Empuraan Review: எம்புரான் விமர்சனம்.. நிழல் உலக தாதாவாக மிரட்டிய மோகன் லால்.. பிரித்விராஜ் சொதப்பல்!
திருவனந்தபுரம்: நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மலையாள திரையுலகின் டெமி காடான லாலேட்டன் மோகன்லால் நடித்திருக்கும் லூசிஃபர் இரண்டாம் "பாகம் எல் 2 எம்புரான்". இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பான் இந்தியா படமாக வந்துள்ள எம்புரான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? பலரது பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இதில் காணலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் லூசிஃபர்.அந்த படத்தில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி மெகா ஹிட் படமாக மாறியது. இப்படம் அப்போத 200 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற சாதனையை படைத்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 6 ஆண்டுகள் கழித்து லூசிஃபர் படத்தின் 2ஆம் பாகமான எல் 2 எம்புரான் இன்று வெளியாகியிருக்கிறது. லூசிஃபர் படம் பார்க்காதவர்களுக்கு இப்படத்தின் நீழ்ச்சியை அறிவது கடினம். காரணம் முதல் பாகம் முழுக்க முழுக்க அரசியலும் அதன் பின்னர் துரோகிகளை கண்டுபிடித்து களை எடுப்பது போன்று அமைத்திருப்பார் பிருத்விராஜ்.

லூசிஃபர் படத்தில் லாலேட்டன் மோகன்லாலை சுற்றித்தான் படமே அமைந்திருக்கும். ஒரு கேள்வி, பல காரணங்கள் படம் பார்த்தவர்களை மட்டும் அல்ல, படத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களுக்கும் அந்த கேள்ி இருந்தன. ஸ்டீபன் யார் அவருக்கு மறைந்த முதல்வர் பிகேஆர் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பது கேள்வியாக இருந்தது. படம் பார்ப்பவர்களுக்கே அவர் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்தது. அதன் வேர்களை தேடி தொடர்ந்துள்ள இரண்டாம் பாகம் தான் எல்2 எம்புரான். ஸ்டீபனின் மற்றொரு பெயர் குரேஷி ஆப்ரகாம்.
எல் 2 எம்புரான் கதை: கேரளா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐயுஎஃப் கட்சியின் தலைவர் பிகேஆர் மறைவுக்கு பிறகு அவரது மகனான ஜத்தின் ராம்தாஸ் ( டோவினோ தாமஸ்) முதல்வர் அரியணையில் அமர்கிறார். ஆனால், ஜத்தின் ஆட்சியில் அதிகாரமும் ஊழலும் ஆட்டி படைக்கிறது. மக்களின் தலைவர் என்பதை மறந்து ராஜாவின் மகனை போல் செயல்படுவதாக ஐயுஎஃப் கட்சியில் இருப்பவர்களே விமர்சிக்கின்றனர். மற்றொரு பக்கம் முதல்வரின் அக்காவாக வரும் பிரியா (மஞ்சு வாரியர்) இதனை எதிர்த்து கேள்வி கேட்கிறார். ஆனால் எந்த பலனும் இல்லை. பிகேஆர் கட்டி காத்த கட்சியையும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சுக்கு நூறாக உடைக்கிறார் ஜத்தின் ராமதாஸ். ஒரு மாநிலத்திற்குள் மதவாத சக்தி கொண்ட பணபலம் பொருந்திய கட்சியான ASF உடன் ஜத்தின் ராமதாஸ் ( டோவினோ தாமஸ்) கூட்டணி வைப்பதாக அறிவிப்பது கட்சியில் இருப்பவர்களுக்கே பிடிக்கவில்லை.

