Kasargold Review: மலையாளத்தில் ஒரு பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லர்... காசர்கோல்டு ஓடிடி திரைவிமர்சனம்!
சென்னை: மலையாளத்தில் மிருதுல் நாயர் இயக்கிய 'காசர்கோல்டு' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
ஆசிப் அலி, சன்னி வெய்ன், விநாயகன் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்போது திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது காசர்கோல்டு.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள காசர்கோல்டு படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

காசர்கோல்டு ஓடிடி திரை விமர்சனம்: வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் வெளியாகும் மலையாளத்தில், பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது காசர்கோல்டு. காடுகளில் மரங்கள் வெட்டி சம்பாதித்து வரும் நண்பர்கள் இருவருக்கு தங்க புதையல் கிடைக்கிறது. அதுவரை உயிர் நண்பர்களாக இருந்த இருவரும், தங்கத்திற்காக ஒருவரையொருவர் கொலை செய்கின்றனர். இந்த ஒருவரிக் கதை தான் 'காசர்கோல்டு' படம் என முதல் காட்சியிலேயே லீட் கொடுத்துவிடுகிறார் இயக்குநர்.
அதன்பின்னர் தான் காசர்கோல்டு படத்தின் கதை தொடங்குகிறது. ஆனால், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் முதல் இறுதிக் காட்சி வரை பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லராக நகர்கிறது. காசர்கோடு என்ற ஊரில் அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை ஒரு கும்பல் புரட்டி எடுக்கிறது. இதற்கு பழிக்குப் பழியாக இரண்டு இளைஞர்களை கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்த நான்கு பேரும் கேரளாவில் இருந்து தப்பிவிடுகின்றனர்.
இன்னொரு பக்கம் மனைவியின் சர்ட்ஃபிகேட் வாங்குவதற்காக திருவனந்தபுரம் கிளம்புகிறார் பைசல் (சன்னி வெய்ன்). அப்போது வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திக்கொண்டு காசர்கோடு வரும் அல்ஃபிக்கும் (ஆசிப் அலி) ஃபைசலுக்கும் இடையே ஒரு மோதல். இந்த சம்பவத்தின் இடையே ஆசிப் ஆலியின் காரில் இருந்த இரண்டரை கோடி மதிப்பிலான தங்கம் காணாமல் போகிறது. அதனை சன்னி வெய்ன் தான் திருடியிருக்க வேண்டும் என ஆசிப் அலியின் கும்பல் சந்தேகிக்கிறது.
இதனையடுத்து சன்னி வெய்னை தேடிச் செல்லும் ஆசிப் அலி கும்பல், அவனை கண்டுபிடித்தனரா, தங்கத்தை மீட்டார்களா என்பது தான் காசர்கோல்டு படத்தின் கதை. இதில் தங்கம் கடத்தியது சன்னி வெய்ன் மட்டும் இல்லை, அதற்கு ஆசிப் அலியும் சப்போர்ட் என்பது தெரியவரும் காட்சி செம்ம சர்ப்ரைஸ். இருவருக்கும் இடையே நட்பு உருவானது எப்படி என்பது இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக உள்ளது.
அதேபோல், ஆசிப் அலி, சன்னி வெய்ன் இருவரையும் போலீஸ் ஆபிஸர் விநாயகன் தேடி கண்டுபிடிப்பதும், அவரிடமிருந்து தப்பிக்கும் இருவரும் இன்னொரு கும்பலிடம் சிக்குவது இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியாக அந்த கும்பல் யார், அவர்கள் ஏன் ஆசிப் அலியையும் சன்னி வெய்னையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கினார்கள் என்பது அடுத்த சர்ப்ரைஸ். இப்படி படம் முழுவதும் அடுத்தடுத்து ட்வீஸ்ட் வைத்தே நகர்கிறது திரைக்கதை.
ஷார்ட் டெம்பராகும் ரங்கட் பாய் அல்ஃபி என்ற கேரக்டரில் ஆசிப் அலி. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக தங்கம் கடத்த வந்துவிட்டு பின்னர் குழந்தையை நினைத்து ஏங்கும் ஃபைசல் கேரக்டரில் சன்னி வெய்ன். பரம சாதுவாக இருந்துகொண்டு க்ளைமேக்ஸில் வில்லன்களை போட்டுத் தள்ளும் காட்சி செம்ம மாஸ். இருவருக்கும் டஃப் கொடுத்துள்ளார் விநாயகன்.
அந்தளவுக்கு டெரர்ரான போலீஸ் ஆபிஸரான விநாயகனை க்ளைமேக்ஸில் அப்படி பார்க்க பரிதாபமாக இருந்தது. படம் தொடங்கும் போது வரும் ஒருவரிக் கதையை, இறுதிக் காட்சியில் வேறுவிதமாக முடித்துள்ளது இயக்குநரின் டச். உண்மையான நட்புக்கு பணமோ தங்கமோ ஒரு விசயமே இல்லை. நட்பு எப்போதுமே உண்மையானது தான் என ஆக்ஷன் த்ரில்லர் ட்ரீட்டுடன் கொடுத்திருக்கிறார். நெட்பிளிக்ஸில் ட்ரெண்டிங்கில் இருக்கும் காசர்கோல்டு இந்த வாரம் விடுமுறையை கொண்டாட ஓடிடி ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











