kingston Review: கடலுக்குள் ஆட்டம் போடும் கன்னி பேய்கள்.. காதை கிழிக்கும் சவுண்ட்.. ஜி.வி.க்கு ஹிட் கதைதானா?
நடிகர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
இயக்கம்: கமல் பிரகாஷ்
ரேட்டிங்:
சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, நடிகராக வலம் வந்த ஜி.வி. பிரகாஷ் கிங்ஸ்டன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானபோதே கிங்ஸ்டன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. ஜி.வி.யின் 25வது படமான கிங்ஸ்டன் மக்கள் ரசிக்க கூடிய திகில் படமாக உருவாகியுள்ளதா அல்லது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்திற்கு இணையான தமிழ் ஒரு படமாக உள்ளதா என்பதை இதில் காணலாம்.
கிங்ஸ்டன் கதை: படம் தொடங்கும்போதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் மீனவ கிராமத்தில் கதை தொடங்குகிறது. அங்கிருக்கும் மீனவ மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை. அப்படியே மீன்பிடிக்க சென்றாலும் பிணமாகத்தான் கரை ஒதுங்குகின்றனர். 1982இல் இறந்து போன போஸ் என்பவரின் கெட்ட ஆத்மா தான் கடலுக்கு செல்லும் எல்லோரையும் மீன் பிடிக்க விடாமல் ஆட்டி படைக்கிறது என மக்கள் எல்லோரும் நம்ப தொடங்குகின்றனர். அதே நேரத்தில் தூவத்தூர் கிராமத்தில் இருக்கும் கன்னி பெண்களும் இருட்டில் மாயமாகி அடுத்த நாள் பிணமாக கரை ஒதுங்குகின்றனர். அடுத்தடுத்து நடக்கும் மர்மங்களுடன் தூவத்தூர் மீனவ கிராமத்தில் பிண வாடை தான் அடிக்கிறது. 1982இல் தொடங்கும் கதைக்கு 2025இல் முடிவு கிடைக்குமா தூவத்தூர் மக்களை நாயகன் கிங் மீட்டாரா என்பதே கதை.

ஊர் பெரிய மனுஷன்: தூத்துக்குடி கடலையே கட்டி காக்கும் ஊர் பெரிய மனுஷன் தாமஸ். தூத்துக்குடியில் இருக்கிற மீனவ கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாமே தாமஸ் பணத்தில் தான். ஆட்டிப்படைக்கும் ஆவியும் அமானுஷ்யம் நிறைந்த தூவத்தூர் கிராமத்தில் இருந்து யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை. அந்த ஊருக்கு மீன்பிடிக்க அரசாங்கமே தடை போடுகிறது. இதனால், தாமஸ் என்கிற பெரிய மனுஷன் தயவில் தான் ஹீரோ கிங் வாழும் தூவத்தூர் மீனவ கிராம மக்கள் அண்டி பிழைக்கின்றனர். தாமஸ்க்கு அடியாள் ஆகவும், அவர் கண் அசைத்தால் எல்லா வேலையும் செய்து முடிக்கும் நாயகன் கிங்.
கடல் அட்டை கடத்தல்: கிங்கிற்கு (ஜி.வி.பிரகாஷ்) ஒரு போட் வாங்கி மீன் பிடித்து பெரிய மனுஷனா வரனும் என்பது தான் வாழ்நாள் ஆசை. அதற்காக பிணத்தில் இருந்து வரும் பணமா இருந்தாலும் சரி உழைத்து சம்பாதித்தாலும் தான் முக்கியம் என இருக்கிறான். தாமஸ் சொல்படி நடக்கும் கிங் கடலுக்கு தனது சேக்காளிகளுடன் சென்று கடல் அட்டையை கடத்தும் வேலையை செய்து வருகிறான். அப்போது ஒரு சின்ன பையனும் உங்க கூட நானும் கடலுக்கு வரேன் என்னையும் சேர்த்துக்கோங்க என்று சொல்கிறான். ஆனால், கிங் சேர்க்க மறுக்கிறான். பணம் கொடுக்கிறேன் என்றதும் ஜி.வி.பிரகாஷ் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டு கடலுக்கு அழைத்து செல்கிறான். கடல் அட்டையை கடத்த போன இடத்தில் வரும் சிக்கல், இதில் இருப்பது கடல் அட்டைதானா என சிறுவன் சந்தேகம் எழுப்ப ஜி.வி.பிரகாஷ் அவன் சொல்வதை கேட்க மறுக்கிறான்.