மிக அரக்க குணம் படைத்த பஜ்ரங்கி ஏன் கேரளாவிற்குள் வர வேண்டும் என்ற மிகப்பெரிய கேள்வியுடன் இன்வஸ்டிகேட் ஜெர்னலிஸ்ட் கோவர்தன் கேட்கும் கேள்வியுடன் கதை தொடங்குகிறது. இது ஒரு பக்கம் இருக்க உலக மாஃபியா கேங்ஸ்டர்களையே மிரள விடுகிறார் ஸ்டீபன் என்ற குரேஷி ஆப்ரகாம். போதை கும்பலை அழித்து ஒழித்து உலக மக்களை காக்கும் தலைவனாக குரேஷி ஆப்ராமாக லாலேட்டன் வருகிறார். இதற்கிடையில் கேரள மாநிலத்தில் அரசியல் ஆடுபுலி ஆட்டம் வேறு. நெடுபள்ளியை கட்டி ஆண்ட ஸ்டீபன் எப்போது வருவார் இந்த மக்களை காப்பார் என்ற ஆவலும் அதிகரிக்கிறது. மக்களின் தலைவனாக இருந்த ஸ்டீபனுக்கு பிடித்த இடமான நெடுபள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய அணையால் மக்களுக்கே பேராபத்து இருக்கிறது. இதில் இருந்து மக்களை காக்கவும், தவறான பாதையில் செல்லும் பிகேஆர் மகனான ஜத்தின் ராமதாஸை என்ன செய்தார். IUF கட்சியை ஸ்டீபன் மீட்டாரா? இன்டர்நேஷனல் கேங்ஸ்டராக இருக்கும் குரேஷி ஆப்ரகாம் என்பவர் யார்? என்பது தான் படத்தின் கதையே.
பிளஸ்: குரேஷி ஆப்ரகாமாக வரும் லாலேட்டன் ஸ்டைலிஷான லுக்கில் வந்து மிரட்டி செல்கிறார்.அவர் வந்து செல்லும் காட்சிகள் அனைத்து மாஸ் தான். விசில் சத்தம் தியேட்டரை கிழிக்கிறது. எம்புரான் படத்தை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ஹாலிவுட் தரத்திலான படத்தை பார்த்த அனுபவத்தை தரும். உலகத்தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தை தர இயக்குநர் பிருத்விராஜ் முயற்சித்திருக்கிறார். படத்திற்கு மற்றொரு பலமே இப்படத்தின் கதாசிரியர் முரளி கோபி. முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு கதையை புரிய வைக்க முயற்சித்திருக்கிறார். அதற்கான மெனக்கடல் இதில் தெரிகிறது. படத்தின் வசனங்களும் கைதட்டல்களை பெறுகின்றன.

மைனஸ்: எம்புரான் படத்தை மிக மோசமானது என்றோ சுமாரான படம் என்றோ கூறிவிட முடியாது. படத்தை காணும்போது பிருத்விராஜின் உழைப்பு தெரிகிறது. மஞ்சு வாரியரின் அறிமுக காட்சிகளில் பெரிதான ஈர்ப்பை தரவில்லை. மோகன்லால் வந்து செல்லும் காட்சிகள் பிரம்மாண்டத்தை தந்தாலும் உணர்ச்சி பொங்கும் அளவிற்கு பார்வையாளரோடு கனெக்ட் ஆகவில்லை என்பது வருத்தமே. இப்படத்தின் சில காட்சிகளை காணும் போது சலார் படத்தின் எபெக்ட் இதில் தெரிகிறது. ஒருவேளை சலார் படத்தில் பிருத்விராஜ் நடித்ததால் அதேபோன்று சண்டை காட்சிகளை எடுக்க முயற்சித்திருக்கிறார். அதேபோன்று மோகன்லால் வரும் காட்சிகள் எல்லாம் ஜெயிலர் படத்தில் ரஜினியை நடக்கவிட்டு பின்னால் இருந்து துப்பாக்கிகளால் சுடும் காட்சிகள் தான் வந்து செல்கின்றன. வில்லனாக வரும் அபிமன்யூ சிங் பலவீனமாக தெரிகிறார். இன்னும் பலம் சேர்த்திருந்தால் மைனஸ் கொஞ்சம் குறைந்திருக்கும்.
முரளி கோபி: படத்திற்கு திரைக்கதை எழுதிய முரளிகோபியை பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் பர்ஸ்ட் ஆஃபில் ரசிகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவரது மெனக்கடல் நன்றாக தெரிகிறது. 3 மணி நேர படத்தினை போர் அடிக்காமல் ரசிகர்களை கவரும் வகையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். ஆனால், ஆக்சன் காட்சிகளை தாண்டி எமோஷனால ஒரு காட்சி கூட மனதில் பதியவில்லை என்பது வருத்தமே. அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வில்லன் அபிமன்யூ சிங்: இவர் உயிரை கொடுத்து நடித்தாலும் அந்தப் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வதில்லை. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தவிர அவர் நடித்த வேலாயுதம், அண்ணாத்த போன்ற படங்கள் தமிழில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ரத்தம் தெறிக்க கொலைகள், கர்ப்பிணிகளை கொடூரமாக தாக்கும் காட்சிகளில் இருக்கும் ரணத்தை மற்ற காட்சிகளிலும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலா்ம் அபிமன்யூ சார். வழக்கமான ஒரு வில்லன் வந்து செல்வது போன்று தான் இருந்தன.
பிருத்விராஜிடம் ரசிகர்கள் கேள்வி: எல் 2 எம்புரான் மிகப்பெரிய பொருட்செலவில் வந்திருந்தாலும் கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் வருத்தம் அடைகின்றனர். ஹாலிவுட் தரத்திற்கு எடுத்திருப்பதை பாராட்டுகிறோம். ஆனால், படம் மோகன் லால் படமா பிருத்விராஜ் படமா என்பது குழப்பமாக இருக்கிறது. ஸ்டீபன் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை 3ஆம் பாகத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார். கடைசிவரை குரேஷி ஆப்ரகாம் யார் என்பதை எம்புரானில் சொல்லவே இல்லை என ரசிகர்கள் கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications











