Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
Saani Kaayidham Review : சாணி காயிதம் எப்படி?... ரத்தம், ரணம், ரௌத்ரம்
நடிகர்கள் - கீர்த்தி சுரேஷ், செல்வராகவன், கண்ணா ரவி, லிஸ்சி ஆன்டனி, வினோத் முன்னா
இயக்கம் - அருண் மாதேஸ்வரன்
தயாரிப்பு - செகவன் ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட்
இசை - சாம் சி.எஸ்
சென்னை : தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று சாணி காயிதம். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இணைந்து நடித்துள்ளதால் ஆரம்பம் முதலே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. டைரக்டர் செல்வராகவன், நடிகராக அறிமுகமான படம் இது தான். ஆனால் அவர் இரண்டாவதாக நடித்த பீஸ்ட் படம் முன்பே ரிலீசாகி விட்டது.
Recommended Video
ராக்கி படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள இரண்டாவது படம் சாணி காயிதம். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீசாகி உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் மே 5 ம் தேதி ரிலீசாகி உள்ளது. மே 6 ம் தேதி ரிலீஸ் என அறிவித்தவர்கள், மே 5 ம் தேதி இரவு 10 மணிக்கே படத்தை ரிலீஸ் செய்து விட்டார்கள்.
வழக்கமான சாதிய பிரச்சனை
தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் அதே பழிவாங்கும் கதை தான் சாணி காயிதத்தின் கதையும். படத்தின் கதை 1979 ல் நடப்பதாக காட்டப்படுகிறது. அதுவும் பரதேசபட்டினம் என்ற ஊரில் நடப்பதாக சொல்லகிறார்கள். வழக்கமான சாதி பிரச்சனை. மேல்சாதியை சேர்ந்த ரைஸ் மிஸ் முதலாளி, தவறாக பேசியதால், அங்கு வேலை செய்யும் கீழ் சாதியை சேர்ந்தவர் தட்டி கேட்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. மீண்டும் மன்னிப்பு கேட்டு வேலையில் சேர வரும் போதும் மனைவியை பற்றிய தவறாக பேசியதால் மேல் சாதி முதலாளிகள் கூட்டத்தை அவமதித்து விட்டு செல்கிறார்.
இதுதான் படத்தின் கதை
இதற்கு பழிவாங்குவதற்காக கீழ் சாதி தொழிலாளியின் மனைவி, போலீஸ் கான்ஸ்டெபிளாக இருக்கும் பொன்னியை (கீர்த்தி சுரேஷ்) மேல் சாதி கும்பல், கொடூரமாக தாக்கி, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்கிறது. அதோடு பொன்னியின் கணவர், பெண் குழந்தை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் குடிசைக்கு தீ வைத்து விடுகிறார்கள். தனது குடும்பத்தை அழித்து, தன்னையும் நாசம் செய்த கும்பலை பொன்னி எப்படி பழிவாங்குகிறாள் என்பது தான் சாயி காயிதம் படத்தின் கதை.
இப்படியா தலைசுற்ற வைப்பீங்க
பழைய படங்களில் வருவதை போலவே தனித்தனியாக சில சம்பவங்களை காட்டி, ஆரம்பத்தில் தலை சுற்ற வைக்கிறார்கள். பிறகு அந்த சம்பவங்களை ஒன்றோடு மற்றொன்றை தொடர்பு படுத்தி படத்தை கொண்டு செல்கிறார்கள். முதல் 30 நிமிடங்கள் என்ன நடக்கிறது, என்ன சொல்ல வருகிறார்கள், எதற்கு கொலை செய்கிறார்கள் என புரியாமலேயே சென்று கொண்டிருக்கிறது. செல்வராகவன் யார், அவருக்கும் கீர்த்தி சுரேஷிற்கும் என்ன தொடர்பு என்பதை ஒரு குட்டிபிளாஷ் பேக்கில், தனி டிராக்காக காட்டுகிறார்கள்.
ஒரே வரியில் படத்தின் கதை
மொத்தம் படத்தையும் 6 பாகங்களாக சொல்லி முடித்து முடித்து விட்டார் டைரக்டர். ஒரே வரியில் கதையை சொல்ல வேண்டுமானால், தனக்கு கொடுமை செய்தவர்களை பழிவாங்குவது. அதை ரொம்பவே ரண கொடூரமாக சொல்லி இருக்கிறார்கள். படம் முழுக்க ரத்தம் தெறிக்கிறது. முக்கால்வாசி படம் கத்திகுத்து, கடைசி கால்வாசி துப்பாக்கி சத்தம். ஃபர்ஸ்ட் ஆஃப் கொடுமையாக செல்கிறது. செகண்ட் ஆஃப் ரண கொடூரமாக உள்ளது. போஸ்டர், டிரைலர் என அதிகம் எதிர்பார்க்க வைத்து, படத்தில் ஏமாற்றி உள்ளார் டைரக்டர். இதுக்கு தானா இத்தனை பில்ட்அப் என கேட்டு தோன்றுகிறது.
