Kingdom Review: கிங்டம் விமர்சனம்.. வெற்றி மகுடத்தை நூலிழையில் கோட்டை விட்டுட்டாரே விஜய் தேவரகொண்டா!
சென்னை: ரயில் நிலையத்தில் நானி கத்திக் கூச்சலிடுவது போல ஒரு மிகப்பெரிய வெற்றியை விஜய் தேவரகொண்டாவுக்கும் ஜெர்ஸி பட இயக்குநரான கெளதம் தின்னனூரி கொடுப்பார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே இந்த கிங்டம் படம் அளித்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்கள் போல மீண்டும் ஒரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தை கொடுத்து விட வேண்டும் என கடுமையாக உழைத்து வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த படமும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக மாறிவிட்டது.

ஒரு படத்தின் முதல் பாதியை இயக்குநர்கள் செதுக்கும் அளவுக்கு 2ம் பாதியை செதுக்க சரியாக நேரம் கொடுக்கப்படுவதில்லையா? அல்லது இயக்குநர்களே தடுமாறுகிறார்களா? என்கிற கேள்விகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது இந்த கிங்டம்.
கிங்டம் கதை: ஆயிரத்தில் ஒருவன் படத்தை போல தூதுவன் வருவான் நம்மை காப்பாற்றுவான் என இலங்கையில் ஒரு ஆதிவாசி கூட்டம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதற்கு தலைவனாக சிறு வயதில் அம்மாவை அடித்த அப்பாவை கொன்றுவிட்டு தப்பிச் செல்லும் சிவா (சத்யதேவ்) மாறுகிறான். தங்கக் கடத்தல் பிசினஸ் செய்யும் கூட்டத்தை பிடிக்க வேண்டும் என அண்டர்கவர் ஆப்பரேஷன் சூரிக்கு (விஜய் தேவரகொண்டா) வழங்கப்படுகிறது. அண்ணன் தான் அந்தக் கூட்டத்தின் தலைவன் என்பதை அறிந்துக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா அவரை கைது செய்தாரா? அல்லது காப்பாற்றினாரா? அல்லது அந்த கூட்டத்துக்கே தலைவனாக மாறினாரா? என்பது தான் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: விஜய் தேவரகொண்டாவின் நடிப்புக்கு 100க்கு 200 மார்க் கூட போடலாம். அந்தளவுக்கு மனுஷன் தனது ஒட்டுமொத்த உடலையும் படத்துக்காக உருக்கியிருக்கும் விதம் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. எப்படியாவது விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு பான் இந்தியா வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என இயக்குநர் கெளதம் தின்னனூரி முதல் பாதியில் போட்ட உழைப்பு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆனால், 2ம் பாதியில் எங்கே என்ன பிரச்சனை வெடித்தது என்று தெரியவில்லை, படம் டிராக் மாறி சென்று ஆடியன்ஸை கடுப்பாக்கி விடுகிறது.
பிளஸ்: அனிருத்தை ஏன் கடத்திச் செல்ல வேண்டும் என்றெல்லாம் விஜய் தேவரகொண்டா இயக்குநரை விட அவரை அதிகம் புகழ்ந்தார் என்பது படத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். டெட் ஸ்லோவில் நகரும் 2ம் பாதியில் அனிருத்தின் இசை மட்டுமே ரசிகர்களை தூங்க விடாமல் செய்கிறது. தேவரா படத்தை எப்படி முடிந்த வரை அனிருத் காப்பாற்ற முயற்சித்தாரோ அதே வேலையை இந்த படத்திலும் அவர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதாரன், ஜோமோன் டி. ஜானின் வொர்க் அவர்கள் உருவாக்கிய அந்த கிங்டம் எல்லாம் பக்காவான விஷுவல் ட்ரீட் என்று தான் சொல்ல வேண்டும்.
மைனஸ்: வழக்கம் போல இந்த படத்திலும் ஹீரோயினுக்கு பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. கதையே அண்ணன் - தம்பி பாண்ட் தான். ஆனால், அதில், ரசிகர்களை சரியாக கனெக்ட் செய்யும் எமோஷனை ஸ்ட்ராங்காக எழுதாமல், திரையிலும் அதை காட்சிப்படுத்தாத இடத்தில் கெளதம் செய்த தவறுகள் படத்துக்கு பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டன. ஆனாலும், விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு, முதல் பாதியில் படம் செல்லும் விதம் கிளைமேக்ஸில் படத்தை முடித்த விதத்திற்காக தாராளமாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











