Sengalam Web series review : ‘செங்களம்’ ஓடிடி தொடர் விமர்சனம்: ஜெயலலிதா, சசிகலா அரசியலை பேசுகிறதா?
நடிகர்கள் : வாணி போஜன், கலையரசன்
இயக்குனர் : எஸ்.ஆர்.பிரபாகரன்
ஓடிடி: ஜி5
Sengalam Web Series Review ('செங்களம்' வெப் சீரிஸ் விமர்சனம்): எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் அதிரடி அரசியல், திரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், பவன், பிரேம், கஜராஜ், மற்றும் பூஜா வைத்தியநாதன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் ஜீ5 தளத்தில் கடந்த வாரம் வெளியானது. இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
செங்களம் வெப் தொடர்
செங்களம் இணையத் தொடர் வெளியானதில் இருந்தே இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். கடந்த வாரம் இந்த வெப் சீரில் வெளியானதை அடுத்து, இந்த வெப் தொடரின் முன்னோட்டத்தை பார்த்தோம் தற்போது இந்த தொடரின் முழு விமர்சனத்தையும் அலசி ஆராய்ந்து பார்க்கலாம்.
செங்களம் கொலைக்களம்
ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே இரண்டு வெவ்வேறு கதைக்களத்தை கொண்ட கதையாகத்தான் தொடங்குகிறது. ஒரு புறம் மூன்று கொலைகளை செய்துவிட்டு, காட்டில் மறைந்து வாழும் மூன்று அண்ணன் தம்பிகள். இவர்கள் எதற்காக கொலை செய்தார்கள்? கொலைக்கான காரணம் என்ன என்ற பல விதமான கேள்விகளுடன் முதல் எபிசோடு முடிகிறது.
குடும்ப அரசியல்
விருதுநகர் நகராட்சி சேர்மன் பதவி எங்கள் குடும்ப சொத்து, நாங்கள் குடும்ப அரசியல் தான் பண்ணுவோம் என்று கிட்டத்தட்ட 40 வருஷமாக அந்த கிராமத்தையை தனது கைக்குள் வைத்திருக்கிறது சிவஞானத்தின் குடும்பம். சிவஞானத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவருடைய மூத்த மகன் ராஜமணிக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக சேர்மனாக இருந்து வருகிறார். ஆளும் கட்சி, எதிர்கட்சி என இந்த கட்சியினரிடமும் விருதுநகர் சேர்மன் பதவி சென்றுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து பல ராஜதந்திர வேலைகளை செய்து வருகிறார் சிவஞானம்.
சேர்மன் பதவி குடும்ப சொத்தா?
இந்த குடும்பத்தின் சொத்தாக இருக்கும் சேர்மன் பதவியை பறிக்க பல சதிகள் நடக்கும் இந்த நேரத்தில், ராஜமாணிக்கத்தின் மூத்த மனைவி இறந்து விட , திருமணமே செய்யாமல் பல ஆண்டுகளான தனிமரமாக வாழ்ந்து வந்த ராஜமாணிக்கத்திற்கு பணக்கார தொழிலதிபரின் மகளான சூர்யகலாவை (வாணி போஜன்) திருமணம் செய்து வைக்கிறார் சிவஞானம்.
எதிர்பாராத திருப்பங்கள்
சம்மந்தமே இல்லாத இந்த இரண்டு கதைகளும் ஒரு மையப்புள்ளியில் இணையும் போது, அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராதாக திருப்பங்கள் தான் இந்த வெப் தொடரின் மொத்தக்கதையாகும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து தற்போது நிகழும் அரசியல் நிலவரம் வரை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
ஜெயலலிதா, சசிகலாவை நினைவுபடுத்துகிறது
இந்த தொடரில் இயக்குநர் சித்தரித்த ஒரு சில கதாபாத்திரங்கள் உண்மையான சிலரை நினைவுபடுத்துகிறது. இதில், லீட் ரோலில் சூர்யகலாவாக நடித்திருக்கும் வாணி போஜன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவது போலவும், அவருடைய தோழியான நாச்சியார் உடன் பிறவா சகோதரி சசிகலாவை நினைவுப்படுத்தும் விதமாகவும் உள்ளது.
கலையரசன் அட்டகாசமான நடிப்பு
வாணியின் தோழியாக நடித்திருக்கும் நாச்சியார் (ஷாலி நிவேகாஸ்) செய்யும் அரசியல் தகிடுதத்தங்கள், அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல. தொடரை பார்ப்பவர்களைக்கூட கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது. நாச்சியாரின் அண்ணாக நடித்திருக்கம் கலையரசன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.வழக்கமாக ஹீரோவோவுக்கு அடியாளாக வரும் கலையரசன்,இந்த தொடரில் முறுக்கு மீசை, தாடி, மடித்து கட்டிய வேட்டி என பட்டையை கிளப்பி உள்ளார்.
எபிசோடுக்கு எபிசோடு சுவாரஸ்யம்
இத்தொடரில் வரும், பவன், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன், ஷாலி நிவேகாஷ், முத்துக்குமார், கஜராஜ், பிரேம், பூஜா வைத்தியநாதன், அர்ஜை என அனைத்து நடிகர்களும் அவரவர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்கள். மேலும், விருதுநகரின் அழகு, காடு, மலை, கரிசல்காடு என அனைத்தையும் அழகாக காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். தமிழகத்தில் மறைந்த, தற்போது உயிருடன் இருக்கும் முக்கிய அரசியல் புள்ளிகளை நினைவுப்படுத்தி உள்ள இந்த தொடர் எபிசோடுக்கு எபிசோடு சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளது. செங்களம் அரசியல் களத்தின் உண்மையானக்களம்.


Click it and Unblock the Notifications