பட்டையை கிளப்பிய கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல் பட்டையை கிளப்பி உள்ளார். அதிலும் பழிவாங்குவது என்றால் என்ன என்று செல்வராகவனிடம், "குத்தி குத்தி கொல்லனும். வெட்டி வெட்டி துண்டு துண்டாக வெட்டி கொல்லனும்" என சொல்லும் சீனில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பிற்கு நேஷனல் அவார்டே கொடுக்கலாம். செல்வராகவனும் தன் பங்கிற்கு போட்டி போட்டு அசத்தி உள்ளார். "உன்னை வண்டி ஓட்ட சொல்லி விட்டு நான் நெஞ்சு வலி வந்து இருக்க முடியாது" என செல்வராகவன் டயலாக் பேசும் சீனில் பீஸ்ட் படத்தில் வரும் நக்கல் செல்வராகவன் கேரக்டர் லேசாக எட்டி பார்க்கிறது. கீர்த்தி சுரேஷின் மகளாக நடித்துள்ள சிறுமி, செம க்யூட்டாக, யதார்த்தமாக நடித்துள்ளார். சில சீன்களில் மட்டுமே வந்தாலும் செம க்யூட். கீர்த்தி சுரேஷ் மிக சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை பேசி நடித்துள்ளார். சாம் சி.எஸ்.,ன் பிஜிஎம் இசையில் கலக்கி உள்ளார்.
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
செல்வராகவனும், கீர்த்தி சுரேசும் அண்ணன்- தங்கை. சிறு வயதிலிருந்து பகையாளியை போல் நடந்து கொள்வதாக சொல்லப்படுபவர் திடீரென செல்வராகவனுடன் ஒன்றாக சேர்ந்து கெட்டவர்களை பழிவாங்க கிளம்பி செல்வது நம்பும் படியாக இல்லை. அதே போல் கீர்த்தி சுரேஷை பழிவாங்க தூண்டுவதற்காக தன்னுடைய வாழ்க்கை பற்றி செல்வராகவன் சொல்லும் சீன், வேண்டுமென்றே அந்த இடத்தில் திணிக்கப்பட்டதை போல் உள்ளது. படம் முழுவதையும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்கி உள்ளனர். அதற்காக கண்ணுக்கு எட்டி தூரம் வரை மணல், கடலை தவிர வேறு ஏதும் இல்லாத இடத்தில் தனியாக ஒரு குடிசை வீடு, தனியாக டீக்கடை இருப்பது போல் காட்டி இருப்பது காட்சிக்கு அழகாக இருந்தாலும் கதைக்கு செட் ஆகவில்லை. கடலோரத்தில் வாழ்பவர்களுக்கு ரைஸ் மில் வேலையை விட்டால் வேறு வழியே இல்லை என்பதை போல மன்னிப்பு கேட்டு வேலை பார்க்க சொல்லி கணவரிடம் கீர்த்தி சுரேஷ் சொல்வதும் நம்பும் படியாக இல்லை.
சாணி காயிதம் 2 இயக்க போகிறாரா
டைரக்டர், டிரைலர் உருவாக்கும் வரை ஒரு க்ளைமாக்சையும், அதற்கு பிறகு அதை மாற்றி மற்றொரு க்ளைமாக்சையும் உருவாக்கி இருப்பார் போல. ஏன் என்றால் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் கீர்த்தி சுரேசும், செல்வராகவனும் கையில் ரத்த கரையுடன் தரையில் குத்தவச்சு உட்கார்ந்திருப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அப்படி ஒரு சீன் படத்திலேயே இல்லை. அதே போல் டீசரில், பாலடைந்த கட்டிடத்தில் தூரத்தில் ஒருவரை எரிப்பதை போல் காட்டுவார்கள். அதுவும் படத்தில் இல்லை. டிரைலரில் கையில் விலங்குடன் உட்கார வைத்து கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனிடம் தனித்தனியாக எத்தனை கொலை செய்தீர்கள் என போலீஸ் ஒருவர் விசாரிப்பதை போல் ஒரு சீன் இருக்கும். அதுவும் படத்தில் இல்லை. அவர்கள் கைது செய்யப்படுவதை போல் ஒன்று படத்தில் கிடையவே கிடையாது. ஒருவேளை டைரக்டர் சாணி காயிதம் 2 எடுக்கும் ஐடியாவில் இருக்கிறாரோ என்னவோ.
எதுக்கு இந்த பில்டப் சீன்
பழிவாங்குவதை தவிர படத்தில் வேறு ஒன்றும் இல்லை. பழிவாங்குவதை காட்டுவதாக சொல்லி ரசிகர்களை பழிவாங்கி விட்டார் டைரக்டர். ஆரம்பம் முதல் கீர்த்தி சுரேசை பாவப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணாக காட்டி விட்டு, கடைசியில் வேனை வெறித்தனமாக ஓட்டி, அடியாட்கள் சிலரை பறக்க விடுவதாகவும், சீவலப்பேரி பாண்டி பட நெப்போலியன் ரேஞ்சிற்கு முதுகில் அரிவாளை சொருகியபடி, தாவி குதித்து வந்து வெட்டுவது எல்லாம் ரொம்பவே செயற்கையாக, சினிமாத்தனமாக உள்ளது.
மக்களின் ரேட்டிங் என்ன
பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெறியாக பழிவாங்குவதை இன்னும் கொஞ்சம் சாதாரணமாக காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஓடிடி ரிலீஸ் என்பதற்காக ஓவராக ரத்தத்தை தெறிக்க விட்டு, கெட்ட வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார் டைரக்டர். மொத்தத்தில் சாணி காயிதம் சுமாரை விட கம்மி தான். கீர்த்தி சுரேஷின் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்தாலும், அவரின் அசத்தல் நடிப்பிற்காக மக்கள் இந்த படத்திற்கு 5 க்கு 2.5 என்ற அளவில் ரேட்டிங் தந்துள்ளனர்.