Pathu Thala Review: சிம்புவின் "பத்து தல" விமர்சனம்... AGR எப்ப தான் வருவார்? அந்த ஹெலிகாப்டர் சீன்!
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது பத்து தல.
ஒரிஜினல் வெர்ஷனில் இருந்து பல மாற்றங்களுடன் தமிழில் உருவாகியுள்ள பத்து தல படம் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
பத்து தல விமர்சனம்
சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், அனு சித்தாரா, கெளதம் மேனன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியுள்ளது பத்து தல. ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நீளமான தாடி என மிரட்டலான கெட்டப்பில் நடித்துள்ளார் சிம்பு. படம் முழுவதும் அவரது கெட்டப்பும் கேரக்டரின் வெயிட்டேஜும் ரசிகர்களுக்கு நிச்சயம் வைப் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏஜிஆரின் பத்து தல கதை
படம் ஆரம்பித்த இரண்டாவது காட்சியில் முதலமைச்சர் அருண்மொழி (சந்தோஷ் பிரதாப்) கடத்தப்படுகிறார். இதில் துணை முதலமைச்சர் நாஞ்சிலார் குணசேகரனுக்கு (கெளதம் மேனன்) தொடர்பு இருக்கும் என விசாரணையை தொடங்குகிறது போலீஸ். இந்த விசாரணையில் சம்பந்தமே இல்லாமல் அமீர் (கலையரசன்) மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதேவேகத்தில் அவரும் போலீஸிடம் இருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொள்கிறார். இந்த பரபரப்பின் நடுவில் அடிக்கடி ஏஜிஆர் (சிம்பு) என்ற பெயரை மட்டும் ஒவ்வொரு பாத்திரமும் உச்சரிக்கிறது.
யார் இந்த ஏஜிஆர்?
முதல் பாதியின் இறுதியில் தான் ஏஜிஆரான சிம்பு என்ட்ரி கொடுக்கிறார். அதுவரையிலும் அவரது பின்னணியை மட்டுமே பலவிதங்களில் காட்டுகிறது பத்து தல. இதனிடையே ஏஜிஆரின் கோட்டைக்குள் அன்டர்கவர் ஆபிஸராக நுழைகிறார் குணா (கெளதம் கார்த்திக்). முதலமைச்சரை கடத்திய ஏஜிஆர் தானா என்பதை கண்டுபிடிப்பதுடன், அவரது மணல் மாஃபியாவுக்கும் முடிவு கட்டுவது தான் குணாவுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். இதோடுசேர்த்து முன்னாள் காதலி லீலா தாம்ப்ஸனையும் (ப்ரியா பவானி சங்கர்) சந்திக்கிறார் குணா, அதற்காகவே 'நினைவிருக்கா' என ஒரு பாடலையும் இலவச இணைப்பாக இணைத்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா.
லாஜிக் இல்லாத மேஜிக்
சிம்புவின் அராஜகத்துக்கு கெளதம் கார்த்திக் முடிவு கட்டினாரா இல்லையா என்பது தான் மொத்த கதையும். இதுபோன்ற படங்களில் அன்டர் கவர் ஆபிஸர் கேரக்டர் ரசிகர்களுக்கே சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால், அவர் சிம்புவை நெருங்கும் முன்பு இயக்குநரே ட்விஸ்ட்லாம் தேவையே இல்லை என உண்மையை சொல்லிவிடுகிறார். மிகச் சர்வசாதாரணமாக துப்பாக்கியை வைத்துக்கொண்டு கண்ணில் படுபவர்களையெல்லாம் மிரட்டுகிறார் ரெடின் கிங்ஸ்லி. என்னதான் ஏஜிஆர் பெரிய கேங்ஸ்டராக இருந்தாலும் இப்படியான காட்சிகளை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
வீணடிக்கப்பட்ட பாத்திரங்கள்
அதேபோல், முதலமைச்சரின் மனைவி அனு சித்தாரா சிம்புவின் தங்கை என தெரியவரும் காட்சியிலும் ரசிகர்களுக்கு எந்த எமோஷனலும் வரவில்லை. ப்ரியா பவானி சங்கர் வழக்கமான ஹீரோயின் மெட்டீரியலாக வந்து போகிறார். அவருக்கும் கெளதம் கார்த்திக்கும் இடையேயான காதல் காட்சிகள், அவர்கள் ஏன் பிரிகிறார்கள் என எதுவும் அழுத்தமாக இல்லை. படத்தின் முதல் காட்சியிலேயே மிரட்டலான வில்லன் போல என்ட்ரியான கெளதம், கடைசி வரை போஸ் மட்டுமே கொடுத்துவிட்டு சிம்புவின் கையால் மாண்டு போகிறார்.
