Marco Review: மார்கோ விமர்சனம்.. லோகேஷ் கனகராஜ் வாடை மலையாளத்திலும் வீசிவிட்டது.. பாஸா? ஃபெயிலா?
நடிகர்கள்: உன்னி முகுந்தன், சித்திக், யுக்தி தாரேஜா
இசை: ரவி பஸ்ரூர்
இயக்கம்: ஹனீஃப் அதேனி
ரேட்டிங்:
சென்னை: இந்த ஆண்டு சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் நடித்த உன்னி முகுந்தனா என ஒன்றுக்கு மூன்று முறை உத்துப் பார்க்கும் அளவுக்கு மார்கோ படத்திற்காக ஆளே மாறியுள்ளார் மனுஷன். மலையாளத்தில் வெளியான மார்கோ படம் பாலிவுட்டில் பேபி ஜான் படம் தோல்வியை தழுவிய நிலையில், இந்தி ரசிகர்கள் வரை ஈர்த்து வருகிறது.
தமிழில் இன்று வெளியான படத்தை போய் பார்க்கலாமே என்று பார்த்தால் 10 லோகேஷ் கனகராஜ் சேர்ந்து படத்தை இயக்கியது போல ரத்தக் களறியாக படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆக்ஷன் காட்சிகள் என்கிற பெயரில் அனைத்து கொடூரக் கொலைகளையும் காட்டி ரசிகர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

கைதி, லியோ, அனிமல் உள்ளிட்ட பல படங்களின் பாதிப்புகள் அப்படியே தெரிகின்றன. மார்கோவை கடைசி வரை அப்படி மாஸாக காட்டினாலும், ஒட்டுமொத்த குடும்பத்தையே காவு கொடுத்துவிட்டு அந்த குழந்தையை காப்பாற்றி என்ன பாஸ் பண்ணப் போறிங்க என்கிற கேள்வித்தான் எழுகிறது. மார்கோ திரைப்படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்ட முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
மார்கோ கதை: தங்கக் கடத்தலில் ஈடுபடும் பெரிய டானாக உள்ள ஜார்ஜின் (சித்திக்) பார்வை தெரியாத தம்பி விக்டரை ஜார்ஜின் பிசினஸ் பார்ட்னர்களான டோனியின் (ஜகதீஷ்) மகன் ஒரு கொலையில் பார்வை தெரியாத அந்த விக்டர் தன்னை அடையாளம் கண்டுக் கொண்டு போலீஸில் தகவல்களை கொடுத்துவிட்டான் என்பதற்காக ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட்டில் போட்டு உருத்தெரியாமல் சிதைத்து கொடூரமாக கொன்று விடுகிறான். ஜார்ஜின் வளர்ப்பு தம்பியான மார்கோ அந்த வீட்டுக்கே விசுவாசமான நாய் என்று சொல்லப்படும் நிலையில், தன்னை மிகவும் நேசித்த சகோதரன் விக்டரை கொடூரமாக கொலை செய்த நபர்களை தேடிக் கண்டுபிடித்து கொன்று குவித்தாரா? ஜார்ஜின் குடும்பத்தைக் காப்பாற்றினாரா இல்லையா? என்பது தான் கதை.

படம் எப்படி இருக்கு?: கண் தெரியாத விக்டருடன் அவரது நண்பர் ஒருவர் ரகசியமாக நடக்கும் ரிங் சண்டையை பார்க்க வரும் போது தாரிக் என்பவரின் தம்பியை டோனியின் மகன் கொன்று விடுவான். அவனை தடவி அடையாளம் தெரிந்துக் கொள்ளும் பார்வையற்ற விக்டர் போலீஸில் சொல்ல போலீஸ் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையை நடத்துகிறது. இன்னொரு புறம் அந்த பார்வையற்ற விக்டர் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த மார்கோ காதலியுடன் வெளிநாட்டில் திருமணம் செய்துக் கொண்டு ஜாலியாக பொழுதை கழிக்காமல் தனது குடும்பத்திற்காக இறங்கி வந்து பழி வாங்குவதாக படம் செல்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் கொலை செய்த ஆட்களே மார்கோ கூடவே இருந்துக் கொண்டு கொலையாளியை கண்டுபிடித்துக் கொடுப்பதாக சொல்வது தான். ஒரு கட்டத்தில் மார்கோவுக்கு கூடவே இருப்பவர்கள் தான் தனது சகோதரனை கொன்றவர்கள் என்பது தெரிய வர மார்கோவையே போட்டுத் தள்ளப் பார்க்கின்றனர். புஷ்பா 2 கிளைமேக்ஸ் ஃபைட் போல ஒரு சண்டையை போட்டு அனைவரையும் கொன்று குவிக்கிறார் உன்னி முகுந்தன். ஆனால், மெயின் வில்லனை கொல்ல முடியவில்லை. அங்கே ஒரு ட்விஸ்ட் வைத்து அவரை லாக் செய்துவிடும் விதம் எல்லாம் பல படங்களில் பார்த்த ஒன்று தான்.

பிளஸ்: கேஜிஎஃப் படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் படம் தெறிக்கிறது. உன்னி முகுந்தன் மார்கோ கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு ஏற்ப தனது உடல் அமைப்பை கொண்டு வந்து நடித்திருக்கும் விதம் சிறப்பு. ஹாலிவுட் ஆக்ஷன் படம் அளவுக்கு மேக்கிங் செம நேர்த்தியாக உள்ளது. சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.
மைனஸ்: எந்தவொரு படமாக இருந்தாலும் ஹீரோ தனது ஹீரோயினை காப்பாற்றிவிடுவார். குடும்பத்தை காப்பாற்றிவிடுவார். ஆனால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஹீரோவின் கண்முன்னே கொலை செய்ய கடைசியில் கோட் சூட் போட்டுக் கொண்டு சண்டை போடுவதெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. அட்டாவிலேயே பெரிய கை ஜார்ஜ் எனக் கூறிக் கொள்கிறாரே தவிர மாமன்னன் வடிவேலு மாதிரி ஒரே ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர் மட்டுமே ஏகப்பட்ட துப்பாக்கிகளுடன் வரும் எதிரிகளை எதிர்க்க போராடும் காட்சிகளும் அதில் தோல்வியை தழுவுவதும் படுமொக்கை. கிளைமேக்ஸில் வில்லனாக வரும் கபிர் சிங் துஹான் மிரட்டுகிறார். ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டுமே இந்த படம் தீனியாக அமையும். மற்றவர்களுக்கு தலைவலி தான்.


Click it and Unblock the Notifications











