Raghu Thatha Review: ரகு தாத்தா விமர்சனம்.. இந்தி திணிப்பு மட்டுமல்ல.. கலாச்சார திணிப்பும் இருக்கு!
நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், ரவிந்திர விஜய், எம்.எஸ். பாஸ்கர்
இசை: ஷான் ரோல்டன்
இயக்கம்: சுமன் குமார்
ரேட்டிங்: 3/5
சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் இந்தி திணிப்புக்கு எதிரான படம் இது என காட்டப்பட்டு இருந்தது. இது முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் சட்டயர் மற்றும் பெண்ணுரிமை படமாக உருவாகியிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் உமன் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அவருக்கு இந்த 'ரகு தாத்தா' படம் கை கொடுத்ததா? அல்லது கை விரித்ததா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ரகு தாத்தா கதை: முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்து வரும் காலத்தில் வள்ளுவன்பேட்டை கிராமத்தில் இந்தி கற்றுக் கொடுக்கும் சபா இருக்கக் கூடாது என போராடி அதற்கு பூட்டுப் போடும் கயல்விழி பாண்டியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வங்கியில் இந்தி படித்தால் தான் புரமோஷன் கிடைக்கும் என வங்கி அதிகாரி சொல்லும் போது, அவரையும் மிரட்டுகிறார். க. பா எனும் பெயரில் ஆண் எழுத்தாளர் போல சிறுகதைகளையும் எழுதி வருகிறார். அவருக்கு தமிழ் செல்வன் (ரவிந்திர விஜய்) ரசிகராக உள்ளார். தாத்தா எம்.எஸ். பாஸ்கருக்கு கொடிய நோய் ஏற்பட்ட நிலையில், சீக்கிரம் போய் விடுவார் என டாக்டர் சொல்ல, அவருடைய கடைசி ஆசைகளில் ஒன்றாக பேத்தியின் திருமணம் இடம்பெறுகிறது.
தன்னை புரிந்துக் கொண்டும் தனது பெண்ணிய கருத்துக்களை மதிக்கும் நபராக இருக்கும் தமிழ் செல்வனையே திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கும் கயல்விழி ஏன் இந்தி கற்கிறார், இந்தி தேர்வு எழுதுகிறார், இந்தி சபாவை திறந்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் அந்த இந்தி பண்டிதர் (ஆனந்தசாமி) அந்த சபாவை திறந்தாரா என பல கேள்விகளுக்கு விடையாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

படம் எப்படி இருக்கு?: சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சுமாருக்கும் சூப்பருக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறது. மலையாளத்தில் வெளியான 'ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் வரும் ஒரு சின்ன போர்ஷனை முழு படமாக எடுத்துள்ளார் இயக்குநர் என்பது போலத்தான் தோன்றுகிறது. கீர்த்தி சுரேஷ் கயல்விழி பாண்டியனாக சிக்ஸர் அடித்திருக்கிறார். நிச்சயதார்த்த நிகழ்ச்சி மற்றும் படத்தின் கிளைமேக்ஸ் திருமண காட்சிகள் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல ட்ரீட்டாக இருக்கும். கீர்த்தி சுரேஷை தாண்டி அவரது காதலனாக வரும் ரவிந்திர விஜய் சிறப்பாகவே நடித்துள்ளார். தாத்தாவாக எம்.எஸ். பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார்.
வங்கி அதிகாரியாக நடித்துள்ள ராஜீவ் ரவிந்திரநாதன் தப்பு தப்பாக தமிழ் பேசும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலை அதிர்கிறது. தேவதர்ஷினி முடிந்தவரை படத்திற்கு சப்போர்ட் செய்ய முயற்சித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அண்ணன் மற்றும் அந்த 500 ரூபாய் லாரி அண்ணி கதாபாத்திரம் கலக்கல்.
இந்தி திணிப்பு பற்றிய படமாக ஆரம்பிக்கும் இந்த படத்தில் அதை பற்றிய அழுத்தமான கதை இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த இந்தி பண்டிதரை பார்த்தால் தான் பாவமாகவே இருக்கிறது. கடைசி வரை அவருக்கு பெரிதாக எந்தவொரு ஸ்கோப்பும் இல்லை.

இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என பொங்கும் கீர்த்தி சுரேஷ் தனக்கு புரமோஷன் வேண்டுமென்பதற்காக இந்தி படிப்பது, பெரிய தப்பை சரி செய்ய சின்ன தப்பு பண்ணா தப்பே இல்லை என சொல்லும் போது அந்நியன் விக்ரமின் எக்ஸ் எல் சைஸ் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. இந்தி திணிப்பு மட்டும் பெரிய விஷயமல்ல காலம் காலமாக பெண்கள் மீது கலாச்சாரம் எனும் பெயரில் நடத்தப்படும் ஆணாதிக்க திணிப்பு தான் கொடுமையானது என்பதை கடைசியாக உணர்த்த படத்தை எங்கெல்லாமோ கொண்டு சென்று தலையை சுற்றி மூக்கை தொடுவது போல இயக்குநர் தொட்டுள்ளார்.
பிளஸ்: கீர்த்தி சுரேஷ் மற்றும் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் நடிப்பும் பார்க்கும்படியும் ரசிக்கும்படியும் உள்ளது. ஒரு சில ஒன்லைனர்கள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. ஷான் ரோல்டன் முடிந்த வரை தனது இசை மூலம் பல காட்சிகளை தூக்கி நிறுத்த முயற்சித்துள்ளார். நிச்சயதார்த்த போர்ஷன், பெண்ணுரிமை பற்றி பேசும் இடங்கள், கிளைமேக்ஸ் திருமண போர்ஷனில் மாப்பிள்ளையை கடத்தும் சீன் உள்ளிட்டவை படத்திற்கு பலம்.

மைனஸ்: படம் முழுவதுமே ஆன் அண்ட் ஆஃப் ஆகவும் ஒரு கல்லூரி டிராமா போலவுமே நகர்வது படத்திற்கு பெரிய மைனஸ் ஆகவே பார்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் இயக்குநர், படம் நெடுகிலும் அதை செய்ய தவற விடுகிறார். படத்தில் எங்கேயும் பெரிதாக சிக்கலான முடிச்சுகளை போட்டு அதை அவிழ்த்தால் தான் சுவாரஸ்யமாகவும் திரில்லாகவும் இருக்கும். ஆனால், சுத்தமாக அது இந்த படத்தில் மிஸ்ஸிங். இப்படித்தான் இடைவேளை இருக்கும், இப்படித்தான் கிளைமேக்ஸ் இருக்கும் என கெஸ் பண்ணுவது போலத்தான் படம் இருக்கிறது. இன்னமும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருந்தால் படம் தரமாக வந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











