதான்!


Click it and Unblock the Notifications