கேஜிஎஃப் கலர் ஜெராக்ஸ்
அதேபோல், சந்தோஷ் பிரதாப், கலையரசன், டிஜே என பல கேரக்டர்கள் திடீரென வருகிறார், பின் அதேவேகத்தில் மாயமாகிறார்கள். கெளதம் கார்த்திக்குக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் பல இடங்களில் உணர்ச்சிகளே இல்லாமல் ரோபோ மாதிரி நடித்து வீணடித்துள்ளார். ஏஜிஆர், மணல் மாஃபியா, கேங்ஸ்டர் ஜானர் என்பதற்காக நிலக்கரி சுரங்கம், சிம்புவின் வீடு, கறுப்பு வேட்டி, சட்டை காஸ்ட்யூம் என கேஜிஎஃப் படத்தின் டோனை கலர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. சிம்புவுக்கு ஜோடியும் டூயட்டும் இல்லை என்பது பெரிய ஆறுதலான விசயம். அதேபோல், ஆக்ஷன் காட்சிகளிலும் பெரிய மனது பண்ணி அவர் அடக்கி வாசித்துள்ளார். சிம்புவுக்கு பதிலாக கெளதம் கார்த்திக், மது குருசாமி, டிஜே ஆகியோர் ஆக்ஷனில் கலக்குகின்றனர்.
சிம்பு ரியல் கேங்ஸ்டர்
சிம்புவிற்கு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டர் கச்சிதமாக பொருந்திவிடுகிறது. ஹேர் ஸ்டைல், பாடி லேங்குவேஜ், காஸ்ட்யூம், அந்த மிரட்டல் லுக் எல்லாமே மரண மாஸ். ஆனால், எப்போதுமே விரக்தியான மனநிலையில் இருந்து ரசிகர்களையும் சோதிக்கிறார். ஏஜிஆரிடம் மன்னிப்பே கிடையாது என்ற வசனத்திற்காக துரோகம் செய்தவர்களை எல்லாம் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளுவதும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. காட்சிக்கு காட்சி ரத்த வெறி பிடித்து நரவேட்டை ஆடியிருக்கிறார் ஏஜிஆர் என்ற சிம்பு.
ஏஆர் ரஹ்மான் தான் ரியல் ஹீரோ
ஓட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் செய்ய நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய துணிந்தவன் ஏஜிஆர். அப்படி அவன் யாரை கொலை செய்தான், எதற்காக கொலை செய்தான் என்பது தான் பத்து தல படத்தின் ஒன்லைன். அதற்காக சில காட்சிகளில் ரசிகர்களையும் சேர்த்து கொலை செய்வது எந்தவிதத்தில் நியாயம்.? இதையெல்லாம் கடந்து பார்த்தால் ஏஆர் ரஹ்மான் தான் இன்னொரு ஹீரோ. பாடல்கள், பின்னணி இசை என சீன் பை சீன் மிரட்டியுள்ளார். முக்கியமாக 'ஒசரட்டும் பத்து தல' பாடலுடன் வரும் ஆக்ஷன் போர்ஷன் அதகளமான ட்ரீட்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்
இயக்குநர் கிருஷ்ணா சிம்பு ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து படம் எடுத்துவிட்டாரோ என்னவோ.? ஆனாலும், பல காட்சிகளில் சிம்பு ரசிகர்களே சைலண்ட் மோடில் தான் இருந்தனர். முக்கியமாக சிம்பு அடிக்கடி ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் மீண்டும் பறக்கிறார். ஆனால், அவர் எங்கே போகிறார், எதற்கு அந்த ஹெலிகாப்டர் காட்சிகள்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. மொத்தத்தில் பத்து தல ரசிகர்களை பதம் பார்க்கும் ஏஜிஆரின் மாயவலை.


Click it and Unblock the Notifications











