twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட விமர்சனம்

    By Staff
    |

    ரிதம்...இசையில் மட்டுமல்ல, மனிதர்களின் வாழ்க்கையிலும் ரிதம் இருக்கிறது என்பதை கவிதைத்தனமாய் சொல்லமுயற்சித்திருக்கிறார் இயக்குனர் வஸந்த்.

    இந்தி பேசும் பம்பாயில் தமிழ்பேசும் மீனாவைப்பார்த்து ஆர்வமாக வலியப்போய் பேசுகிறார் அர்ஜூன். மீனா தவறானகண்ணோட்டத்தில் எரிச்சலுடன் இனிமேல் உங்க தலையை எங்குப் பார்த்தாலும் ஓடிப்போய்டுவேன் என்று குட்பை சொல்லிபிரிவது தான் இருவரின் முதல் சந்திப்பு. பிறகு சூழ்நிலைகள் இருவரையும் அடிக்கடி சந்திக்கவைக்கிறது. மெலிதாய் ஒருநெருக்கம் உருவாகிறது.

    அர்ஜூன் ரயில் விபத்தில் மனைவியை இழக்கிறார். அதே ரயில் விபத்தில் தன் கணவனை இழந்து விதவையானவர் மீனா. இந்ததனி மரங்கள் ரயில் பயணத்திலேயே சந்திப்பது சுவை. மீனாவை திருமணம் செய்துகொள்ள முன் வருகிறார் அர்ஜூன்.

    இதை கொஞ்சமும் விரும்பாத மீனா விலகி விலகிச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் தனது பக்கம் இழுக்க அர்ஜூன்முயல்வது தான் கதை.

    அர்ஜூனின் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் ஜோதிகா, படத்தில் உற்சாகத்தைத் தெளித்துவிட்டுப் போய் விடுகிறார்.

    மீனாவின் கணவனாக வரும் ரமேஷ் அரவிந்த், மீனாவை திருமணம் செய்து கொண்டு இறக்கிறார். இந்த ஜோடி தொடர்பானகாட்சிகள் இன்னும் நன்றாக செய்திருக்கலாம். மிக சுருக்கமாக முடித்துவிடுகிறார்கள்.

    ஆனால், மெயின் கதையை ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். அர்ஜூன், மீனா திருமணம் செய்கிறார்களா, இல்லையா என்றக்ளைமாக்ஸ் எப்படா வரும் என்று பக்கத்து சீட்காரர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிற அளவுக்கு இழுத்திருக்கவேண்டாம்.

    அர்ஜூனின் அப்பாவாக வரும் நாகேசும் சரி அம்மாவாக நடிப்பவரும் சரி ரொம்ப யதார்த்தமாகவும், அனுபவபூர்வமாகவும்செய்திருக்கிறார்கள். அவர்களின் நகைச்சுவை நிறைந்த இயல்பான டயலாக்களும் நன்றாகவே இருக்கினறன.

    மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக கிடக்கிறார் அர்ஜூனின் அம்மா. அருகில் அப்பா நாகேஷ். என்னங்க..நான் மேலபோயிடுவேன்னு தோணது. நீங்க நல்லா இருங்க என்று சொல்ல, அதற்கு நாகேஷ் சோகமாக எல்லோரும் ஒரு நாள் மேலதானேபோகப்போறோம். நீ முன்னால போ, நா பின்னாலே வர்றேன் என்கிறார்.

    அது சரி, நீங்க வரும் போதாவது நம்ம புள்ள கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்ங்கிற நல்ல செய்தியோட வாங்க என்று தழுதழுத்தகுரலில் சொல்லும்போது சோகத்தை அந்தத் தம்பதி புன்னகையுடன் எதிர்கொள்கிற விதம் அட்டகாசமான அழகு.

    படத்தை பாதிக்கும் மேல் ஆக்கிரமிப்பது ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்கள். பஞ்சபூதங்களை தீமாக வைத்துக் கொண்டு வைரமுத்துசெதுக்கிய கவிதைகளுக்கு ரஹ்மான் அடித்திருக்கும் இசை நீண்ட நாட்கள் நம்மை தூங்கவிடப் போவதில்லை.

    இந்தியன் எக்ஸ்பிரஸில் போட்டோ எடிட்டராக வருகிறார் அர்ஜூன், ஜோதிகாவுடன் பாட்டு, மீனாவுடன் காதல் என்றுபரபரப்பாகவே செய்திருக்கிறார்.

    ரம்யா கிருஷ்ணன் பத்திக்கிச்சு...பத்திக்கிச்சு பாடலுக்கு தீயாய் ஆடியிருக்கிறார். கவர்ச்சி நெருப்பில் நம்மை சுட்டுப்பொசுக்குகிறார்.

    மீனா, ரமேஷ் அரவிந்துடன் கொஞ்ச நேரம் வருகிறார். ஆசிரமங்களை, அனாதைக் குழந்தைகளை காட்டுகிறார்கள். இப்படி படம்முழுக்க பல குட்டிக்குட்டி கதைகளை தொகுத்து வழங்கிய மாதிரி இருக்கிறது. இருந்தாலும் படத்தில் ஒரு ரிதம் இருப்பதுஎன்னவோ உண்மை. இதனால் ரசிக்க முடிகிறது.

    தரையில் காலே படாமல் பறந்து...பறந்து எதிரிகளை (நம்மையும்) அடித்து விரட்டும் படங்களுக்கு இடையே ஒரு மெல்லிய,மெச்சூர் காதல் கதை. தைரியமாய் பார்க்கலாம்.

    Read more about: rhythm a musical love story
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X