திகில்: சிறுவன் மரணத்திற்கு பிறகு கதை சற்று தடுமாறுகிறது. கடத்துவது கடல் அட்டை இல்லை போதை பொருள் என்று தெரிந்ததும் கிங் அதிர்ச்சியுறுகிறான். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இந்தக் கதையில் இயக்குநர் கமல் பிரகாஷ் எதைத்தான் சொல்ல வருகிறார் என்பது சற்று தடுமாற்றமாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் காற்று, மழை, கடல் சீற்றம் கடல் முழுக்க மண்டை ஓடுகள் என திகிலை ஏற்படுத்தினாலும், பெரிதான ஒரு மர்மத்தை பார்த்த பீல் வரவில்லை என்பது கொஞ்சம் வருத்தம். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கடலுக்குள்ளே படம் நகர்கிறது.
பிளஸ்: கிங்ஸ்டன் படத்தில் நடித்த அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், தூவத்தூர் மீனவ மக்களாக வந்து சென்றவர்கள், மேற்குத்தொடர்ச்சி மலை ஆண்டனி, ஜி.வி.பிரகாஷூக்கு நண்பர்களாக வந்தவர்கள் அனைவரும் மிக அற்புதமாக நடித்திருந்தனர். மீனவ கிராமத்தை வைத்து திகில் நிறைந்த பேய் படமாக எடுக்க முயற்சித்த அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷை பாராட்டலாம். கடலுக்குள் அமானுஷ்யத்தை கண்முன்னே நகர்த்தி கொண்டு சென்றுவிட்டார். தாமஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த தாமஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மைனஸ்: நடிகராக ஜி.வி.பிரகாஷ் ஸ்கோர் செய்தாலும், பின்னணி இசையில் சொதப்பியுள்ளார் என்றே தோன்றுகிறது. திகிலை காட்டுவோம் என்ற பெயரில் காதை கிழிக்கும் அளவிற்கு சவுண்ட்டை கூட்டியதால் காதில் இருந்து ரத்தம் தான் வருகிறது. திகில், அமானுஸ்யம், கன்னி பேய்கள் என அலறவிட்டாலும், சவுண்டை காட்டி பயமுறுத்த நினைத்த ஐடியாவை யார் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. சப்தம் படத்திலும் இதேபோன்ற பிரச்னைகள் வந்தன. முதல் பாதி இதுதான் கதை என்ற பின்பும், இரண்டாம் பாதி ஏன் இவ்வளவு தடுமாற்றம் என தெரியவில்லை. ஒரு வேளை பேயை காட்டுவதற்காக படத்தை ஜவ்வு மாதிரி இழுத்திருப்பது நியாயமா இயக்குநரே. ஒரு நல்ல கதையம்சம் கொண்ட சப்ஜெக்டில் சற்று தடுமாறியுள்ளது. கடலை தேர்ந்தெடுத்த இயக்குநர் கமல் பிரகாஷ் கடல் அலைபோல் தடுமாறாமல் கொஞ்சம் கப்பலை சாமர்த்தியமாக நகர்த்தியிருந்தால் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தை தூக்கி சாப்பிட்டிருக்கலாம்.
இசை: ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் நன்றாக இருந்தது. ராசா ராசா பாடல் கேட்க நன்றாக உள்ளது. ஆனால், படத்தோடு ஒன்றமுடியாதது வருத்தம். மீண்டும் மீண்டும் கேட்பது இதுதான் காதை கிழிக்கும் அளவிற்கு சவுண்ட் தேவையா என்பதே கேள்வி.
பாராட்டு: 40 வருடத்திற்கு முன் நடந்த ஒரு மரணம், தங்கத்தின் மீது இருக்கும் பேராசையால் ஒரு மீனவ கிராமம் அழியும் நிலைக்கு செல்கிறது. முதல் பாதியில் இதுதான் கதை என்பதை இயக்குநர் கமல் பிரகாஷ் சொல்ல முயற்சித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் கடலுக்குள் பேய்களின் ஆட்டத்தால் கதறவிட்டுள்ளார். கன்னி பேய்கள், புகைமண்டலம், மழை, புயல் என பிரம்மிக்க வைத்துள்ளார். குறிப்பாக கடலை பிரம்மித்து பார்க்கும் வகையில் இரண்டாம் பாதி இருப்பது பாராட்டக்குறியது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நல்ல முயற்சி தெரிகிறது. விஎப்எக்ஸ் காட்சிகள் அற்புதப்படுத்தியுள்ளனர். குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











