Aadujeevitham First Review: ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கு.. இணையத்தில் வெளியான முதல் விமர்சனம்!
சென்னை: மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தி கோட் லைப் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஆடு ஜீவிதம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள இந்த படத்தில், நாயகனாக பிருத்விராஜும் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கி உள்ள இந்த படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது.
தி கோட் லைப் நாவல், கேரளத்திலிருந்து வயிற்று பிழைப்பிற்காக அரபு நாட்டுக்கு செல்லும் இருவர், அரேபியாவில் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவல், தமிழிலும் இந்த நாவல் மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் தற்போது ஆடு ஜீவிதம் திரைப்படம் உருவாகி உள்ளது.

ஆடு ஜீவிதம் : வரும் 28ந் தேதி ஐந்து மொழியில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சுனில் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும், அதிகரித்துள்ளது.
பிரித்விராஜ் பேட்டி: இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் பிருத்விராஜ், 2008ம் ஆண்டு இயக்குநர் ப்ளெஸ்ஸி என்னிடம் இந்த கதையை கூறி, நஜீப் கேரக்டரில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றார். மோகன்லால், மம்முட்டி என்ற நடிகர்கள் இருக்கும் போது, ஒரு முன்னணி இயக்குநர் என்னை அணுகியதை நினைத்து பெருமை அடைந்தேன், இந்த படத்திற்காக அவர், 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
தன்னம்பிக்கை கதை: இந்தப் படத்துக்கு 2008 ஆண்டில் சம்மதம் தெரிவித்தேன். ஆனால், அப்போது, எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது. சினிமாவுக்கு குறிப்பாக மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல காலகட்டம். இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையையும் பற்றி கூறுகிறது. அவரை போல இருக்கக்கூடிய பலருக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன்.
பல ஆண்டு கழித்து: படத்தின் ஒரு பாதியில் குண்டாகவும், மறு பாதியில் எடை குறைத்து இருக்க வேண்டும் இதற்காக உடல் எடை குறைய இயக்குநர் ப்ளெஸ்ஸி எனக்கு அவகாசம் கொடுத்தார். பின் படப்பிடிப்பை தொடங்கும் போது கொரோனா வந்துவிட்டதால், மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் பாலைவனத்திலேயே சிக்கிவிட்டோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, தொடங்காதா என எதுவுமே தெரியவில்லை. இப்போது பல கட்ட முயற்சிக்கு பிறகு படம் வெளியாவது மகிழ்ச்சி என்றார்.
முதல் விமர்சனம்: இந்நிலையில், ஆடு ஜீவிதம் படம் பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர், படம் குறித்து தனது விமர்சனத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஆடு ஜீவிதம் எனும் அற்புதமான படத்தை பார்த்தேன். அதில், விஷுவல் காட்சிகள் பிரமாதமாக இருந்தன. நடிகர் பிரித்விராஜ், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு எனது பாராட்டுக்கள். அற்புதமான BGM உடன் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான். இந்த உண்மை கதையை செல்லுலாய்டில் கொண்டு வந்ததற்காக இயக்குநர் பிளஸ்ஸிக்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவு இணையற்றவை. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











