Meiyazhagan Review: மெய்யழகன் விமர்சனம்.. அன்பும் பாசமும் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது!
நடிகர்கள்: கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா
இசை: கோவிந்த் வசந்தா
இயக்கம்: பிரேம் குமார்
சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், அந்த படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
விஜய் சேதுபதி, த்ரிஷாவை வைத்து 96 எனும் அற்புதமான படத்தைக் கொடுத்த பிரேம் குமார் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அட்டகாசமான படத்தை அன்பின் மிகுதியுடன் கலந்து கொடுத்திருக்கிறார்.

கார்த்தி, அரவிந்த் சாமியை வைத்து ஆக்ஷன் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்திருக்க முடியும். ஆனால், அதெல்லாம் காலம் கடந்து நிற்காது என்பதை புரிந்துக்கொண்டு ஆத்மார்த்தமான படத்தை இயக்கியுள்ளார் பிரேம் குமார். மெய்யழகன் படத்தின் நிறை மற்றும் குறைகள் அடங்கிய முழு விமர்சனத்தை இங்கே காணலாம்.
மெய்யழகன் கதை: சொத்து பிரச்சனை காரணமாக பூர்வீக கிராமத்தை விட்டு விட்டு சென்னைக்கு செல்லும் அருள்மொழி (அரவிந்த்சாமி) பல வருடங்கள் கழித்து தனது தங்கையின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல நேரிடுகிறது. தஞ்சாவூர் நீலமங்கலம் தான் இந்த படத்தின் கதைக்களம். தஞ்சாவூரையும் சென்னையையும் அவ்வளவு அழகாக கதையின் போக்கிலேயே எடுத்துக் காட்டியிருக்கும் விதம் அருமை. திருமணத்துக்கு வரும் அருள்மொழியை பார்த்த மாத்திரத்திலேயே அத்தான் என ஒட்டிக் கொண்டு பாசத்தைக் காட்ட ஆரம்பித்து விடுகிறார் கார்த்தி. ஆனால், அவர் யாரென்றே அடையாளம் தெரியாத அரவிந்த் சாமி அவரது அன்பின் காரணமாக தெரிந்தவர் போலவே நடந்துக் கொள்கிறார். கடைசியில், கார்த்திக்கும் அவருக்கும் என்ன உறவு, கார்த்தியின் பெயர் என்ன? என்பதை அரவிந்த் சாமி தெரிந்துக் கொண்டாரா? என்பது தான் இந்த மெய்யழகன் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: பாசத்துக்கு பெயர்ப்போன கிராமத்து இளைஞராக கார்த்தி சூது வாது அறியாத மனிதராக படம் முழுக்க அரவிந்த் சாமியை ஆசை ஆசையாய் அத்தான் என்று அழைத்து அவருக்கு உபச்சாரம் செய்வதை பார்த்தாலே தமிழர்களின் விருந்தோம்பல் நினைவுக்கு வந்து விடும். கிராமத்தை விட்டு விட்டு நகரத்திற்கு சென்று வளர்ந்த அரவிந்த் சாமியிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அவரின் ஆழ் மனதுக்குள் இருக்கும் அந்த கிராமத்து வேர்களும் அடங்கிய கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சிறப்பான நடிப்பை அரவிந்த் சாமி திரையில் கொண்டு வந்து நிறுத்தி கைதட்டல்களை அள்ளுகிறார். அதிலும், அந்த கிளைமேக்ஸ் போர்ஷனில் அவரது நடிப்பு வியப்பின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
பிளஸ்: கார்த்தியின் அன்பால் பேருந்தை மிஸ் செய்து விடும் அரவிந்த் சாமி அந்த இரவு முழுக்க அவருடன் பயணம் செய்யும் காட்சிகளை போர் அடிக்காமல் சுவாரஸ்யப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் அடுக்கி படத்தின் திரைக்கதை வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். இருவரது நடிப்பு ரசிகர்களை கடைசி வரை தியேட்டர்களில் கட்டிப் போட்டு விடுகிறது. இவர்கள் இருவரை தாண்டி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வந்து செல்லும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளனர். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை தான் இந்த படத்திற்கும் பெரிய பலம்.

மைனஸ்: முதல் பாதியிலேயே படம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரிந்து விடுகிறது. இரண்டாம் பாதியில் ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கரிகால மன்னனின் கதை உள்ளிட்ட பல விஷயங்களை கார்த்தி பேசுவது போல வைத்திருக்கும் சில இடங்கள் பொறுமையை சற்றே சோதிக்கின்றன. சில குறைகள் மற்றும் லேக் இருந்தாலும், ஒட்டுமொத்த படமாக பார்க்கும் போது அன்பின் மழையில் நனைந்த உணர்வை இந்த மெய்யழகன் கட்டாயம் கடத்தத்தான் செய்கிறான்.


Click it and Unblock the Notifications











