Nesippaya Review: நேசிப்பாயா விமர்சனம்.. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி அறிமுகம் எப்படி?
ரேட்டிங்:
நடிகர்கள்: ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: விஷ்ணுவர்தன்
சென்னை: பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கி அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கிய விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் ஷெர்ஷா படத்தை இயக்கி விருதுகளை குவித்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து தமிழில் மீண்டும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் 2வது மகனான ஆகாஷ் முரளியின் நடிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா படம் ரசிகர்களின் நேசத்தை அள்ளியதா? இல்லையா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்குப் பிறகு இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோயினாக நடித்துள்ளார். மொத்தமாக வாரிசுகளை வைத்தே இயக்கி உள்ள இந்த படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

காதலர் தினத்துக்கு வரவேண்டிய காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் விடாமுயற்சி படம் பின் வாங்கிய நிலையில், பொங்கலுக்கு வெளியானதால் கலெக்ஷனை அள்ளுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
நேசிப்பாயா கதை: தியா (அதிதி ஷங்கர்) போடும் காதல் கண்டிஷனுக்கு ஓகே சொல்லி அவரை காதலிக்கத் தொடங்குகிறார் அர்ஜுன் (ஆகாஷ் முரளி). எதிர்பார்த்தது போலவே கண்டிஷனை மீறும் இடத்தில் இருவருக்கும் இடையே லவ் பிரேக்கப் ஆகிறது. அதன் பின்னர் தொழில் ரீதியாக அதிதி ஷங்கர் போர்ச்சுகல் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், அங்கே செம ட்விஸ்ட்டாக ஒரு கொலை வழக்கில் அதிதி ஷங்கர் 2 ஆண்டுகள் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்படுகிறார். பிரேக்கப் செய்துவிட்டு சென்ற தனது காதலி வெளிநாட்டில் சிறைக்கைதியாக மாறியதை அறிந்துக் கொள்ளும் ஹீரோ அங்கே சென்று அவரை மீட்டெடுக்க நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் இந்த நேசிப்பாயா படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஹீரோவாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அவருடைய தம்பி ஆகாஷ் முரளி மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் இந்த படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார். முதல் படமே விஷ்ணுவர்தன் இயக்கம் என்பதால் அனைத்து விதங்களிலும் ஆகாஷ் முரளியை ஹீரோவாக விஷ்ணுவர்தன் பட்டைத் தீட்டி இருப்பது தெளிவாகவே தெரிகிறது. அதற்குத்தான் இந்த படம் உருவாக சில ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதிதி ஷங்கர் ஒவ்வொரு படத்துக்கும் தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டே போகிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு, வழக்கறிஞராக வரும் கல்கி கோச்சலின் என துணை கதாபாத்திரங்கள் இந்த படத்துக்கு கூடுதல் பலமாகவே உள்ளன.
காதல் படமாக இருக்கும் என நினைத்த ஆடியன்ஸுக்கு காதல் கொஞ்சமும் ஆக்ஷன், அதிதி ஷங்கர் கொலை வழக்கு என கிரைம் போர்ஷன் என விஷ்ணுவர்தன் தனக்கான பிரம்மாண்டத்தையும் உள்ளே புகுத்தி இந்த படத்தை பெரியளவில் கொடுத்துள்ளார்.
பிளஸ்: யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக மாறியிருக்கிறது. ஆகாஷ் முரளி ஆக்ஷன் காட்சிகளில் அடி தூள் கிளப்புகிறார். எதிர்பார்க்காத அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டுக்காக நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம். இளைஞர்களை கவரும் விதமான ஏகப்பட்ட காட்சிகளை விஷ்ணுவர்தன் இறக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மைனஸ்: யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் காட்சியை படத்தில் வைத்தாலும், அதற்கு முன்பாக வரும் அத்தனை காட்சிகளும் ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வையே கொடுப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய குறையாகவே மாறியிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் கலகலப்பாக பார்க்கும் படமாக இந்த 'நேசிப்பாயா' இருக்குமா என்றால் அது டவுட்டு தான். தரமான மேக்கிங்குடன் ஒரு காதல் படத்தை பார்க்க நினைக்கும் இளைஞர்களுக்கு நல்ல விருந்து.


Click it and Unblock the Notifications











