Sirai Review: சிறை விமர்சனம்.. விக்ரம் பிரபுவுக்கு சிறப்பான சம்பவமா?.. எல்.கே. அக்ஷய் அறிமுகம் எப்படி?
சென்னை: டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் எழுதிய கதையை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் சிறை. டிசம்பர் 25ம் தேதியான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விக்ரம் பிரபுவின் 25வது படம் வெளியாகிறது.
டாணாக்காரன் படத்திலேயே காவல்துறையில் நடக்கும் நுட்பங்களை தோலுரித்துக் காட்டிய தமிழ் இந்த படத்திலும் சிறை கைதிகளின் உளவியல், வாழ்க்கை, போலீஸ்காரர்களின் போராட்டம், சவால், அடக்குமுறை என அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்துள்ளார்.

டாணாக்காரன் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்புக்கு சரியான தீனியாக இந்த படம் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமார் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் கவரும். சிறை படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சிறை கதை: இந்த ஆண்டு இந்தியில் வெளியாகி ஆஸ்கர் வரை சென்ற ஹோம்பவுண்ட் படத்தை போலவே இங்கேயும் மத அரசியலை முன்னிறுத்தி படத்தின் கதையை உருவாக்கி உள்ளனர். கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதி அப்துல் ரஃபை (எல்.கே. அக்ஷய் குமார்) வேலூரில் இருந்து சிவகங்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அவரை அழைத்துச் செல்லும் லாங் எஸ்கார்ட் கான்ஸ்டபிள் கதிரவன் (விக்ரம் பிரபு) போகும் வழியில் சந்திக்கும் சவால்களும் ட்விஸ்ட்களும் தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாக பராசக்தி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக விக்ரம் பிரபுவின் 25வது படமான சிறை இந்த ஆண்டு இறுதியில் வெளியாகி உள்ளது. டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு போட்ட கடுமையான உழைப்பை விட கூடுதல் உழைப்பை இந்த படத்திற்காக விக்ரம் பிரபு போட்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கடைசியாக வெளியான அவரது லவ் மேரேஜ் படமெல்லாம் அவருக்கான படமே இல்லை பாஸ். இதுபோல ஒரிஜினல் ஸ்டோரிக்காகவே உருவாக்கப்பட்ட ஒரிஜினல் பீஸ் நீங்க என ரசிகர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் ஜாலியான ஹீரோவாகவும் நடிகைகளின் டூயட், ஆக்ஷன் என மசாலா படத்தில் அறிமுகம் ஆகாமல், நல்ல கதை மட்டுமே நம்மை நடிகனாக அங்கீகரிக்கும் என நினைத்து இந்த படத்தை தேர்வு செய்த இடத்திலேயே வெற்றிப் பெற்றுவிட்டார். முக பாவனைகள், உணர்ச்சிகள், மதத்தின் அடையாளம் காரணமாக அனுபவிக்கும் கொடுமைகள் என அவரது நடிப்பில் அத்தனை வலிகளையும் முதல் படத்திலேயே கடத்தியுள்ளார். விக்ரம் பிரபுவிடம் கை விலங்கை அவிழ்க்கச் சொல்வது, அவர் பாத்ரூமுக்குச் சென்ற நேரத்தில் மற்ற 2 கான்ஸ்டபிளை ஏமாற்றிவிட்டு ஆயுதத்துடன் எஸ்கேப் ஆக படம் சூடு பிடிக்கிறது.
அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவாக இருப்பார் என தெரிகிறது. AR என அழைக்கப்படும் ஆயுதப்படையில் உள்ள ஏகப்பட்ட விஷயங்களை திரையில் கொண்டு வந்து நிறுத்தி இயக்குநர் கிளாப்ஸ் அள்ளுகிறார். அதற்கு தமிழின் கதையும் பெரிய பங்காற்றியுள்ளது. தப்பித்துப்போன கைதியை விக்ரம் பிரபு பிடித்தாரா? அக்ஷய் குமார் வாழ்க்கை என்ன ஆகிறது? அவர் செய்த குற்றம் என்ன? அவர் தப்பிக்கிறாரா? இல்லையா? என ஏகப்பட்ட கோணங்களில் படம் பயணித்து கிளைமேக்ஸ் ட்விஸ்ட் உடன் ரசிக்க வைக்கிறது.

பிளஸ்: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்டு வெளியான படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில், சிறை படமும் தனக்கான இடத்தை பிடிக்கும். விக்ரம் பிரபு, அக்ஷய் குமாரின் நடிப்பு அசத்தல். மூணார் ரமேஷ் கதாபாத்திரம் இந்த படத்திற்கு பலமாக மாறியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரின்பின்னணி இசை மற்றும் பிலோமின் ராஜின் கட்ஸ் கைகொடுத்துள்ளது. கைதி படத்தை போல பரபரப்பாக படத்தின் ஒளிப்பதிவை அமைத்துள்ளார் மாதேஷ் மாணிக்கம்.
மைனஸ்: அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்மா இடையே நடைபெறும் காதல் போர்ஷன் கொஞ்சம் போரடிக்கும் விதமாகவும் வழக்கமாக பல படங்களில் பார்த்த விஷயமாகவும் மாறிவிடுகிறது. மைனா படத்தின் சாயலை பல இடங்களில் இந்த படம் ஞாபகப்படுத்துவது சிறு குறையாக இருந்தாலும், படத்தில் இடம்பெற்றுள்ள சிறை போர்ஷன், கோர்ட் சீன் எல்லாம் தரமாகவே உள்ளது. கண்டிப்பாக இந்த வாரம் தியேட்டருக்குச் சென்று பார்க்கக் கூடிய நல்ல படமாக சிறை 'சிறப்பான சம்பவமாக' இருக்கும்.


Click it and Unblock the Notifications











