Mardaani 3 Review: மர்தானி 3 விமர்சனம்.. சிங்கம் ஷிவானியாக ராணி முகர்ஜி மீண்டும் கலக்கினாரா?
மும்பை: மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரைக்குத் திரும்பிய ராணி முகர்ஜி, "மர்தானி 3" படத்தில் ஒரு சிங்கப் பெண் போலக் கர்ஜித்துள்ளார். "மிஸஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே"இல் உணர்ச்சிபூர்வமாக நடித்து நம்மை உருக வைத்தவர், "மர்தானி" தொடரின் மூன்றாவது பாகத்தில் தனது ஆக்ரோஷமான அவதாரத்தால் வியப்பில் ஆழ்த்துகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் பார்க்கத் தகுதியானதுதானா? இங்கு பார்க்கலாம்.
ஷிவானி ஷிவாஜி ராய் கதாபாத்திரத்தில், ராணி முன்பை விட தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும், கூர்மையாகவும் ஜொலிக்கிறார். அவரது வசன உச்சரிப்பும், அழுத்தமான நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. ஷிவானி பிச்சைக்கார மாஃபியாக்களுடன் போராடும் கதைக்களம், சமூகத்தின் ஆழமான பிரச்சினையான மனித மற்றும் குழந்தைக் கடத்தலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஷிவானி ஷிவாஜி ராயாக ராணி முகர்ஜியை விட வேறு யாரும் சிறப்பாகப் பொருந்தமாட்டார்கள் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

அபிராஜ் மினாவாலா இயக்கத்தில், ராணி முகர்ஜி, மல்லிகா பிரசாத், ஜானகி போடிவாலா, பிரஜேஷ் காஷ்யப் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'மர்தானி 3' திரைப்படம் ஜனவரி 30, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. 129 நிமிடங்கள் ஓடும் இந்த அதிரடித் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மர்தானி 3 கதை: நாடு முழுவதும் பள்ளிப்பருவம் அடையாத இளம் சிறுமிகளைக் கடத்தும் ஒரு பெரிய கும்பலின் சதித்திட்டத்தைச் சுற்றியே நகர்கிறது. வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே பெரும்பாலும் கடத்தப்பட்டு, அவர்களின் புகார்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் துருக்கிக்கான இந்தியத் தூதரின் குழந்தையையும், அவரது சேவகரின் குழந்தையையும் அந்தக் கும்பல் தவறுதலாகக் கடத்திவிடுகிறது.
இங்குதான் நிஜமான மர்தானி, அதாவது ஷிவானி சிவாஜி ராய் (ராணி முகர்ஜி) களமிறங்குகிறார். இரண்டு குழந்தைகள், குறிப்பாக வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையும் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டு, எந்தவித பிணையத் தொகைக் கோரிக்கையும் வராததால் இது ஏதோ பெரிய கடத்தல் என்பதை ஷிவானி உணர்கிறார். பின்னர், தனது அர்ப்பணிப்புள்ள குழுவுடன் வழக்கை ஆழ்ந்து விசாரிக்கத் தொடங்குகிறார்.
விரைவில், இந்தக் கடத்தல்களுக்குப் பின்னால் 'அம்மா' (மல்லிகா பிரசாத்) என்ற ஒரு கொடூரப் பெண் இருப்பதையும், அவளுக்குப் பணம் மட்டுமே குறிக்கோள் என்பதையும் ஷிவானி கண்டுபிடிக்கிறார். ராமனுஜம் (பிரஜேஷ் காஷ்யப்) என்ற முதியோர் இல்லம் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளுக்கான 'த்ரேதா ட்ரஸ்ட்' நடத்தி வருபவர், மற்றும் துணிச்சலான இளநிலை காவலர் ஃபாத்திமா (ஜானகி போடிவாலா) ஆகிய இருவரும் அம்மாவைப் பிடிப்பதற்கான விசாரணையில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

படம் எப்படி இருக்கு?: இடைவேளைப் பகுதியில் கதைக்களம் மேலும் விறுவிறுப்பாகிறது. ஷிவானிக்கு ஒரு முக்கியப் பணியில் உதவச் செல்லும்போது ராமனுஜம் கைகளில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெரும் துயரம் நிகழ்கிறது. இது சிவானியின் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது மற்றும் அம்மாவைப் பிடிக்கும் அவளின் உறுதியை மேலும் பலப்படுத்துகிறது. தூதரின் குழந்தையை மட்டும் பத்திரமாக மீட்க விரும்பும் மேலதிகாரிகளின் அதிருப்திகளுக்கும் ஷிவானி அஞ்சவில்லை.
ஆயுஷ் குப்தா, தீபக் கிங்ரானி மற்றும் பல்ஜீத் சிங் மர்வா ஆகியோர் கதை எழுதியிருக்க, குப்தா திரைக்கதை மற்றும் வசனங்களை கையாண்டிருக்கிறார். சுந்தரவனக் காடுகளில் படமாக்கப்பட்ட உயர்தர அதிரடி காட்சியுடன் சிவானி ஒரு சூப்பர் ஹீரோவைப்போல அறிமுகப்படுத்தப்படுகிறார். படத்தின் மையப்பகுதி மற்றொரு உச்சகட்டப் புள்ளியாகவும், மனநிறைவளிக்கும் முடிவும் தீவிரம் குறைந்ததாக இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது. நீரஜ் பாண்டேவின் யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான படங்களைப் போல, மனநிலையைத் தூண்டும் பின்னணி இசை இதற்குப் பெரிதும் துணைபுரிகிறது. வசனங்கள் எளிமையானவை, ஆர்ப்பாட்டம் இல்லாதவை, ஆனால் அபூர்வமாக ஓரிரு சாதாரண வசனங்கள் இருந்தாலும், மனதில் நிலைத்து நிற்கின்றன.
நட்சத்திரங்களின் நடிப்பைப் பொறுத்தவரை, ராணி முகர்ஜி இந்தப் படத்தின் மூலம் ஒரு உறுதியான காவலராகவும், உச்சகட்ட நடிப்பின் வெளிப்பாடாகவும் அசத்திருக்கிறார். ஜானகி போடிவாலாவுக்கு ஒரு சிக்கலான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது, அதில் அவர் ஈர்க்கிறார். 'அம்மா'வாக மல்லிகா பிரசாத், அவரது கூர்மையான கண்களும், அச்சுறுத்தும் அரக்கத்தனமும் நம்மை குளிர்விக்கிறது. ஆனால், 'மர்தானி 3' படத்திற்கு கிடைத்த ஒரு மறைமுகமான துருப்புச் சீட்டு ராமனுஜமாக நடித்திருக்கும் பிரஜேஷ் காஷ்யப்தான். அவர் மிகவும் சுவாரஸ்யமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஷால் ஜெத்வா மற்றும் தாஹிர் ராஜ் பாசின் போன்ற நினைவில் நிற்கும் அறிமுக நடிகர்களைத் தந்த 'மர்தானி' சீரிஸுக்கு, மல்லிகா, பிரஜேஷ், ஜானகி போன்ற இந்தக் குழு உறுப்பினர்கள் ஒரு புதிய சேர்க்கை. துணை நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், யஷ் ராஜ் பிலிம்ஸ் படங்களில் வழக்கமாக நடப்பதைப் போல, பல முக்கிய கதாபாத்திர நடிகர்களின் பெயர்கள் அறியப்படுவதில்லை. இணையத்திலும் கூட சிலரின் பெயர்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.
பிளஸ்: ஒளிப்பதிவாளர் ஆர்தூர் சுராவ்ஸ்கி மற்றும் எடிட்டர் யாஷா ராம்சந்தானி இருவரும் இந்தப் படத்தின் வெற்றிக்கு அபாரமாய் பங்களித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக உதவி மற்றும் துணை இயக்குனராகப் பணியாற்றிய இயக்குனர் அபிராஜ் மினாவாலா, இந்தக் கப்பலின் சிறந்த கேப்டனாக அசத்தியுள்ளார். அவர் இந்தப் பட சீரிஸை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். யதார்த்தமான ஆனால் பெரிய அளவிலான காட்சிகளுடன், நீரஜ் பாண்டேவின் சீரிஸ்களுக்கு இணையாக இது உள்ளது.
மைனஸ்: பெண் குழந்தைகளை கடத்துதல் போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தைக் கையாண்ட விதத்தில் படக்குழுவினர் பாராட்டுதலுக்குரியவர்கள். ஆனால், எழுத்துப் பணியில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற குறை எழத்தான் செய்கிறது.
'மர்தானி 2' பார்த்தவர்களுக்கு தெரியும், விஷால் ஜேத்வாவின் தீவிரம் மிக்க வில்லன் கதாபாத்திரத்தை பிரதிபலிக்க மல்லிகா பிரசாத் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. தனது கதாபாத்திரத்திற்கு அவர் நீதி செய்தாலும், அவரது கண்களில் அந்த தீவிரம் அவ்வளவாக வெளிப்படவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. சில சமயங்களில் படம் தனது வேகத்தை இழக்க நேரிட்டாலும், ராணி முகர்ஜியின் நடிப்பு அதைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











