Kara Review: 'கர’ விமர்சனம்.. கொஞ்சம் குறையா?.. நிறைய குறையா?.. தனுஷ் நடிப்பு எப்படி?
சென்னை: போர் தொழில் படத்துக்குப் பிறகு விக்னேஷ் ராஜாவிடம் இருந்து ஒரு பக்காவான படம் தனுஷுக்கு வரும் அவருக்கு இந்த முறையாவது பிளாக்பஸ்டர் கிடைக்கும் என எதிர்பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கே இந்த படம் பலத்த ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.
இதுக்கு இட்லி கடை படமே தேவலாம் என சொல்லும் அளவுக்குத்தான் படத்தின் முதல் பாதி இருந்தது. 2வது பாதியில் கதையின் போக்கு மற்றும் சில நல்ல காட்சிகள் படத்தை காப்பாற்றினாலும், மொத்தமாக இதுவொரு பிளாக்பஸ்டர் மெட்டீரியல் அல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

இரவில் வங்கியில் கொள்ளையடிக்க கஷ்டமாக இருக்கு என்பதற்காக பட்ட பகலில் தனுஷ் முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க களம் இறங்குவதெல்லாம் குபீர் சிரிப்பை வரவழைத்து விடுகிறது. படத்தின் நிறை மற்றும் குறைகள் குறித்து விரிவாக அலசுவோம் வாங்க..
'கர' கதை: பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கே.எஸ். ரவிகுமார் மகனாக கரசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் ஒரு பக்கா திருடன். ஆரம்பத்திலேயே எம்எல்ஏ வீட்டில் திருடும் போது வசமாக மாட்டிக் கொள்கிறார். காவல் நிலையத்தில் சுராஜ் வெஞ்சரமுடுவை அடித்துப் போட்டு தப்பித்து ஓடும் கர தனுஷ் தனது மனைவி செல்லி மமிதா பைஜுவுடன் ரேணிகுண்டாவுக்கு போய் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார்.
ஆனால், மனைவியை வசதியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதால், தனியாக ஒரு இட்லி கடையை வைக்க திட்டமிட்டு வங்கிக்குச் செல்ல, சொத்து இருந்தா சொல்லுங்க லோன் தருகிறோம் என வங்கியில் சொல்ல, அப்பாவிடம் இருக்கும் நிலத்தை விற்று கடை வைப்பதற்காக மீண்டும் ராமநாதபுரத்துக்கு வருகிறார்.
ஆனால், வங்கியில் வாங்கிய கடனுக்காக நிலமே ஜப்தி செய்யபப்டும் நிலையில், உள்ளது. மகனின் எண்ணத்தை அறிந்து அப்பாவும் இறந்து விட அப்பாவை அவரது நிலத்தில் அடக்கம் பண்ணுவதற்காக மீண்டும் தனது திருட்டுத் தொழிலை கையிலெடுக்கிறார் கரசாமி.
போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சரமுடு இந்த முறை கரசாமியை கையும் களவுமாக பிடித்தாரா? இல்லையா? வங்கிகள் விவசாயிகளை எந்தளவுக்கு ஏமாற்றுகிறது என்பது தான் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் எந்தவொரு குறையும் வைக்காமல் கடைசி வரை இன்டென்ஸான படம் என்பதால் ரொம்பவே இன்டென்ஸ் ஆக நடித்துள்ளார். ஆனால், நமக்குத்தான் அவரது நடிப்பு பல படங்களில் பார்த்தது போலவே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஜெயராம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சூப்பராக எழுதப்பட்டு, இறுதியில் ரொம்ப சுமாராக முடிந்திருப்பது எல்லாம் சுமாரான திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு குறைபாடுதான் என சொல்ல வேண்டும். கருணாஸ் மற்றும் பிருத்வி பாண்டியராஜ் தனுஷுக்கு அல்லக்கைகளாகவே வருகிறார்களே தவிர அவர்கள் இல்லை என்றாலும் படம் நகர்ந்து விடும் அளவுக்குத்தான் கதை உள்ளது. அதே போலத்தான் ஹீரோயின் மமிதா பைஜுவின் கதாபாத்திரமும் ரொம்ப ரொம்ப குறைவான நிமிடங்களே வந்து போகிறார்.
படத்திலேயே பக்காவாக இருந்தது கே.எஸ். ரவிக்குமார் நடிப்பும் சுராஜ் வெஞ்சரமுடுவின் நடிப்பும் தான். படம் அடுத்த சீனில் சூடுபிடிக்கும் என இடைவேளை வரை காத்திருந்த ரசிகர்களுக்கு இடைவேளை முடிந்து கிளைமேக்ஸ் வரையிலும் கூட படம் பெரிதாக சூடு பிடிக்கவில்லை.
ஆரம்பத்தில், ஆட்கள் இல்லாத நேரத்தில் ஈராக் போர் செய்தியை பார்க்கப் போகும் போது திருடப் போவதாக காட்டுகின்றனர். ஆனால், இடைவேளைக்குப் பிறகு இஷ்டத்துக்கு ஒவ்வொரு வங்கிகளாக சென்று தனுஷ் கொள்ளையடிப்பது எல்லாம் லாஜிக் ஓட்டைகளாகவே உள்ளன.
பிளஸ்: ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. தனுஷ், கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் ஜெயரமின் நடிப்பு தான் படத்தை கடைசி வரை பல எதிர்பார்ப்புகளுடன் பார்க்க வைக்கிறது. அந்த அருவா சீன் மற்றும் சினிமா ஷூட்டிங் காட்சி தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக மாறுகிறது. படத்தின் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் அட்டகாசமாக கொடுத்துள்ளார். தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவதிப்படும் இடங்களில் தனுஷின் நடிப்பு அட்டாகசம்.
மைனஸ்: கதை மற்றும் திரைக்கதை ரொம்பவே டல்லாக எழுதப்பட்டது மட்டுமின்றி சுவாரஸ்யம் இல்லாமல், அப்படியே படம் சோக மையமாகவே கடைசி வரை செல்கிறது. அதே ராபின் ஹுட் கதையைத்தான் புதுசாக 'கர' எனும் டைட்டிலில் சில வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் கொடுத்திருக்கிறார். தனுஷுக்கு இன்னமும் பெட்டரான படமாக 'கர' வந்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications