NEEK Review: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்.. தனுஷ் படம் காமெடியா? க்ரிஞ்சா?
நடிகர்கள்: பவிஷ், அனிகா சுரேந்திரன்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: தனுஷ்
சென்னை: பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) திரைப்படம் கலகலப்பான ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது. கரகரப்பான தனுஷ் குரலில் லவ் ஃபெய்லியர் பாடலுடன் தொடங்கும் படத்தில் பார்வையாளர்களை பெரிதளவில் குழப்பும் கதையாக இல்லாமல் இது ஒரு வழக்கமான காதல் கதை தான் என்றே டைட்டில் கார்டில் இயக்குநர் தனுஷ் தெரிவித்துவிடுகிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இளம் நடிகர்கள் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா காத்தூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சீனியர் நடிகர்கள் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் அவருக்கு கோலிவுட்டில் சிறந்த எதிர்காலத்தை கொடுக்குமா? அவரது நடிப்பு எப்படி இருந்தது? அந்த வழக்கமான காதல் கதை சுவாரஸ்யமாக இருந்ததா? இல்லை க்ரிஞ்சா இருந்ததா? என்பது குறித்து பார்ப்போம் வாங்க..
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கதை: காதலுக்கும், காதல் தோல்விக்கும் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர். இறுதியில் கைவிட்டது காதலையா? காதல் தோல்வியையா? என்பதைத்தான் இப்படத்தின் இயக்குநர் தனுஷ் சொல்ல முயற்சித்திருக்கிறார். குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆபாச காட்சிகள் இல்லாத படமாகவும் இந்த படம் வெளிவந்துள்ளது. Love Is Most Important என்பதை NEEK திரைப்படம் வலியுறுத்துகிறது.

நிலா (அனிகா சுரேந்திரன்) மீதான காதலை மறக்கமுடியாமல் இருக்கும் பிரபுவுக்கு (பவிஷ்) திருமணம் செய்து வைக்க சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் முடிவெடுக்கின்றனர். பிரபு தனக்கு திருமணம் வேண்டாம் என தெரிவிக்கிறார். ஆனால், வழக்கமாக தமிழ் சினிமாவில் நடப்பது போன்றே இந்த காட்சியும் நகர்கிறது. வலுக்கட்டாயமாக ஹீரோவை பெண் பார்க்க அழைத்து செல்கின்றனர். பெண் பார்க்கும் இடத்தில் பிரபுவிற்கு (பவிஷ்) எதிர்பார்க்காத ட்விஸ்ட் காத்திருக்கிறது. பெண் வேறு யாரும் இல்லை அவருடன் பள்ளியில் படித்த பிரியா பிரகாஷ் வாரியர் தான்.
பிரபுவை பார்த்ததும் பிரியா வாரியர் "டேய் இங்க நீ என்னடா பண்ற" என்கிறார். நீ எனக்கு மாப்பிள்ளையா வருவேன்னு கனவுல கூட நினைத்து பார்க்கவில்லை என்று கூறவும், பிரபுவும் (பவிஷ்) பிரியா வாரியரை பார்த்து நானும் தான். அவர்கள் இருவரையும் பார்த்து ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், பிரியா வாரியரின் அப்பா, அம்மா ஆகியோர் ஷாக் ஆகின்றனர். பின்னர், பிரபுவும், பிரியா வாரியரும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு பேசி பழகி புரிந்து கொண்டு திருமணம் செய்வதாக முடிவெடுக்க இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

கல்யாணத்துக்கு கண்டிஷன் உண்டு: பின்னர், பிரியா வாரியர் போடும் கண்டிஷன்களை கண்டு மிரண்டு போகும் பிரபு, பிரியா வாரியரிடம் காதல் எதையும் எதிர்பார்த்து வராது என தெரிவிக்கிறார். அதற்கு பிரியா வாரியர் நீ சொல்றது கரெக்ட்தான் ஆனால், நாம லவ்வர்ஸ் கிடையாது, கல்யாணம் பண்ணிக்க போறோம், Marriage-ன்னு வரும் போது கண்டிஷன்ஸ் உண்டு அதை நீ ஃபாலோ பண்ணிதான் ஆக வேண்டும் என தெரிவிக்கும் போது தியேட்டரில் அப்லாஸ் வாங்குகிறார்.

