Don't Miss!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
Maamanithan Review: அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்.. மாமனிதன் விமர்சனம்!
நடிகர்கள்: விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம்
இசை: இளையராஜா - யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சீனு ராமசாமி
சென்னை: மனசாட்சிக்கு பயந்து ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்கிற ஒன் லைனை அழகாக படமாகவும் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து 4வது முறையாக விஜய்சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி அமைந்துள்ளது.
விக்ரம் படத்தில் வெறித்தனமான சந்தனமாக நடித்த விஜய்சேதுபதியா இது என காட்சிக்கு காட்சி வியக்க வைக்கிறார்.
சந்தனமாக மிரட்டிய விஜய்சேதுபதி.. அடுத்து ஹீரோவாக அசத்தப்போகும் மாமனிதன் எப்போ ரிலீஸ் தெரியுமா?
என்ன கதை
"அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்" என்கிற ஆழமான அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் படத்தின் கதையே புரிகிறது. அப்படியொரு சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு. அதிகம் படிக்காத விஜய்சேதுபதி அந்த ஊரிலேயே முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக ஆகிறார். ஊரில் நல்ல மனிதன் என்கிற பெயரை எடுக்கும் விஜய்சேதுபதிக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட அதிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மாமனிதன் படத்தின் கதை.
நல்லவன்னு பெயர் எடுக்க நாளாகும்
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அந்த பால் குடமே எப்படி விஷமாக மாறிவிடுகிறது என்பதை கதையின் போக்கிலேயே சொல்லி இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. கத்தி, துப்பாக்கி, அடிதடி என சாமானிய மக்களின் வாழ்வில் அன்றாடம் நிகழாத எதார்த்தத்தை மிஞ்சிய சினிமாக்களே நம்மை பிரம்மிக்க வைக்கும் நிலையில், வாழ்வியலாக வந்து ரசிக்க வைத்துள்ளது விஜய்சேதுபதியின் மாமனிதன். நல்லவன்னு பெயர் எடுக்க நாளாகும் என சொல்வார்கள், இந்த படத்தில் விஜய்சேதுபதி எப்படி மக்களின் நம்பிக்கை பெறுகிறார் என்பதை காட்சியாக காட்ட அவரது ஆட்டோவில் பயணம் செய்யும் ஒருவரின் நகை ஆட்டோவிலேயே மிஸ் ஆகிவிடுகிறது. அதை தனது இஸ்லாமிய நண்பராக வரும் 'ஜோக்கர்' குரு சோமசுந்தரத்துடன் சேர்ந்து கண்டு பிடித்து கொடுக்க ஹீரோயின் காயத்ரியின் கல்யாணத்திற்காக அவங்க அப்பா சேர்த்து வைத்த நகை தான் காணாமல் போனது என்பது தெரிய வருகிறது. ஆட்டோக்காரர்கள் நகையை திருப்பிக் கொடுத்தார்கள், பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள் என நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ரஜினியின் பாட்ஷா படத்திலும் இதுபோல ஒரு காட்சி இருக்கும்.
வஞ்சகர் உலகம்
காயத்ரிக்கு அவங்க அப்பா மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து கொள்ளும் விஜய்சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வருவது போல அவரும் அதற்கு உதவி செய்வது போல, தனது ஜாதகத்தையும் உள்ளே வைக்கிறார். காயத்ரியை ஒரு தலையாக காதலிக்க பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தை குட்டி என சந்தோஷமாக செல்லும் குடும்பத்தில் திடீரென ஒரு சுனாமியாக ஒரு பிரச்சனை கிளம்புவதில் தான் மாமனிதன் படமே ஆரம்பிக்கிறது. வஞ்சகர் என தெரியாமல் தொழிலதிபர் ஒருவரது வலையில் சிக்கி தன்னுடைய பெயரையே கெடுத்துக் கொள்ளும் விஜய்சேதுபதி அந்த ஊரை விட்டும் தனது குடும்பத்தையும் விட்டு ஓடி ஒளிய வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.
மனசாட்சி
தொலைத்த இடத்தில் தானே இழந்த பொருளை தேட முடியும் என தன்னையும் ஊரையும் ஏமாற்றும் அந்த நபரை தேடி அலையும் ஹீரோ, குடும்பத்தை காப்பாற்ற சம்பாதித்து தனது இஸ்லாமிய நண்பரான குரு சோமசுந்தரத்தின் மூலம் பணம் அனுப்பி வைக்கிறார். ஒரு கட்டத்தில் ஏமாற்றியவரை கண்டுபிடிக்கும் இடத்தில் நடக்கும் ட்விஸ்ட், கர்மா இஸ் பூமராங் என்பதை சொல்கிறது. மனிதன் மனசாட்சிக்கு பயந்து வாழும் போது மாமனிதனாக மாறுகிறான் என்கிற பாடத்தைத் தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமி சொல்ல முயன்றிருக்கிறார்.
பலம்
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போலவே இதுவும் ஒரு வாழ்வியல் சார்ந்த படம் தான். செல்போன் எல்லாம் இல்லாத காலத்தில் உருவான கதையாக இருக்கிறது. விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், மலையாள நடிகை ஜுவல் மேரி என குறைந்த கதாபாத்திரங்களே படத்தில் இருந்தாலும், அவர்களின் நடிப்புத் தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. கிளைமேக்ஸ் நெருங்கும் அந்த கடைசி 35 நிமிடங்களில் பல இடங்களில் இயக்குநர் ரசிகர்களை அழ வைத்து வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர வைத்துள்ளார்.
பலவீனம்
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா முதன்முதலாக இணைந்து இசையமைத்த படம் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் தர்மதுரை படம் அளவுக்கு பாடல்களோ அல்லது பின்னணி இசையோ சொல்லிக் கொள்ளும்படி இல்லாதது மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டது. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மகாநதி, நான் கடவுள் என பல படங்கள் கண்முன்னே வந்து செல்வதும் மிகப்பெரிய குறையாகத்தான் தெரிகிறது. மேலும், ஒரு சில இடங்களில் விஜய்சேதுபதி மற்றும் குரு சோமசுந்தரத்திற்கு பிராம்ப்டிங் செய்யப்பட்டு இருப்பதை பார்த்தால் சீரியல் ஃபீலிங் வந்துவிடுகிறது. இதுபோன்ற சில தவறுகளை சீனு ராமசாமி சரி செய்திருந்தால் நிச்சயம் மாமனிதன் ஒரு மகத்தான படமாக வந்திருக்கும்!