பஹீரா விமர்சனம்: பெண்கள் மீது இயக்குநருக்கு அப்படி என்ன கோவம்? சரியான பூமரா இருக்காரே!
நடிகர்கள்: பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ஜனனி, காயத்ரி, ரம்யா நம்பீசன்
இசை: கணேசன்
இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், நாசர் மற்றும் ஸ்ரீகாந்த் என ஏகப்பட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகி உள்ள சைக்கோ த்ரில்லர் படம் தான் பஹீரா.
படத்தின் டைட்டிலையும், பிரபுதேவாவையும் நீக்கி விட்டால் இது ஒரு படமாகவே இருக்காது. இதில், வேடிக்கை என்னவென்றால் அந்த இரண்டும் இருந்தும் இது ஒரு படமாகவே இல்லாமல் பெண்களை பழிவாங்கும் படலமாகவே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அம்மிக் கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியதை போல இந்த படத்தைக் கொத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பெண் வேடம், மொட்டை தலை, முடி வச்சு, வைக்காமல் என பல கெட்டப்புகளில் பஹீராவாக வரும் பிரபுதேவாவின் இந்த படம் தேறியதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
என்ன கதை
காதலித்து ஆண்களை ஏமாற்றும் பெண்களை ஒரு டெடி பியர் பொம்மை ஒரு பக்கம் கொடுரமாக கொலை செய்கிறது. மறுபக்கம் அமைரா தஸ்தூர், காயத்ரி, ஜனனி, சஞ்கிதா ஷெட்டி மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பெண்களை நான் அவனில்லை பாணியில் காதலித்து ஏமாற்றி வருகிறார் பிரபுதேவா. அந்த கரடி பொம்மைக்கும் பிரபுதேவாவுக்கும் என்ன சம்பந்தம், இப்படி கொலைவெறி பிடித்து பெண்களை பழிவாங்க பிரபுதேவா துடிக்க என்ன காரணம் என்பது தான் இந்த பஹிரா திரைப்படத்தின் கதை.
பல கெட்டப்புகளில் பிரபுதேவா
பஹீரா எனும் சைக்கோ ராஜாவா நடித்துள்ள பிரபுதேவா இந்த படத்தில் பல கெட்டப்புகளை போட்டு பல பெண்களை பழிவாங்குகிறார். பெண் வேடம் போட்டுக் கொண்டு ஒரு பெண்ணை பெட்ரோல் ஊத்திக் கொளுத்தி விட்டு அங்கேயே நடனம் ஆடுவது, யாஷிகா ஆனந்தை திருமணம் செய்து கொண்டு காரில் கூட்டிக் கொண்டு செல்லும் போது, போஸ்ட் கம்பத்தில் தலையை மிதித்து மோத விட்டு கொலை செய்வது என காட்சிகள் பார்க்கவே அருவருப்பாக உள்ளது.
அமைரா தஸ்தூர் ஆறுதல்
அமைரா தஸ்தூர், ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த் என ஏகப்பட்ட ஹீரோயின்கள் படம் முழுவதும் வந்து செல்வதுமாக உள்ள நிலையில், அனேகன் பட ஹீரோயின் அமைரா தஸ்தூர் மட்டுமே மருத்துவ மாணவியாக சைக்கோக்களை ஆராய்ச்சி செய்யும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். மற்ற நடிகைகளை மொத்தமாக இயக்குநர் வீணடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அத்தனையும் அபத்தம்
சிகப்பு ரோஜாக்கள், மன்மதன் பாணியில் படம் எடுக்க வேண்டும் என நினைத்து அதை விட மோசமான ஒரு அபத்த படத்தை இயக்கி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். எத்தனை பசங்களை ஏமாத்தியிருப்ப, உன்னை பலாத்காரம் பண்ணட்டும் என பலாத்காரம் செய்ய அனுமதிக்கும் காட்சியில் எல்லாம் பிரபுதேவா எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை. 8 வருஷம் ஒருத்தனை சின்சியரா லவ் பண்றேன், அவனை கூட தொட விடல என அந்த பெண் சொன்னதும் நம்ப முடியாமல் நீங்க எல்லாம் எங்கம்மா இருக்கீங்க என்று கேட்பது எல்லாம் தமிழ்நாட்டு பெண்களையே அவமானப்படுத்துவது போல இருக்கிறது.
பிளஸ்
பிரபுதேவாவின் நடிப்பு மட்டுமே இந்த படத்திற்கு பிளஸ் என்று பெயருக்கு சொல்லலாம். படத்தின் இரண்டாம் பாதியில், பிரபுதேவாவின் பிளாஷ்பேக் போர்ஷன், பார்வையற்றவராக நடித்திருப்பது என அவர் மட்டுமே கவனம் ஈர்க்கிறார். மற்றபடி இந்த படத்தை பற்றி சொல்லும் அளவுக்கு எந்தவொரு பிளஸ்ஸும் இல்லை.
மைனஸ்
இதற்கு மேல் இதுபோன்ற படங்களை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்காமல் இருந்தாலே போதும் என்கிற அளவுக்குத்தான் இந்த படம் இருக்கிறது. ரூபன் தான் எடிட் செய்தாரா என்றே குழம்பிப் போகும் அளவுக்கு காட்சிகள் ஜம்ப் கட் போல எகிறுகின்றன. சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும் என்பது போலத்தான், அதனை கடக்க வேண்டியிருக்கிறது. ஆபாச வசனங்கள், பூமர் அங்கிள் போன்ற பிற்போக்குத்தனமான வசனங்கள், நல்ல பொண்ணா இருந்தா புருஷன் தொட்டா மட்டும் தான் சந்தோஷப்படுவான் என்றும், வகுப்பறையில் ஆசிரியர் போடுறது பற்றி பேசுவது என படமே ஒரு பெரிய மைனஸாகவே உள்ளது. தலைவலி வந்தது தான் மிச்சம்!


Click it and Unblock the Notifications











