Raakaasa Review: பிரம்ம ராட்சசனுக்கு நரபலியா மாட்டிக்கும் ஹீரோ.. அப்புறம் என்னாச்சு? ராக்கசா விமர்சனம்!
சென்னை: தெலுங்கில் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'ராக்கசா' (Raakaasa) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் டப்பிங் உடன் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கக் கூடிய காமெடி கலந்த பேய் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
மானசா சர்மா இயக்கத்தில் சங்கீத் ஷோபன், நயன் சாரிக்கா, ஆஷிஷ் வித்யார்த்தி, வெண்ணிலா கிஷோர், சுக்விந்தர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ராக்கசா திரைப்படம் ஓடிடியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா பாணி படங்களையும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் வரிசை படங்களையும் பார்த்து ரசித்த ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்த படமும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ராக்கசா கதை: ஒரு ஊரில் ஒரு பிரம்மாண்ட பாழடைந்த கோட்டை ஒன்று உள்ளது. அந்த காலத்தில் எதிரி நாட்டிடம் இருந்து தனது மக்களை காப்பாற்ற மன்னன் ஒரு பிரம்ம ராட்சசனின் உதவியை நாட அவனும் மன்னனுக்கு உதவி செய்தான். பதிலுக்கு ஒவ்வொரு வீட்டில் இருந்து மாமிசமும் ஒரு வீட்டில் இருந்து மட்டும் ஒருவர் நரபலியாக செல்ல வேண்டும் என்கிற ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த சடங்கை எதிர்த்து அந்த மன்னனின் வம்சாவளியில் வந்த ஒரு மன்னன் ராட்சசனை கொல்ல படையுடன் சென்று மொத்தமாக அழிந்து போனான்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊரில் நரபலி வேண்டி ராட்சசன் கேட்க, அமெரிக்காவில் இருந்து தனது காதலியை பார்க்க வரும் ஹீரோ மாட்டிக் கொள்கிறார். கோட்டைக்குள் குழந்தையை பலியாக கொடுத்தால் கூட விடாத பிரம்ம ராட்சசன் ஹீரோவை என்ன செய்தான். ஹீரோவை காப்பாற்ற ஹீரோயின் எடுத்த முயற்சிகள் கைகொடுத்ததா? என்பது தான் இந்த படத்தின் கதை.
பார்க்கலாமா? வேண்டாமா?: காதலியை கைப்பிடிக்க ஊருக்கு வரும் ஹீரோவுக்கு அந்த காதலியின் திருமணம் அன்று நடைபெறுகிறது தெரிய வருகிறது. காதலி ஏமாற்றிவிட்டு செல்ல, அந்த ஊரில் மாந்தரீகம் செய்யும் பெண்ணுடன் ஹீரோவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறுகிறது.
வயதான கிழவன் ஒருவரையே ஊர் நரபலி கொடுக்க அனுப்ப, இதெல்லாம் மூடநம்பிக்கை என சொல்லிவிட்டு அந்த விளக்கை அணைத்து விட்டு தானாக வந்த பலி ஆடாக ஹீரோ மாட்டிக் கொள்கிறார். அதன் பின்னர், ஹீரோ கோட்டைக்குள் செல்ல, அங்கே ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் காத்துக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் உள்ளே எல்லாமே டிராப் போன்று இருக்கும் நிலையில், செட்டப்பா என்று பார்த்தால் நெருப்பு ராட்சசன் ஹீரோ முன்பு வர படம் சூடு பிடிக்கிறது.
ஹீரோவை தேடிக் கொண்டு ஹீரோயினும் கோட்டைக்குள் நுழைய, இருவரும் அங்கே இருந்து தப்பித்தார்களா? இல்லையா? பிரம்ம ராட்சசனை அழித்தார்களா? அல்லது அவனுக்கு இரையானார்களா? என்பதை கடைசி வரை போர் அடிக்காமல் கொண்டு சென்ற விதத்தில் படத்தை பார்க்கலாம். ஜாலியான ஒரு பேய் படமாகவே கொண்டு சென்றுள்ளது ஹாரர் விரும்பிகளை ஏமாற்றினாலும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பூச்சாண்டி கதையாக இருக்கும். இந்த சம்மர் விடுமுறைக்கு தாராளமாக குடும்பத்துடன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த ராக்கசா படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications