twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Rocketry Review: நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? ராக்கெட்ரி விமர்சனம்!

    |

    Rating:
    4.0/5

    நடிகர்கள்: மாதவன், சிம்ரன்

    இசை: சாம் சி.எஸ்

    இயக்கம்: மாதவன்

    சென்னை: அப்துல் கலாமை விட சிறந்த விஞ்ஞானியாக தேசமே கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய நம்பி நாராயணனை தேச துரோகியாக மாற்றி சிறையில் அடைத்த கொடுமைகளையும், நம் இந்திய தேசத்தின் விண்வெளி வளர்ச்சிக்காக 'விகாஸ்' என்ஜினை கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானிக்கு தேசம் கொடுத்த விலையையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குநர் மாதவன்.

    முதல் படத்திற்கே இப்படியொரு ரிஸ்க்கான கதையை எடுத்துக் கொண்டு அதில் நம்பி நாராயணனாகவே தானும் வாழ்ந்து இருக்கிறார் மாதவன்.

    கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல், ஒரு ப்யூர் பயோபிக்கை கொடுத்தே ரசிகர்களை கவர்ந்திழுக்க முடியும் என்பதை சாதித்து காட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வாருங்கள் ராக்கெட்ரி படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

    விக்ரமில் ரோலக்ஸ்...அப்போ ராக்கெட்ரி படத்தில்...சூர்யாவின் ரோல் இது தான் விக்ரமில் ரோலக்ஸ்...அப்போ ராக்கெட்ரி படத்தில்...சூர்யாவின் ரோல் இது தான்

    என்ன கதை

    என்ன கதை

    பெரிய சம்பளத்துக்கு நாசா இவரை வேலைக்கு அழைக்க தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று இஸ்ரோவில் வேலை பார்க்கிறார் நம்பி நாராயணன் (மாதவன்). விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்ட வேண்டிய ஆர்வத்தில் இருக்கும் நேரத்தில் இவரது உழைப்பு அளப்பறியதாக பார்க்கப்படுகிறது. திடவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள் (liquid fuel) கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று சாதித்துக் காட்டிய விஞ்ஞானி, ஒரு கட்டத்தில் விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக்காக கண்டுபிடிக்கிறார். நாடே அவரை கொண்டாட வேண்டிய நிலையில், அதிரடியாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்படும் அவர் அதிலிருந்து எப்படி சுய போராட்டம் நடத்தி மீண்டார் என்பது தான் ராக்கெட்ரி படத்தின் கதை.

    நம்பி நாராயணனாக வாழ்ந்த மாதவன்

    நம்பி நாராயணனாக வாழ்ந்த மாதவன்

    ஹீரோவாகவும் இயக்குநராகவும் இரண்டு குதிரையில் சவாரி செய்தாலும் இரண்டையும் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் மாதவன். குறைந்த செலவில் ராக்கெட் என்ஜினை செய்ய வேண்டும் என்கிற சூழலில் தனது விஞ்ஞானிகள் குழுவை பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே உள்ள ராக்கெட் என்ஜின் தொழில் நுட்பத்தை அந்நாட்டவர்க்கே தெரியாமல் கற்றுக் கொண்டு வரும் காட்சிகளில் எல்லாம் மாதவனுக்கு பதிலாக திரையில் இளம் வயது நம்பி நாராயணன் தான் தெரிகிறார்.

    தேச துரோக குற்றம்

    தேச துரோக குற்றம்

    கிரியோஜெனிக் எஞ்சின் பக்கம் மாதவன் திரும்பும் நிலையில், அந்த ஆற்றல் மட்டும் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் ஏவுகணை செய்து இந்தியா வல்லரசு நாடாகி விடும் என்கிற அச்சத்தால், அமெரிக்கா அதற்கான உதவிகளை செய்யக் கூடாது என ரஷ்யாவுக்கு உத்தரவு போடுகிறது. ஆனாலும், ரஷ்ய விஞ்ஞானிகளிடம் பல கோடி மதிப்புள்ள அந்த விஷயத்தை இலவசமாகவே பேசி வாங்குகிறார் நம்பி நாராயணன். ஆனால், அதை இந்தியாவுக்கு நேரடியாக எடுத்து வர முடியாத சூழலில் பல பாகங்களாக பிரித்து கொண்டு வருகிறார். அதன் சில பாகங்கள் பாகிஸ்தான் கராச்சி வழியில் இருந்து வரும் நிலையில், இவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இவருக்கு எதிராக மரியம் எனும் பெண் தேச துரோக வழக்கை பதிவு செய்ய போலீசார் இவரை கைது செய்து 3ம் டிகிரி ட்ரீட்மெண்ட்டை கொடுக்கும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை தியேட்டரில் நிச்சயம் கண் கலங்க வைத்து விடும்.

