Por Thozhil Review: தேவையில்லாமல் ஒரு சீன் கூட இல்லை.. தெளிவான த்ரில்லர்.. போர் தொழில் விமர்சனம்!
இசை: ஜேக்ஸ் பிஜோய்
சென்னை: வழக்கமான ஒரு சீரியல் கில்லர் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதன் விசாரணையில் தனது திரைக்கதை திறமையையும் மேக்கிங்கையும் காட்டி புகுந்து விளையாடி புதிய த்ரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா.
ரக்கட் ஆன ராவான போலீஸ் அதிகாரியாக சரத்குமார் இந்த படத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன், வாரிசு படங்களில் சரத்குமாருக்கு பெரிய ரோல் இருந்தும் அவரை பர்ஃபார்மன்ஸ் பண்ண விடவில்லை.

ஆனால், இந்த படத்தில் ஹீரோ அசோக் செல்வனையே தனது அனுபவ நடிப்பால் தூக்கி சாப்பிடுகிறார் சரத்குமார். சீரியல் கில்லர் த்ரில்லர் படமாக வெளியாகி உள்ள போர் தொழில் படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
போர் தொழில் கதை: திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு பெண் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கிறாள். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் உள்ளூர் போலீஸாரால் இந்த வழக்கை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக உருவாக்கும் ஸ்பெஷல் டீமில் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. லோக்நாத்திடம் (சரத்குமார்) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவரது டீமில் புதிதாக இணைந்துள்ள அனுபவமே இல்லாமல் படிப்பு அறிவை மட்டுமே கொண்டுள்ள பிரகாஷ் (அசோக் செல்வன்) மற்றும் அனுபவம் வாய்ந்த லோக்நாத் இருவரும் எப்படி அந்த சீரியல் கில்லரை கண்டு பிடிக்கின்றனர் என்கிற விசாரணை கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த போர் தொழில்.
பட விமர்சனம்: போலீஸ் படமாக உருவானாலும் தேவையில்லாத சண்டைக் காட்சிகளோ, பாடல்களோ, ஃபில்லர் காட்சிகளையோ வைத்தோ ஒரு செகண்ட் கூட இயக்குநர் படத்தை நகர்த்தவில்லை. அந்த அளவுக்கு படத்தின் எடிட்டர் வேலை பார்த்துள்ளார்.
பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தாலும், சைக்கோ கொலையாளியை நியாயவானாக காட்டாமல் சமூகம் எப்படி மனிதர்களை மாற்றுகின்றன என்பதை எடுத்துக் காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.
பிளஸ்: சரத்குமாருக்கு நடிப்பதற்கு சரியான தீனிப் போட்டுள்ளார் இயக்குநர். அதை அப்படியே பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடித்து மிரட்டி இருக்கிறார் சரத்குமார். அசோக் செல்வன் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எப்படிப்பட்ட கதையிலும் தன்னை அப்படியே பொறுத்திக் கொண்டு நடிப்பார். இந்த படத்தில் அதிக பிரசங்கித் தனமாகவும் ஒன்றுமே தெரியவில்லை என்றாலும், தெரிந்தவர் போல பாவலா பண்ணும் இடங்களிலும் கொலையாளியை தேட பழைய வழக்குகளை ஆராயும் இடங்களிலும் மாஸ் காட்டுகிறார்.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை திகில் படமா திரில்லர் படமா என்கிற உணர்வையே கொடுக்கிறது. ஆல்ஃபிரட் பிரகாஷ் - விக்னேஷ் ராஜாவின் வசனங்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு இந்த படத்தில் ஒரு சிறப்பான ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மைனஸ்: இடைவேளைக்கு முன்பாகவே சைக்கோ கொலையாளியை சரத்குமாரும், அசோக் செல்வனும் கண்டு பிடித்து விடுவது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்து விடுமோ என படத்தை பார்த்த அனைவரும் அஞ்சினாலும், அதன் பின்னரும் கதையை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என இயக்குநர் திரைக்கதையில் விளையாடிய விதம் படத்தின் சில பிளாஷ்பேக் காட்சி மைனஸ்களையும் கடந்து பார்க்கத் தூண்டுகிறது.


Click it and Unblock the Notifications











