Modern Love Chennai: ஆம்பளையோடு வாழ முடியாது.. லாலாகுண்டா பொம்மைகள் விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ஸ்ரீகௌரி பிரியா, வசுந்தரா, வாசுதேவன் முரளி
இசை: ஷான் ரோல்டன்
இயக்கம்: ராஜு முருகன்
ஓடிடி: அமேசான் பிரைம்
சென்னை: அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியின் முதல் கதையான லாலாகுண்டா பொம்மைகள் படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி உள்ளார்.
ஸ்ரீகெளரி பிரியா, வசுந்தரா மற்றும் வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆம்பளையோடு வாழ முடியாது.. ஆம்பளை இல்லைன்னாலும் வாழ முடியாது என்கிற லைன் உடன் இந்த படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி உள்ளார். எந்த அளவுக்கு சென்னை காதலை இந்த படம் சொல்லி இருக்கு என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
லாலாகுண்டா பொம்மைகள் கதை: மாடர்ன் லவ் என்கிற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான வெப்சீரிஸ் ஹிட் அடிக்க மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத்தை தொடர்ந்து மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி உருவாகி உள்ளது.
6 இயக்குநர்கள் இயக்கிய 6 கதைகள் இணைந்த கலவையாக வெளியாகி உள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பிடித்துள்ள லாலாஜிகுண்டா பொம்மைகள் டைட்டிலை போலவே கதைக்களமும் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் சில ட்விஸ்டுகளுடன் நிறைந்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கி விட்டு சோபாவை (ஸ்ரீகெளரி பிரியா) ஒருத்தன் ஏமாற்றி விடுகிறான். கருவை கலைத்து விட்ட நிலையில், சித்த பிரம்மம் பிடித்த பெண்ணாக இருக்கும் சோபாவை வசுந்தரா சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்ல வடக்கில் இருந்து ஒருத்தன் வருவான் அவனுடன் உனக்கு காதல் ஏற்பட பழைய வடு மறைந்து விடும் என்கிறார்.

ஆனால், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் பணம் செலவாகும் என சொல்ல இவன் போலி சாமியார், என் வாழ்க்கையை நான் நல்லா வாழ்ந்து காட்டுறேன் என சோபா அவனை அடித்து விட்டு அங்கிருந்து வெளியேறுவார்.
பிஸ்கட் தயாரிக்கும் சோபா வீட்டிற்கு வடக்கனான பானிப்பூரி வாலா வர சோபாவை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டே இருப்பான். மற்றவர்களுக்கு 4 பானி பூரிகள் வைக்கும் அவன் சோபாவுக்கு 6 பூரிகள் வைத்தே கரெக்ட் செய்ய முயற்சிப்பான்.
ஏரியா பசங்க பானிப்பூரி விற்பவன் அந்த ஏரியா பெண்ணுக்கு ரூட் விட அவனை போட்டு அடிப்பார்கள். பின்னர், அவன் மீது இரக்கப்பட்டு சோபாவும் அந்த நபரை காதலிக்க ஆரம்பிப்பார்.
லாலாகுண்டா ஏரியாவுக்குன்னு ஒரு மெஜஸ்டி இருக்குன்னு சொல்லி ஊர்க்காரர்கள் வடக்கன் உடன் கலக்கக் கூடாது என கடைக்கே வந்து எச்சரிப்பார்கள். அதன் பின்னர் திடீரென அந்த பானிப்பூரி காரனின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட அவனுக்கு என்ன ஆனது என்கிற பதற்றம் ரசிகர்களை தொற்றிக் கொள்ளும்.

ஆனால், கடைசியில் வைக்கும் அந்த ட்விஸ்ட் மற்றும் சோபாவின் திருமணத்தில் நடக்கும் மாற்றம் கடைசியாக முதலிரவு காட்சியில் தான் யாரை கட்டிக் கொண்டேன் என தெரியவர கணவரை போட்டு அடிக்கும் காட்சிகள் என ஒவ்வொரு சீனும் சிரிப்பாகவும் வித்தியாசமாகவும் நகர்கின்றன.
பிளஸ்: பெண்கள் ஒருவனால் ஏமாற்றப்பட்டால் இன்னொருவனை தேடிச் செல்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்கிற கருத்தை வலியுறுத்தி இருப்பது படத்தின் பிளஸ் ஆக இருக்க ஷான் ரோல்டனின் இசையில் வரும் ஜிகரதந்தா பாடல் மற்றும் கிளைமேக்ஸில் வரும் ஒருமுறை தான் மழை வருமா பாடல் வேறலெவல். நாயகி ஸ்ரீகெளரி பிரியாவின் நடிப்பு கடைசி வரை இந்த கதையை பார்க்க வைத்து விடுகிறது.
மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெயஹே படத்தில் வரும் வசனமான பெண்கள் இல்லாமல் வாழ முடியாது என்கிற வசனத்தை போல இந்த படத்தில் ஆம்பளைங்களோட வாழ முடியாது, ஆம்பளைங்க இல்லாமலும் வாழ முடியாது என வசுந்தரா சொல்லும் வசனம் மற்றும் ஷான் ரோல்டனின் ஒரு முறை தான் மழை வருமா பாடல் மூலம் ஒரு முறை தான் காதல் வருமா? என்பது போல கதையை நகர்த்த சரியாக அமைந்துள்ளது பெரிய பிளஸ் ஆக மாறி உள்ளது.

மைனஸ்: வடக்கனை ஒரு கட்டத்தில் ஏமாற்றுக்காரன் என்பது போல இயக்குநர் ராஜு முருகன் காட்டுகிறாரே என்கிற எண்ணம் வருவது படத்திற்கு மைனஸ் ஆக தெரிகிறது. அடுத்த சீனில் அதற்கான சமாளிஃபிகேஷனை வசுந்தராவின் வசனத்தில் வைத்து மேட்ச் செய்தாலும், பானி பூரி வாலாவின் டிபியில் உள்ள அந்த காவி நிறக் குறியீட்டிலும் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது.
எக்ஸ்ட்ரா பானிப்பூரி கொடுத்து எல்லாம் இந்த கால பெண்களை மடக்கி விடும் அளவுக்குத்தான் மாடர்ன் லவ் சென்னை இருக்கிறதா? என்கிற கேள்வியும் கிளைமேக்ஸில் ஹீரோயினுக்கு கணவராக அந்த நபரை ஏன் இயக்குநர் தேர்வு செய்தார் என்கிற கேள்வியும் மைனஸாக பார்க்கப்படுகிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: மினி பட்ஜெட்டில் ஒரு மாடர்ன் காதலை இயக்குநர் ராஜு முருகன் ஷார்ட் ஃபிலிம் எஃபெக்ட்டில் சொல்லி இருக்கிறார். நடிகர்களின் நடிப்பு மற்றும் கதையின் ட்விஸ்ட்டுகளுக்காக ஒரு முறை இந்த லாலாகுண்டா பொம்மைகள் படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