வழக்கமான காதல் கதை: திடீரென பிரபுவிற்கு அவனது முன்னாள் காதலியான நிலாவின் திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனால் தனது காதல் குறித்தும், காதல் தோல்வி குறித்தும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ. சமையல் கலை பயிலும் பிரபு, பணக்கார பெண்ணான நிலாவை காதலிக்கிறார். இது அவரது பணக்கார அப்பாவாக வரும் சரத்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால், நிலாவுக்கும், பிரபுவுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவளது அப்பாவிடம் நிலா சந்தோஷமாக இருப்பதற்காக பிரபு அவளை விட்டு பிரிய, இருவருக்கும் பிரேக் அப் ஆகிறது. கடைசியில் என்ன ஆனது யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பது தான் கதை.

தனுஷ் இயக்கிய படம் தானா?: ஹீரோ என்ட்ரி பிரேக்அப் பாடலுடன் தொடங்குவது புதிது என்றாலும், கதையில் புதிதாக ஏதாவது இருக்க வேண்டாமா? இல்லையா?, படம் முழுக்க க்ரிஞ்ச் ஆகத்தான் இருக்கிறது. மலையாள நடிகர் மேத்யூஸ் தாமஸின் நடிப்பு மட்டுமே இதில் ஆறுதல். ஹீரோவின் நண்பனாக வந்து ஸ்கோர் செய்திருக்கிறார். மலையாளத்தில் வந்த பிரேமலு திரைப்படம் 2k கிட்ஸ்களை கவர்ந்த அளவிற்கு கூட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இல்லை என்பது வருத்தமே. மேலோட்டமாக ஜாலியாக நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதைபோல எடுத்து வைத்திருக்கிறார் தனுஷ்.

தனுஷ் அக்கா மகன் நடிப்பு எப்படி இருக்கிறது?: ஏன் இந்த முகத்தில் ரொமான்ஸ் வரமாட்டேங்குது என்பது போலத்தான் பவிஷின் நடிப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரே ரியாக்ஷன் தான். ஒருவேளை இயக்குநர் தனுஷ் வசனத்தை மறக்காதே, முகத்தை அப்படியே வைத்துகொள் எனக் கூறியிருப்பாரோ இல்லை முதல் படம் என்பதால் இவ்வளவு தான் வந்ததா? என தெரியவில்லை. ஆனால், படத்தில் பவிஷ் பேசுவது, அவருடைய லுக் எல்லாம் பார்த்தால் குட்டி தனுஷ் நடித்தது போன்ற உணர்வை தருகிறது. சுமாரான நடிப்புதான் பெரிதளவில் ஈர்க்கவில்லை. அனிகா சுரேந்திரனும் ஓகே ரகம் தான். மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் நல்லா நடிச்சிருக்காங்க.

பிளஸ்: ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். பிரேக்அப் பாடல், காதல் பாடல், கோல்டன் ஸ்பேரோ பாடல்கள் துள்ளல் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் கதைக்கேற்றார் போல் நெஞ்சை கரைய வைக்கிறது. கோல்டன் ஸ்பேரோ பாட்டில் வந்த பிரியங்கா மோகனின் ஆட்டமும் ரசிகர்களுக்கு தியேட்டரில் ட்ரீட் தான். புரொடக்ஷன் வேல்யூவும் பக்காவாக உள்ளது.

மைனஸ்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் வரும் இளம் நடிகர்களை பார்த்தால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை போன்றே தெரிகின்றனர். இவர்களுக்கு திருமணம் நடக்கும் காட்சிகளை காணும்போது என்ன சார் குழந்தை திருமணமா? நடத்தி வைக்கிறீர்கள் என்கிற மைண்ட் வாய்ஸ் தான் சத்தமாக கேட்கிறது. பவிஷ்க்கு ஜோடிகளாக நடித்திருக்கும் அனிகா, பிரியா வாரியர் ஆகியோர் தங்கள் கதாப்பாத்திரங்களை நியாயப்படுத்தி இருக்கின்றனர். படம் முடியும் நேரத்தில் NEEK 2 லீட் கொடுத்து முடித்திருக்கிறார் தனுஷ். பெரிய எதிர்பார்ப்புடன் சென்று பார்க்கக் கூடிய படமில்லை, தனுஷுக்காக ஒருமுறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











