மரியாதை எல்லாம் இருக்கு.. பாரதிராஜாவை காணலையே...என்னாச்சு இமயமே?
நடிகர்கள்: பாரதிராஜா, நட்சத்திரா, மவுனிகா
இயக்கம்: பாரதிராஜா
சென்னை: வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும் இளம் பெண்ணுக்கும் வாழ்ந்து முடிந்தவருக்குமான நட்பு பயணம்தான், மீண்டும் ஒரு மரியாதை.
லண்டனில் செட்டிலாகிவிட்ட மகன், கிராமத்து அப்பா பாரதிராஜாவையும் அம்மா மவுனிகாவையும் அங்கு அழைத்துச் செல்கிறான்.
அங்குள்ள கலாசாரம் முற்றிலும் வேறாக இருக்கிறது. மவுனிகா எதிர்பாராமல் இறக்கிறார். பிறகு அப்பாவை, முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் மகன். அங்கிருந்து ஒரு பயணத்தை தொடர்கிறார் அவர்.
தற்கொலை முடிவில்
இதற்கிடையே, சொந்தப் பிரச்னை காரணமாகத் தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை எதுவுக்கும் தீர்வல்ல என்று அட்வைஸ் செய்துவிட்டு, வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை அவருக்குப் புரியவைக்க பத்து நாட்கள் தன்னோடு வருமாறு அழைக்கிறார். செல்கிறார் அவர். இந்தப் பயணத்தில் வாழ்க்கையை அவருக்குப் புரிய வைத்தாரா, அடுத்து என்ன நடந்தது என்பதுதான் கதை.
ஸ்கோப் இருந்தும்
கதையாகக் கேட்கும்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அழகாக திரைக்கதை அமைக்க இதில் அவ்வளவு ஸ்கோப் இருந்தும் என்ன அவசரமோ? எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ, அந்தளவுக்குச் சொதப்பி இருக்கிறார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கக்கூடிய வசனங்களை இன்னும் ஷார்ப்பாக எழுதி இருக்கலாம். இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் எந்த குறையும் இல்லை. அவர் பார்வை கூட நடிக்கிறது.
நட்சத்திரா
பொதுவாக அவர் படங்களின் வசனங்களில் ஒரு கவித்துவம் இருக்குமே, அது இதில் மிஸ்சிங். நாயகியாக நடித்திருக்கும் நட்சத்திராவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. அம்மாவாக வரும் மவுனிகா, ஜோ மல்லூரி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனால் எந்த கேரக்டரும் மனதில் பதிய வில்லை. வசனங்களும் காட்சி அமைப்புகளும் அவ்வளவு அலுப்பு.
என்னாச்சு இமயமே?
சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு லண்டன் அழகை அப்படியே அள்ளிவது தருகிறது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்கள் வேகத்தடை. வழக்கமாக, பாரதிராஜா படங்களில் இருக்கும் மேஜிக் மேக்கிங், இதில் சுத்தமாக இல்லையே...ஏன், என்னாச்சு இமயமே?


Click it and Unblock the Notifications











