"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா?"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்
ஒரு திருநங்கையின் உணர்வுகளை கொடூர சம்பவத்தின் மூலம் சொல்லும் படம் சிகை.
Recommended Video

சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கர் பிரசாத். மற்ற புரோக்கர்களை போல் இல்லாமல், தனக்காக வேலை செய்யும் பெண்கள் மீது பரிவு கொண்டிருப்பவன்.
ஒருநாள் இரவு புதிய கஸ்டமர் சந்தோஷ் என்பவனிடம் இருந்து பிரசாத்துக்கு அழைப்பு வருகிறது. அவனுக்காக தனது நண்பன் சிஜு மூலம் நிம்மி எனும் பெண்ணை சந்தோஷின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான் பிரசாத்.

ஆனால் அந்த பெண் விடிந்தும் வீடு திரும்பாததால், அவளை தேடி சந்தோஷ் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சந்தோஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக தரையில் கிடக்கிறான். அவனை கொன்றது யார்? காணாமல் போன நிம்மி எங்கே என்ற கேள்விக்கு த்ரில்லிங்காக விடை தேடுகிறது சிகை.
முதல் படத்திலேயே பாலியல் வேறுபாடு குறித்து பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. எடுத்துக்கொண்ட கதைக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். சென்னையில் பாலியல் தொழில் எப்படி நடக்கிறது என்பதை உண்மைக்கு பக்கத்தில் இருந்து காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
வழக்கமான நாயகன், நாயகி கதையாக இல்லாமல், படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு கதை சொல்கிறது. கேடுகெட்ட மனித மனத்தின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது சிகை.
அதேபோல் ஒரு திருநங்கையின் மனதை, உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. அதேநேரத்தில், இந்த படத்தை மிகுந்த ஆபாசம் இல்லாமல் எடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

படத்தின் முக்கியப்பாத்திரம் கதிருக்கு. தனது கடமையை உணர்ந்து நடித்திருக்கிறார். பரியேறும் பெருமாளாக வாழ்ந்த கதிர், இந்த படத்தில் ஒரு திருநங்கையின் மனதை பிறருக்கு உணர்த்த முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 'பீலிங் என்றால் செக்ஸ் தானா' என்று அவர் கேட்கும் அந்த இடம், மூன்றாம் பாலினத்தவர்களின் மனதைப் படிக்க உதவுகிறது.
படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ராஜ்பரத்தினுடையது. ரொம்ப நல்லவனாகவும் இல்லாமல் கெட்டவனாகவும் இல்லாமல், மையத்தில் நின்று ஊசலாடும் தனது பாத்திரத்தை யதார்த்தமாக செய்திருக்கிறார். தனக்காகச் சென்ற ஒரு பெண்ணுக்காக அவர் காட்டும் பரிவும், தேடலும் பாராட்டுக்குரியது.
இவர்களைத் தவிர பாலியல் தொழிலாளியாக நடித்துள்ள ரித்விகா, மீரா நாயர் ஆகியோர் இருவேறு விதமான பெண்களின் மனநிலைகளை கண்முன் நிறுத்துகிறார்கள். குடும்ப சூழல் காரணமாக பாலியல் தொழிலுக்கு வரும் மீரா, கதிர் யாரெனத் தெரிந்து சீண்டும் இடத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கால் டாக்சி டிரைவராக வந்து கலகலப்பூட்டும் மயில்சாமி, படம் நெடுக மயிலிரகாய் சாமரம் வீசுகிறார். சிஜு கதாபாத்திரத்தில் நடிதிருக்கும் ராஜேஷ் சர்மாவும் அப்ளாஸ் அள்ளுகிறார். சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மால் முருகா உட்பட அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரான் ஈத்தன் யோகன் இசையில் க்ளைமாக்ஸ் மிக அற்புதம். ஆனால் பின்னணியில் இன்னும் டெம்போ கூட்டியிருந்தால் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துக்கு தேவையான உணர்வு ஏற்பட்டிருக்கும். அதேபோல் பின்னணி இசையின் ஒலிக்கலவையும் சரியாக இல்லாததால், பல இடங்களில் இரைச்சலாக இருக்கிறது.
நவீன் குமாரின் ஒளிப்பதிவில், சென்னை இரவின் நிசப்தமும், காலை பரபரப்பின் பேரிரைச்சலும் கண்முன் நிற்கின்றன. ஒருசில இடங்களில் வாவ் சொல்ல வைத்திருக்கிறார். அதுபோல் எடிட்டர் அனுச்சரனும் தனது பங்கை சரியாக செய்திருக்கிறார்.
பாலின வேறுபாடு பற்றி தான் படம் பேசுகிறது. ஆனால் அதனை கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே காட்சிபடுத்தி இருப்பதால், அந்த விஷயம் சரியாக மனதில் பதியவில்லை. அதேபோல், கதிர் கதாபாத்திரம் இடைவேளை வரை காண்பிக்கப்படாததால், கதையை எளிதாக யூகிக்க முடிகிறது.

தனிமனித உணர்வு என்பது எல்லோருக்கும் சமமானது. அது திருநங்கைகளுக்கும் பொதுவானது என்பது படத்தின் பேசு பொருள். இன்னும் திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டி இதனை சொல்லியிருந்தால் இந்த 'சிகை'யை இன்னும் சிறப்பாக அலங்கரித்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications











