Garudan Review: கருடன் விமர்சனம்.. சொல்லி அடித்த சூரி.. சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பு எப்படி?
நடிகர்கள்: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன்
இசை: யுவன் சங்கர் ராஜா
நேரம்: 2 மணி நேரம் 14 நிமிடங்கள்
இயக்கம்: துரை செந்தில்குமார்
சென்னை: நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார். தனது முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்த சூரி இன்று வெளியாகி உள்ள கருடன் படத்தில் நடிப்பு அசுரனாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் என இதுவரை துரை செந்தில்குமார் இயக்கிய எந்தவொரு படத்திலும் மேக்கிங்கில் குறை வைக்கவில்லை. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான துரை செந்தில்குமார் சூரியை வைத்து சூப்பரான கிராமத்து கதையை பக்காவாக கமர்ஷியல் கலந்து ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

சூரி, சசி குமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், ரேவதி ஷர்மா, ஆர்.வி. உதயகுமார், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் திரைப்படம் வானில் உயர பறந்ததா? இல்லையா? என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
கருடன் கதை: ஆதியாக இந்த படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். அவருடைய உயிர் நண்பராக கர்ணா கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மிரட்டியுள்ளார். எந்தவொரு நாதியும் இல்லாத நபராக வரும் சொக்கனுக்கு அடைக்கலம் கொடுத்து சிறு வயதில் இருந்தே அவரை வளர்த்து வருகிறார் கர்ணா. அவருக்கு எப்போதுமே நன்றியுள்ள நாய் போல விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைத்து வாழ்ந்து வரும் சூரி ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்து செய்யும் சம்பவம் தான் இந்த கருடன் படத்தின் கதை. ஆதி மற்றும் கர்ணா இருவரும் செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் நிலையில், தங்களுக்கு சொந்தமான கோயில் இடங்களையும் பாதுகாத்து வருகின்றனர். அமைச்சராக வரும் சின்னக் கவுண்டர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரகனியை வைத்து கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்க ஆதி, கர்ணா மற்றும் சொக்கன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கிறார் துரை செந்தில்குமார்.

சொல்லி அடித்த சூரி: காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறினாலும் தொடர்ந்து காமெடி செய்தே ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றனர். வடிவேலு, சந்தானம், யோகி பாபு ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளன. ஆனால், ஹீரோவாக மாறினால் ஹீரோ தான் என கதையின் நாயகனாக விடுதலை படத்தில் மாறிய சூரி தனக்குள் ஒளிந்திருந்த நடிகனை ஒட்டுமொத்தமாக வெளியே கொண்டு வந்து விட்டார். சொக்கன் கதாபாத்திரத்தை சொன்னதே சூரி தான் என துரை செந்தில்குமார் சமீபத்தில் ரிவீல் செய்த நிலையில், அந்த கதாபாத்திரம் சூரிக்கான டெய்லர் மேட் ரோல் என்று தான் சொல்ல வேண்டும். விசுவாசமிக்க நபராக முதல் பாதி முழுக்க அடக்கி வாசித்து வரும் சூரி இடைவேளை காட்சியில் ரைஸ் ஆக ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸ் போர்ஷனில் தனது நடிப்பால் தூள் கிளப்பி விட்டார்.
நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்: சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவரை விட சூப்பரான பல நடிகர்களை போட்டால் அவர் காணாமல் போய் விடுவாரே என்கிற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இயக்குநர் துரை செந்தில்குமாரின் நட்சத்திர தேர்வு இந்த படத்துக்கு பெரும் பலமாகவும் சூரிக்கு அடுத்த வெற்றிப் படத்தை கொடுக்கவும் உதவியிருக்கிறது. ஆதி கதாபாத்திரத்தில் சசிகுமார் அப்ளாஸ் அள்ளுகிறார். கர்ணாவாக நடித்துள்ள உன்னி முகுந்தன் சேஞ்ச் ஓவர் செய்து நடித்துள்ள நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அரசியல் அழுத்தம் காரணமாக கெட்டவனாக மாறும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சமுத்திரகனி சிறப்பு. ஆர்.வி. உதயகுமார் அரசியல்வாதியாக தூள் கிளப்பியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் ஷிவதாவின் நடிப்பு கருடன் படத்திலேயே சிக்சர் காட்சி என்று சொல்லலாம். ரோஷினி, ஹீரோயினாக நடித்துள்ள ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்துள்ளனர்.

பிளஸ்: யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. பஞ்சவர்ண கிளி பாடல் கேட்க இனிமையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் படத்துக்கு தேவையான கேமரா ஒர்க்கையும் சூரி எலிவேஷன் ஆகும் இடங்களை சரியாக ரசிகர்களுக்கு கடத்தியும் உள்ளார். துரை செந்தில்குமார் மேக்கிங் மற்றும் நடிகர்களின் தேர்வு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. நட்பு, துரோகம், மோசடி, பழிவாங்கல், அரசியல் என அனைத்து விஷயங்களையும் அழகாக அடுக்கியது சூப்பர். ஆரம்பத்தில் சசிகுமார், அடுத்து உன்னி முகுந்தன், இடைவேளைக்கு பிறகு சூரியின் எழுச்சி என அனைவருக்கும் நடிக்க ஸ்பேஸ் கொடுத்தது பெரிய பிளஸ்.
மைனஸ்: ஆரம்பத்தில் படம் சற்று தொய்வாக நகர்கிறது. தென்காசிப்பட்டினம் படத்தை பார்த்த ஃபீலிங் ஆங்காங்கே வந்து போகிறது. சூரியை தவிர்த்த மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் இன்னமும் வலுவாக எழுதியிருக்கலாம். ஆனால், படம் பார்க்கும் போது இதெல்லாம் பெரிய குறைகளாக தெரியாதது படத்தை தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம் என சொல்ல வைக்கிறது. அரண்மனை 4 போல இந்த படமும் வசூல் வேட்டை நடத்துமா? என்பது ரசிகர்களின் கையில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











