Shaakuntalam Review: சமந்தா மட்டும் அழகா இருந்தா போதுமா? சாகுந்தலம் விமர்சனம் இதோ!
நடிகர்கள்: சமந்தா, தேவ் மோகன்
இசை: மணிஷர்மா
இயக்கம்: குணசேகரன்
சென்னை: இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் புராண கால கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள சாகுந்தலம் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.
பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர் பார்த்ததுமே கிளம்பிய ட்ரோல்கள் போலவே சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது இதுக்கு டிவியில் போடும் மகாபாரதமே நல்லா இருக்குமே என ரசிகர்கள் கலாய்த்து இருந்தனர்.

சகுந்தலா மற்றும் துஷ்யந்தனின் காதல் காவியத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பெரிய எதிரியாக எது மாறி உள்ளது. படம் பார்க்கும் படி உள்ளதா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சாகுந்தலம் கதை: விஸ்வாமித்ரருக்கும் மேனகைக்கும் பிறந்த பெண் குழந்தையை மேனகை ஒரு காட்டில் விட்டு விடுகிறார். அந்த குழந்தை ஒரு ரிஷியில் ஆஸ்ரமத்தில் இயற்கை மற்றும் வன விலங்குகளுடன் வளர்கிறாள். அந்த குழந்தை தான் சகுந்தலா. ஒருநாள் அந்த காட்டுக்கு வேட்டையாட வரும் ராஜா துஷ்யந்தன் சகுந்தாலவை பார்த்த நொடியிலேயே காதல் கொள்கிறான்.

சகுந்தலாவுக்கும் துஷ்யந்தனை பிடித்துப் போக இருவரும் இயற்கையை சாட்சியாக வைத்து கந்தர்வ திருமணம் செய்து விடுகின்றனர். சகுந்தலாவை விட்டு நாட்டுக்கு திரும்பவேண்டிய சூழலில் நிச்சயம் திரும்பி வந்து உன்னை என் நாட்டுக்கு ராணியாக அழைத்துச் செல்வேன் என துஷ்யந்தன் வாக்கு கொடுத்து விட்டு சகுந்தலாவை பிரிகிறான்.
ஆனால், அவன் திரும்பி வரவே இல்லை. ஒருநாள் ஆசிரமத்தில் உள்ள ரிஷியை காண வரும் கோப முனி துர்வாசகர் சகுந்தலாவிடம் ரிஷி இருக்கிறாரா என கேட்க? அவளோ துஷ்யந்தன் நினைவில் மூழ்கி கிடக்க, கோபத்தின் உச்சிக்கு செல்லும் துர்வாசகர் பிடி சாபம் என உன் நினைவே துஷ்யந்தனுக்கு இனி இருக்காது என சபித்து விடுகிறார்.

காதல் காரணமாக கர்ப்பமான சகுந்தலா தன்னை வளர்த்து வரும் ரிஷியிடம் விவரத்தை சொல்ல, சகுந்தலாவை பற்றிய நினைவுகளை இழந்த துஷ்யந்தன் அவளது காதலை ஏற்றாரா? இல்லையா என்பது தான் சகுந்தலா படத்தின் கதை. ஏகப்பட்ட படங்கள் இதே புராணக் கதையை வைத்து வந்திருக்கின்றன. சில டிவி தொடர்களும் பல்வேறு மொழிகளில் வந்துள்ள நிலையில், அதனை இந்த கால ரசிகர்களுக்கு புரியும் வகையில் குணசேகரன் படமாக கொடுத்துள்ளார்.
பிளஸ்: நடிகை சமந்தா நோய் பாதிப்பு பிரச்சனையில் சிக்கும் முன்னதாக இந்த படத்தில் நடித்திருந்தார். சமந்தா ஸ்க்ரீனில் அழகு பதுமையாக இருக்கிறார். சமந்தா மட்டுமே இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரே ஆருதலாக இருக்கிறார். கலை இயக்குநரின் பணிகள் சில இடங்களில் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. துஷ்யந்தனாக நடித்துள்ள தேவ் மோகனின் நடிப்பும் சிறப்பு. பிரகாஷ் ராஜ், கெளதமி, மது உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
மைனஸ்: சகுந்தலம் படத்திற்கு பெரிய பலவீனமாக மாறியதே அந்த படத்தின் சிஜி காட்சிகள் தான். குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சேனலில் வரும் அனிமேஷனே இதை விட பரவாயில்லையாக இருக்கும் போல, அதை விட மிகவும் சொதப்பலான VFX காட்சிகள் மற்றும் முதல் பாதி முழுவதும் ஆமை வேகத்தில் நகர்வது ரசிகர்களின் பொறுமையை தியேட்டரில் ரொம்பவே சோதிக்கிறது. சமந்தாவின் அழகுக்காகவும் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











