Don't Miss!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
O2 Review...உலகிற்கான எச்சரிக்கையா? பாடமா?...நயன்தாராவின் ஓ2 படம் எப்படி இருக்கு?
இயக்கம் : ஜி.கே.விக்னேஷ்
தயாரிப்பு : எஸ்.ஆர்.பிரபு
நடிகர்கள் : நயன்தாரா, மாஸ்டர் ரித்விக், ஆர்என்ஆர் மனோகர், லீனா, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் ஜாஃபர் இடுக்கி
இசை : விஷால் சந்திரசேகர்
சென்னை : நயன்தாரா நடிப்பில் ஓடிடி.,யில் ரிலீசாகி இருக்கும் மற்றொரு படம் ஓ2. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
Recommended Video
ஓ2 படம் ஜுன் 17 ம் தேதி அதிகாலை 12 மணிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து, டைரக்டராக ஜி.கே.விக்னேஷ் அறிமுகமாகி உள்ள படம்.
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு பிறகு வெளியாகி உள்ள நயன்தாராவின் முதல் படம். அறம், நெற்றிக்கண் படங்களின் வரிசையில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ஓ2.
டைட்டிலே கதை சொல்லுது
படத்தின் டைட்டிலேயே இது ஆக்சிஜனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை சற்றே வித்தியாசமான திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர் ஜி.கே.விக்னேஷ். முழுக்க முழுக்க த்ரில்லிங் கொண்டதாக, அதே சமயம் மிக முக்கியமான சோஷியல் மெசேஜ் சொல்லி இருக்கும் படம் தான் ஓ2.
உயிருக்காக போராடும் மகன்
சுவாச நோயால் கணவரை இழந்தவரான பார்வதி (நயன்தாரா), சிறு வயதிலேயே சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் 8 வயது மகன் வீரா (ரித்விக்) உடன் வாழ்ந்து வருகிறார். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் உயிர் வாழும் சிறுவன். ஒவ்வொரு 100 நிமிடங்களுக்கு ஒரு முறை சிலிண்டர் மாற்றி ஆக வேண்டும். இதனால் ஆக்சிஜன் சிலிண்டரை போகும் இடமெல்லாம் கொண்டு செல்கிறார்கள். மகனின் ஆப்பரேஷனுக்காக ஆம்னி பஸ்சில் கோவையில் இருந்து கொச்சி செல்கிறார்.
8 பேருடன் செல்லும் பஸ்
அதே பஸ்சில், அப்பாவின் எதிர்ப்பை மீறி ஒன்று சேர பிளான் செய்யும் ஒரு காதல் ஜோடி, செய்யாத குற்றத்திற்காக 14 வருட சிறை தண்டனை அனுபவித்து விட்டு தனது தாயை பார்க்க ஊருக்கு திரும்பும் ஒருவர், உதவியாளருடன் செல்லும் முன்னாள் எம்எல்ஏ, போதைப் பொருளை கடத்திச் செல்லும் போலீஸ் ஆகியோர் பயணம் செய்கிறார்கள். வழியில் டிராபிக் ஜாம் காரணமாக வழக்கமான வழியில் செல்ல முடியாமல், பாலக்காடு செல்லும் பயணிகளை மட்டும் வழியில் இறக்கி விட்டு விட்டு, கொச்சி செல்லும் 8 பேருடன் மலைப்பாதையில் செல்கிறது பஸ்.
மண்ணில் புதையும் பஸ்
வழியில் பாறை விழுந்து கிடப்பதால் மீண்டும் பஸ்சை ரிவர்ஸ் எடுக்க முயற்சிக்கும் போது அங்குள்ள மோசமான மண்ணின் தன்மை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதில் நயன்தாரா உள்ளிட்டோர் வந்த பஸ் மண்ணிற்குள் புதைகிறது. பஸ்சில் இருந்து வெளியே தப்பிக்க எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. நயன்தாராவிற்கு போன் செய்யும் அவரது தம்பி மற்றும் பஸ்சை தவற விட்ட பயணி ஒருவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மண்ணிற்குள் புதைந்த பஸ்சை தேடும் மீட்புப் பணியினரின் முயற்சியும் தோல்வியை சந்திக்கிறது.
கடைசியில் என்ன நடக்கும்
ஒரு கட்டத்தில் பஸ்சிற்குள் ஆக்சிஜன் அளவு குறைய துவங்கி, அனைவரும் உயிருக்காக போராடுகிறார்கள். சிறுவன் வீராவிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் நயன்தாரா தனது மகனை காப்பாற்ற போராடுகிறார். மண்ணிற்குள் புதைந்த பஸ்சில் சிக்கியவர்கள் தப்பினார்களா, அவர்களுக்கு ஆக்சிஜன் கிடைத்ததா, நயன்தாராவின் தாய் பாசம் வென்றதா, பஸ்சில் சிக்கியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கடைசி வரை த்ரில்லிங்
படத்தின் முதல் 20 நிமிடங்களில் துவங்கும் த்ரில்லிங்கை க்ளைமாக்ஸ் வரை கொஞ்சமும் குறையாமல் கொண்டு சென்றுள்ளார் டைரக்டர். தாய் பாசம் என்பதை தாண்டி, ஆக்சிஜன் தேவையின் அவசியத்தையும், இயற்கையை காக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி இருக்கிறார். நாம் இயற்கையை காப்பாற்றினால் அதுவும் நம்மை காக்கும். நாம் அழித்தால், அதுவும் நம்மை அழிக்கும் என்பதை இரண்டு மணி நேர படமாக சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் ப்ளஸ் என்ன
இயல்பான நடிப்பில் அனைவரும் மிரட்டி இருக்கிறார்கள். நயன்தாரா, ரித்விக் இருவரிடையேயான பாசம், போலீசாக வருபவரின் வில்லத்தனம் ஆகியவை பாராட்ட வைத்துள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, சுவாசமே சுவாசமே பாடல் படத்திற்கு மற்றொரு ப்ளஸ். மண்ணில் புதைந்து, உயிர் பிழைக்க போராடுபவர்களின் கடைசி நிமிட போராட்டங்கள், மனநிலையை மிகச் சரியாக காட்டி உள்ளனர். ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் ப்ளஸ். தமிழக - கேரள எல்லையில் உள்ள மலைப்பாதையில் படமாக்கி உள்ளனர்.
லாஜிக் ரொம்ப இடிக்குது
மைனஸ் என்று பார்த்தால், பஸ்சிற்குள் சிக்கி உள்ள அனைவரின் மொபைல் சிக்னலும் கட் ஆகிவிட, நயன்தாராவிற்கு மட்டும் கால் வருவது நம்ப முடியாததாக உள்ளது. அதே போல் க்ளைமாக்சில் செடியில் உள்ள இலை உதிர்ந்து மொபைல் சிக்னல் கனெக்ட் ஆவது சுத்தமாக லாஜிக்கே இல்லாமல் உள்ளது. அதே போல் பயத்தில் இருக்கும் சிறுவன் எதற்காக ஆக்சிஜன் சிலிண்டரை ஓப்பன் செய்து விடுகிறான் என்பதும் தெரியவில்லை. சிலிண்டர் உதவி இல்லாவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு நுரையீரல் பிரச்சனை உள்ள ஒரு குழந்தை, சிலிண்டர் இணைப்பை துண்டித்த பிறகு, மீட்புப் படையினர் வந்து காப்பாற்றி, சிகிச்சை அளிக்கும் வரை உயிருடன் இருக்கிறான் என்பது லாஜிக் இல்லாமல் உள்ளது.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கு
இருந்தாலும் படத்தின் த்ரில்லிங், வித்தியாசமான திரைக்கதை, நயன்தாராவின் நடிப்பு ஆகியவற்றிற்காக படத்தை பார்க்கலாம். அறம், நெற்றிக்கண், டோரா போன்ற படங்களின் வரிசையில் நயன்தாராவின் ஓ2 படமும் பேசப்படும் என்பதால், நிச்சயம் இது அவருக்கு சிறப்பான திருமண பரிசாக இருக்கும் என்றே சொல்லலாம்.ரசிகர்கள் நயன்தாராவின் ஓ2 படத்திற்கு 5 க்கு 4 என ரேட்டிங் கொடுத்துள்ளனர்.