'கிராமம்னா எல்லாரும் ஒண்ணாக்கூடி பொங்கல் கொண்டாடிட்டு இருப்பாங்கனு நினைச்சியா'!
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் மனுசங்கடா.
Recommended Video

சென்னை: சாதிவெறி, தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கிறது 'மனுசங்கடா' திரைப்படம்.
நாயகன் கோலப்பனின் தந்தை மரணச் செய்தியுடன் படம் தொடங்குகிறது. தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்படுகிறார். தந்தை இறந்த துக்கம் ஒருபுறம், இறுதி மரியாதையை முறையாக செய்ய முடியுமா என்ற கவலை மறுபக்கம் என சோகத்தில் மூழ்குகிறார் கோலப்பன். அவர் பயந்தது போலவே ஊர் பொதுப்பாதையில் சவத்தை கொண்டு செல்ல ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், போலீசும் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதால், உயர் நீதிமன்றத்தை நாடுகிறார் கோலப்பன். ஊர் பொது வழியில் சவத்தை எடுத்தச் செல்ல பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறது நீதிமன்றம். ஆனால் அது நடந்ததா என்பதே கதை.

கடந்த 2016ம் ஆண்டு திருநாள்கொண்டசேரியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் அம்ஷன் குமார். யதார்த்தத்தை மீறால், சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் காவிரி கடைமடைப்பகுதியில் நடந்த சம்பவத்தை அழுத்தமாக பதிவு செய்து, அதனை திரைப்பட விழாக்களில் திரையிட்டு உலகறிய செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். தீண்டாமைக்கு எதிராக குறைந்த பட்ஜெட்டில் தன்னால் முடிந்த வரை குரல் கொடுத்திருக்கிறார்.
திருநாள்கொண்டசேரி சம்பவத்தை ஊடகவியலாளர்கள் நிச்சயம் அறிவார்கள். அங்கு நடந்த அத்தனை விஷயங்களையும் உண்மையாக திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
'கிராமம்னா எல்லாரும் ஒண்ணாக்கூடி பொங்கல் வெச்சு கொண்டாடிட்டு இருப்பாங்கனு நினைச்சியா', 'உலகம் பூரா சுத்தி பெரிய பெரிய மனுஷங்களோட போட்டோ எடுத்திக்கிட்டாலும் சொந்த கிராமத்துல செருப்பு காலால நடக்க முடியலேன்னு சொன்னவங்க தான் நியாபகத்துக்கு வந்தாங்க' போன்ற வசனங்கள் நச் நெத்தியடி.
நாயகனாக நடித்திருத்திருக்கும் ராஜீவ் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு உண்மையாக பொருந்துகிறார். மொட்டை அடித்து, முறுக்கி நின்று, பொங்கி, அழுது என சிறப்பாகவே செய்திருக்கிறார். முதல் படம் என்பதால் ஒரே மாதிரியான முகபாவனைகள் காட்டுவதை பெரிய குறையாக எடுத்து கொள்ள தேவையில்லை. ஆனால் அடுத்தடுத்த படங்களிலும் இப்படியே இருக்கக் கூடாது ராஜீவ்.
மணிமேகலை, சசிகுமார், ஷீலா, விதூர், ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தில் வரும் அனைவரும் அந்த ஊர் மக்களாகவே தெரிவது யதார்த்தமாக இருக்கிறது.

படத்தின் கதையில் கவனம் செலுத்திய இயக்குனர், திரைக்கதை, இசை மற்றும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தவில்லை. பின்னணி இசை இல்லாமல் படம் பார்ப்பது, திரைப்பட விழாக்களில் வேண்டுமானால் எடுபடலாம். தியேட்டர்களில் நிச்சயம் எடுபடாது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் குறைந்த பட்ஜெட்டில், அதிக தரமான காட்சிகளை எடுக்க முடியும். அதை செய்ய தவறியதும் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
[ எலும்பும் தோலுமாக இருக்கும் நடிகை: காரணம் பிரச்சனை அல்ல, ஆசை ]
இருந்தாலும், தீண்டாமைக்கு எதிரான அழுத்தமான பதிவு என்ற வகையில் 'மனுசங்கடா' கவனம் ஈர்க்கிறது.


Click it and Unblock the Notifications











