Parasakthi Review: பராசக்தி விமர்சனம்.. செந்தமிழ் தீ பரவியதா?.. நீதி வென்றதா?.. சுதா கொங்கரா இயக்கம் எப்படி?
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற இயக்குநர் சுதா கொங்கராவின் முயற்சியும் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலாவை வைத்துக் கொண்டு கமர்ஷியலாக கல்லா கட்ட வேண்டும் என்கிற தயாரிப்பாளரின் இயக்குநராகவும் சுதா கொங்கரா அருமையாகவே அரை சதம் அடித்துள்ள படம் தான் பராசக்தி.
முதலில் புறநானூறு என்கிற தலைப்பில் சூர்யா, துல்கர் சல்மானை வைத்து சுதா கொங்கரா உருவாக்க நினைத்த படம் கைகூடாத நிலையில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா எந்தளவுக்கு இந்த படத்தை தூக்கி நிறுத்தப் போகிறார்கள் என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியிலே இருந்த நிலையில், முழு படமாக பார்க்கும் போது அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

பக்தவச்சலம், அண்ணா துரை, கருணாநிதி, நேரு, இந்திரா காந்தி என ரியல் லைஃப் அரசியல் தலைவர்களையும் தமிழ் மொழிக்காக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தையும் வெகு சிறப்பாக காட்டியுள்ளனர். படமாக பராசக்தி படத்தின் நிறை, குறைகளை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
பராசக்தி கதை: புறநானூறு எனும் மாணவர்களின் புரட்சிப்படை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக ரயில் எரிப்பு போராட்டத்தை நடத்துவதாக படம் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே காவல் துறை அதிகாரியான திருநாடன் (ரவி மோகன்) ரயிலில் நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்) உடன் சண்டையிடும் காட்சிகளுடன் படம் பக்காவாக ஆரம்பிக்கிறது.
ஆனால், அந்த போராட்டத்தில் ஒரு மாணவர் உயிரிழந்ததும் இதற்கு மேல் இதெல்லாம் வேண்டாம் என செழியன் முடிவெடுத்து ரயிலில் கரி அள்ளி போடும் வேலை பார்த்து வருகிறார். ரயில் போராட்டத்தை விபத்து என்றே சொல்ல வேண்டும் என நேரு உத்தரவிட்டு மொழி பிரச்னை வராமல் பாதுகாக்கப்படும் என்கிற உத்தரவையும் கொடுக்கிறார்.
ஆனால், அவரது மகள் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மீண்டும் தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு பிரச்னை உருவாகிறது. காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வரான பக்தவச்சலம் அதற்கு ஆதரவாக செயல்பட மீண்டும் மாணவர் போராட்டம் எப்படி வெடிக்கிறது. தனது துப்பாக்கி சுடும் விரலை உடைத்த செழியனை பழிவாங்க திருநாடன் பொள்ளாச்சி மக்களை கொடுமைப்படுத்தி கொல்வது, மாணவர்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தை முடக்க அவன் செய்யும் சதிகளை நாயகன் செழியன் முறியடித்தாரா? இல்லையா? இந்திரா காந்தி தனது அப்பாவின் வாக்குறுதியை மீண்டும் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் பராசக்தி படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் செழியனாக சிறப்பாகவே நடித்துள்ளார். கமர்ஷியலாக படத்தை கொண்டு செல்லக் கூடிய அனைத்து வேலைகளையும் அவர் தனது ஜாலியான நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து விடுகிறார். அதே நேரத்தில் புறநானூறு படை தலைவனாக மாறும் இடங்களில் தமிழின் வீரம் பீரிட்டு எழுகிறது.
தெலுங்கு பெண்ணாகவே ஸ்ரீலீலா வந்து சிவகார்த்திகேயனுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கும் இடங்களும் அவரது தம்பி அதர்வாவின் போராட்டங்களை பார்த்து சிவகார்த்திகேயனை கலாய்க்கும் இடங்களும், ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்தாலும், மைக்கை பார்த்தால் பயத்தில் திக்கும் அவர் கிளைமேக்ஸில் நடித்துள்ள நடிப்பு கைதட்டல்களை அள்ளுகிறது.
அதர்வா படத்தில் அழுத்தம் திருத்தமான ஒரு நடிப்பை அசால்ட்டாக எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் நடித்துள்ளார். சுதா கொங்கராவின் ஃபேவரைட்டாக அவர் ஏன் உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். அண்ணன் கட்டி அணைக்கும் இடத்தில் அவரும் குழந்தையாக மாறுவது எல்லாம் ரசிக்க வைக்கிறது. சிவாஜி நடித்த பராசக்தி படத்தை கல்லூரியில் இந்தி படத்தை மாற்றிவிட்டு போடும் இடத்திலேயே அவருக்கான விசில் சத்தம் பறக்கிறது.
அனைவரையும் விட படத்தில் முதல் காட்சியில் இருந்து இறுதி கிளைமேக்ஸில் பேசும் வசனம் வரை ரவி மோகன் தான் இந்த படத்தின் ஹீரோவாகவே தெரிகிறார். மம்மி பட ஹீரோ லுக்கில் வரும் அவர், மனசாட்சி இல்லாத வில்லன் என்பதை வாயால் வடை சுடாமல் ஒரு கை குழந்தையை வைத்திருக்கும் பெண்ணையும் சுடும் காட்சியில் காட்டி மிரட்டி விடுகிறார். அம்மா இந்தி, அப்பா தமிழ் என்கிற குடும்ப பின்புலமாக இருந்தாலும், படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனை விட அவரது தமிழ் உச்சரிப்பு தான் தூக்கலாக உள்ளது.
பிளஸ்: ஜி.வி. பிரகாஷ் தனது 100வது படம் என்பதை தாண்டி தமிழ் மொழிக்கான படம் என்பதால் தனது ஒட்டுமொத்த மூளையையும் கசக்கி பின்னணி இசை மற்றும் பாடல்கள் என அனைத்தையுமே படத்திற்கு பெரிய பலமாக மாற்றி கொடுத்துள்ளார். அரசியல் தலைவர்களை தவறாக சித்தரித்து விடக் கூடாது என்பதில் சுதா கொங்கரா தனது புத்திசாலிதனத்தை பயன்படுத்திய விதமும் சிறப்பு தான். எந்தவொரு மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது. மொழி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம் என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே பதிய வைத்தது அருமை. ராணா டகுபதி, பேசில் ஜோசப் கேமியோவும் கலக்கல். பீரியட் பயோபிக் டிராமாவாக போர் அடிக்கும் படமாக மாற்றாமல் வில்லன், ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை, காதல், பழிவாங்கல் என டிராமாவாக மாற்றியுள்ளார்.
மைனஸ்: ஆனால், அதுவே படத்தின் வீரியத்தையும் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தையும் பல இடங்களில் குறைத்து விடுகிறது. இப்படியொரு கதையை ரொம்பவே கமர்ஷியலைஸ் செய்து விட்டார் என்று தான் தோன்றுகிறது. மேலும், சென்சார் தரப்பில் ஏகப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டும், வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் நிலையில், சினிமாவில் கூட சுதந்திரம் இல்லையே என ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும் போது புலம்புவதையும் காண முடிகிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: டெல்லிக்குச் சென்று சிவகார்த்திகேயன் இந்திரா காந்தியையே மிரள விடும் போராட்டத்தை பண்ணுவதெல்லாம் ஹைலைட். அதே போல இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் முக்கியம் என்பதையும் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்துள்ளார். கண்டிப்பாக இந்த பொங்கலுக்கு பராசக்தி படத்தை தாராளமாக தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