    நம்பி நாராயணனும் நடித்திருக்கிறார்

    நம்பி நாராயணனும் நடித்திருக்கிறார்

    சூர்யாவின் பேட்டி மூலம் தான் ஒட்டுமொத்த தனது வாழ்க்கையின் கதையையும் நம்பி நாராயணன் சொல்வது போல இந்த படம் உருவாகி உள்ளது. நம்பி நாராயணனின் கதையைக் கேட்டு அவர் முன் மண்டிப் போட்டு இந்திய தேசத்தின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என சூர்யா பேசும் இடம் அருமை. 83 படத்தில் ரன்வீர் சிங் சிக்ஸர் அடிக்கும் காட்சியில் அந்த பந்தை ரியல் கபில் தேவ் கேட்ச் பிடிப்பது போல ஒரு காட்சி இருக்கும். அதே போல, கிளைமேக்ஸில் ரியல் நம்பி நாராயணனை அழகாக கொண்டு வந்து பொருத்தியிருப்பார் இயக்குநர் மாதவன்.

    பிளஸ்

    பிளஸ்

    மாதவனின் இயக்கம், மாதவனின் நடிப்பு, மாதவனின் வசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக உள்ளது. ஒரு நாயை கொல்ல நினைத்தால் அதற்கு வெறிநாய் என பெயர் வைத்தாலே போதும் என்றும் ஒரு மனிதனை கொல்ல தேசதுரோகி பட்டம் போதும் என பேசும் வசனம், 30 ஆண்டுகால சட்டப் போரட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றம் நிரபராதி என நம்பி நாராயணனை விடுவித்த நிலையில், படம் முழுக்கவே சூர்யா பேட்டி எடுக்க இவர் தனது கதையை சொல்லும் விதமாகவே அமைந்திருக்கும். நான் குற்றவாளி இல்லைன்னா அப்போ யார் குற்றவாளி எனக் கேட்கும் இடம் எல்லாம் நம் நாட்டில் அடுத்தவனின் வளர்ச்சி பிடிக்காமல் அவனை வீழ்த்தி விட வேண்டும் என நினைக்கும் கொடூரமான மனங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்வியாகவே அமைந்திருக்கும். சாம் சி.எஸ். இசை, பீரியட் பிலிம் என்பதால் ஆர்ட் டிபார்ட்மென்ட். சிபிஐ அதிகாரியாக வரும் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், இளம் வயது அப்துல் கலாம் காட்சிகள் என படத்தில் பல பிளஸ்கள் உள்ளன.

    மைனஸ்

    கமர்ஷியல் மசாலா காட்சிகள் விரும்பும் ஆடியன்ஸை எந்த அளவுக்கு இந்த படம் ஈர்க்கும் என்பது தெரியவில்லை. அதே போல, படத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட் சயின்ஸ் சாதாரண ஆடியன்ஸுக்கு எந்தளவுக்கு கனெக்ட் ஆகும்னு தெரியல.. காலேஜ் கட் அடித்து வந்தாலும், இங்கே பிசிக்ஸ் கிளாஸ் எடுக்கிறாங்களே என மாணவர்கள் கத்துவதும் கேட்கத்தான் செய்கிறது. குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மாதவன் அடிக்கும் ஒரு தேவையில்லாத ஏ ஜோக், பஞ்சாங்கம் பற்றி பேசியதை சமீபத்தில் கிளம்பிய சர்ச்சை காரணமாக ம்யூட் செய்தது போன்ற சில மைனஸ்களும் இருந்தாலும், நிச்சயம் மாதவனின் ஒவ்வொரு ஃபிரேம் உழைப்புக்காகவும், நம்பி நாராயணன் எனும் மாபெரும் விஞ்ஞானி தன் வாழ்க்கையையே தொலைத்தது எப்படி என்பதை உணர்ச்சி பூர்வமாக எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் சொல்லியதற்காகவும் நிச்சயம் தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய படம் தான் இந்த ராக்கெட்ரி நம்பி விளைவு!

    English summary
    Rocketry Review in Tamil(ராக்கெட்ரி விமர்சனம்): Madhavan pays pure tribute to Great Scientist Nambi Narayanan and he explore how he makes India proud and what India did to him in this biopic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X